ஹெல்மெட் போடாத ஆட்டோ டிரைவர்? 100 ரூபாய் ஃபைன் போட்ட திருச்சி போலீஸ்!

ஹெல்மெட் போடாத ஆட்டோ டிரைவர்?  100 ரூபாய் ஃபைன் போட்ட திருச்சி போலீஸ்!

திருச்சியில் சமீபகாலமாக போக்குவரத்து விதிமுறைகளை மீறுவோருக்கு காவல்துறையினர் சார்பில் வண்டி எண்ணை மட்டும் குறித்துக் கொண்டு ஆன்லைனில் அவருடைய தொலைபேசி எண்ணிற்கு அனுப்பி வைக்கின்றனர்.

Advertisement

இதனால் பெரும்பாலான மக்கள் மற்றும் டிரைவர்கள் தாங்கள் எந்த இடத்தில் தவறு செய்கிறோம் என்பதுகூட தெரியாமல் அவர்களுடைய தொலைபேசி எண்ணிற்கு ஃபைன் கட்டணம் மட்டும் மெசேஜாக செல்கிறது.

இந்நிலையில் வடிவேலு திரைப்பட பாணியில் ஆட்டோ டிரைவர் ஹெல்மட் அணிந்து செல்லும் நகைச்சுவை பிரபலம். அதே பாணியில் திருச்சி தில்லைநகர் போலீசார் ஆட்டோ டிரைவருக்கு ஹெல்மெட் அணியாததால் ஃபைன் போட்ட சம்பவம் ஆட்டோ டிரைவர்களுக்கு மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருச்சி கிராப்பட்டி பகுதியை சேர்ந்தவர் விஜயகுமார் (32). இவர் கடந்த பத்து வருடங்களுக்கும் மேலாக ஆட்டோ ஓட்டி வருகிறார். இந்நிலையில்தான் திருச்சியிலிருந்து தில்லைநகர் வழியாக பயணி ஒருவரை ஏற்றி கொண்டு கடந்த 6ம் தேதி செல்லும்போது பயணியை இறக்கிவிட்டு செல்போனை பார்த்த போது திருச்சி மாநகர காவல்துறையின் மெசேஜ் வந்துள்ளது. திறந்து பார்த்ததில் ஹெல்மட் போடாததற்கு பைன் 100 ரூபாய் விதித்ததால் ஆட்டோ டிரைவர் அதிர்ச்சி அடைந்துள்ளார்.

திருச்சி ஆட்டோ டிரைவருக்கு ஹெல்மெட் அணியாததால் பைன் விதிக்கப்பட்ட சம்பவம் ஆட்டோ டிரைவர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது சம்பந்தமாக ஆட்டோ டிரைவர்கள் இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வந்தனர். அப்போது அவர்கள் கூறுகையில்.... "திருச்சி மாநகராட்சி பகுதிகளில் ஆட்டோ டிரைவர்களுக்கு வாரம் 2 ஆயிரம் ரூபாய் அபராதம் அவர்களுக்கு தெரியாமலேயே வண்டி எண்ணை குறித்து வைத்து அனுப்பி விடுவதாலும், தங்களுடைய ஒரு நாளைய வருமானம் 150 ரூபாயில் இதில் 100 ரூபாய் அபராதம் விதிக்க வேண்டிய சூழ்நிலையில் இருப்பதால் எங்களுடைய குடும்பங்களை நாங்கள் எப்படி காப்பது எனவும், தற்போது ஆட்டோவில் ஹெல்மெட் அணிய வேண்டுமா? என்ற கோரிக்கையை முன்வைத்து மாவட்ட ஆட்சியரிடம் கேட்கப் போவதாக தெரிவிக்கின்றன.