மாவட்ட ஆட்சியர் முன்பு பெண் விவசாயியை தாக்க முயன்ற விவசாய சங்க தலைவர் அய்யாக்கண்ணு மீது 2 பிரிவின் கீழ் வழக்கு பதிவு

மாவட்ட ஆட்சியர் முன்பு பெண் விவசாயியை தாக்க முயன்ற விவசாய சங்க தலைவர் அய்யாக்கண்ணு மீது 2 பிரிவின் கீழ் வழக்கு பதிவு

திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சித் தலைவர் பிரதீப் குமார் தலைமையில் விவசாயிகள் குறைதீர்ப்பு நாள் கூட்டம் நேற்று (30.09.2022) நடைபெற்றது. இதில் தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாய சங்க தலைவர் அய்யாக்கண்ணு அனுமதிக்கப்பட்ட நேரத்தை விட கூடுதலாக பேசியதால் பெண் விவசாயி கவுசல்யா ஆட்சேபனம் தெரிவித்தார்.

இதனை தொடர்ந்து ஆட்சேபனம் தெரிவித்த பெண் விவசாயியை அய்யாகண்ணு மற்றும் அவரது ஆதரவாளர்கள் தகாத வார்த்தைகளால் திட்டியும், அடிக்க  முயன்றனர். இச்சம்பவம் மாவட்ட ஆட்சியர்க்கு முன்பு நடந்ததால் அப்போது பாதுகாப்பு பணியில் இருந்த காவல்துறையினர் (தமிழக விவசாயிகள் சங்க மகளிர் அணி தலைவி) விவசாய சங்க பெண் தலைவியை கூட்ட அரங்கில் இருந்து வெளியேற்றினர்.

மேலும் வாக்குவாதத்தில் ஈடுபட்டவர்களை அங்கிருந்தவர்கள் சமாதனப்படுத்தினர். அய்யாகண்ணு உள்ளிட்ட விவசாயிகள் தரக்குறைவாக ஆபாச வார்த்தைகளை பயன்படுத்தியதற்கு மற்ற விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் விவசாயிகள் குறைதீர் கூட்டம் பரபரப்புடன் காணப்பட்டது. 

இச்சம்பவம் குறித்து அமர்வு நீதிமன்ற காவல் நிலைய போலீசார் விசாரணை நடத்தினர். பின்னர் விவசாய சங்க பெண் நிர்வாகியை தகாத வார்த்தைகளாலும், தாக்க முயன்றதாக பாதிக்கப்பட்ட பெண் கொடுத்த புகாரின் அடிப்படையில் தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு சங்க மாநிலத் தலைவர் அய்யாக்கண்ணு மீது பெண்ணை ஆபாச வார்த்தைகளால் திட்டியது மற்றும் வன்கொடுமை தடுப்பு சட்டம் ஆகிய இரண்டு பிரிவின் கீழ் அமர்வு நீதிமன்ற காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய...   https://chat.whatsapp.com/DV3MG0TGN9x0CYy54GyO6a

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.co/nepIqeLanO