மாநில இளைஞர் விருது பெற விண்ணப்பிக்கலாம் - மாவட்ட ஆட்சித்தலைவர் தகவல்

மாநில இளைஞர் விருது பெற விண்ணப்பிக்கலாம் - மாவட்ட ஆட்சித்தலைவர் தகவல்

சமுதாய வளர்ச்சிக்கு சேவையாற்றும் இளைஞர்களது பணியை அங்கீகரிக்கும் பொருட்டு, “முதலமைச்சர் மாநில இளைஞர் விருது” ஒவ்வொரு ஆண்டும் சுதந்திர தினத்தன்று 15 முதல் 35 வயது வரை உள்ள 3 ஆண்கள் மற்றும் 3 பெண்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது.

இந்த விருது ரூ.1,00,000/- ரொக்கம், பாராட்டுப் பத்திரம் மற்றும் பதக்கம் ஆகியவைகளை உள்ளடக்கியதாகும். அதன்படி, 2023-ஆம் ஆண்டிற்கான முதலமைச்சர் மாநில இளைஞர் விருது வருகின்ற (15.08.2023) அன்று நடைபெறும் சுதந்திர தின விழாவில் தமிழ்நாடு முதலமைச்சரால் வழங்கபடவுள்ளது. 

இவ்விருது தொடர்பாக கீழ்காணும் தகுதிகள் வரையறுக்கப்பட்டுள்ளன. 

1. 15 வயது முதல் 35 வயது வரை உள்ள ஆண் & பெண் ஆகியோர் விண்ணபிக்கலாம். கடந்த ஏப்ரல் (01.04.2022) அன்று 15 வயது நிரம்பியவராகவும், மார்ச் 31, 2023 (31.03.2023) அன்று 35 வயதுக்குள்ளாகவும் இருத்தல் வேண்டும்.

2. கடந்த நிதியாண்டில் (2022-2023) அதாவது (01.04.2022) முதல் (31.03.2023) வரை மேற்கொள்ளப்பட்ட சேவைகள் மட்டுமே கருத்தில் கொள்ளப்படும்.

3. விருதிற்கு விண்ணப்பிக்கும் முன்பு குறைந்த பட்சம் 5 வருடங்கள் தமிழகத்தில் குடியிருந்தவராக இருத்தல் வேண்டும். (சான்று இணைக்கப்பட வேண்டும்.)

4. விண்ணப்பதாரர்கள் சமுதாய நலனுக்காக தன்னார்வத்துடன் தொண்டாற்றியிருப்பவர்களாக இருத்தல் வேண்டும். அவ்வாறு அவர்கள் செய்த தொண்டு கண்டறியப்படக் கூடியதாகவும், அளவிடக் கூடியதாகவும் இருத்தல் வேண்டும்.

5. மத்திய / மாநில அரசுகள், பொதுத்துறை நிறுவனங்கள், பல்கலைக்கழகங்கள் / கல்லூரிகள் / பள்ளிகளில் பணியாற்றுபவர்கள் இவ்விருதிற்கு விண்ணப்பிக்க இயலாது.

6. விண்ணப்பதாரருக்கு உள்ளுர் மக்களிடம் உள்ள செல்வாக்கு விருதிற்கான பரிசீலனையில் கணக்கில் கொள்ளப்படும்.

7. இணையதளம் மூலம் விண்ணப்பிக்க கடைசி நாள் (31.05.2023) அன்று மாலை 4.00 மணி ஆகும். இதற்கான விண்ணப்பத்தினை தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய இணைய தளமான www.sdat.tn.gov.in (or) http://www.sdat.tn.gov.in -ல் ஆன்லைன் மூலம் மட்டுமே விண்ணப்பங்கள் சமர்ப்பித்தல் வேண்டும்.

மேலும் விவரங்களுக்கு மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர், அண்ணா விளையாட்டரங்கம், திருச்சிராப்பள்ளி, என்ற முகவரியில் உள்ள தொலைபேசி எண் 0431-2420685 தொடர்பு கொள்ளலாம் என திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆட்சித்தலைவர் மா.பிரதீப் குமார் தெரிவித்துள்ளார்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய.... https://chat.whatsapp.com/CVEI9HGZeZI6ualvRGNLGP

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvisionn