முகக் கவசம் அணியாமல் வேட்புமனுதாக்கல் செய்தவர்களை கண்காணித்து விதிமீறல் இருந்தால் நடவடிக்கை எடுக்கப்படும் - மாவட்ட தேர்தல் அதிகாரி பேட்டி

முகக் கவசம் அணியாமல் வேட்புமனுதாக்கல் செய்தவர்களை கண்காணித்து விதிமீறல் இருந்தால் நடவடிக்கை எடுக்கப்படும் - மாவட்ட தேர்தல் அதிகாரி பேட்டி

தமிழகத்தில் நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் வாக்களர்கள் வாக்களிப்பது நமது கடமை என்றும், வாக்களர்கள் அனைவரும் 100 சதவீதம் வாக்களியுங்கள் என்பதை வலியுறுத்தி திருச்சி கலெக்டர் அலுவலகத்தில் இருசக்கர வாகன விழிப்புணர்வு பேரணி இன்று நடந்தது. இப்பேரணியை தேர்தல் நடத்தும் அதிகாரியும், திருச்சி மாவட்ட தேர்தல் அதிகாரி சிவராசு கொடியசைத்து தொடங்கி வைத்தார். திருச்சி மேற்கு தேர்தல் நடத்தும் அலுவலர் விசுவநாதன் மற்றும் அதிகாரிகள் உள்பட  பலர் உள்ளனர்.

இந்த தேர்தல் விழிப்புணர்வு பேரணி கலெக்டர் அலுவலகத்தில் இருந்து துவங்கி பெரிய பிளகு பாறை, அரிஸ்டோ ரவுண்டானா, மத்திய பஸ் நிலையம், ஐயப்பன் கோவில் வழியாக புத்தூர் பிஷப் கல்லூரி சென்றடைந்தது. இப்பேரணியில் கல்லூரி மாணவ, மாணவிகள் பலர் கலந்து கொண்டனர்.

தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த திருச்சி மாவட்ட தேர்தல் அதிகாரியும் ஆட்சியருமான சிவராசு மாற்று திறனாளிகள் மற்றும் 80 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தபால் ஓட்டு தேர்தலில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள நிலையில், 71 ஆயிரம் பேர் அடையாளம் காணப்பட்டுள்ளது. இதுவரை தபால் வாக்குகள் செலுத்த 7,200 பேர் விண்ணப்பித்துள்ளனர். விண்ணப்பங்கள் பரிசீலனை செய்யப்பட்டு வீட்டுக்கு சென்று தபால் விண்ணப்பங்கள் கொடுக்கப்படும்.

கோவிட் தொற்று இரண்டாம் அலை வீசும் நிலையில், திருச்சி கல்லூரி மாணவர்கள் 15 பேருக்கு தொற்று பரவியுள்ளது. எனவே மக்கள் சமூக இடைவெளியை பின்பற்றவேண்டும், முக கவசம் அணிய வேண்டும். மக்கள் விழிப்புணர்வுடன் இருந்தால்தான்   தொற்றிலிருந்து பாதுகாக்க முடியும்.

அரசியல் கட்சியினர் மற்றும் அரசியல் பிரமுகர்கள் பிரச்சாரத்தின் போது கண்டிப்பாக முக கவசம் அணிய வேண்டும், நேற்றைய தினம் வேட்புமனு தாக்கல் செய்யும் பொழுது
வேட்பாளர்கள் முக கவசம் அணிந்து இருந்ததாகவும், வேட்பு மனு தாக்கல் செய்யும்போது மட்டும் கழற்றியதாகவும் தெரிவித்துள்ளனர் இது குறித்து கண்காணித்து விதிமீறல்கள் இருந்தால் நடவடிக்கை எடுக்கப்படும். தேர்தல் விதி மீறல் தொடர்பாக இதுவரை திருச்சி மாவட்டத்தில் 38 வழக்குகள் பதியப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய!
https://chat.whatsapp.com/GgA8w690Wqd7IwIEsO6ZZ5