விதைக்கொள்கை குறித்த கலந்தாய்வு கூட்டம் - ஒன்றியம் தோறும் விதை கிராமம், மாவட்டம் தோறும் விதை குழு

விதைக்கொள்கை குறித்த கலந்தாய்வு கூட்டம் - ஒன்றியம் தோறும் விதை கிராமம், மாவட்டம் தோறும் விதை குழு

பாரதீய கிசான் சங்கம், தமிழ்நாடு விதை கொள்கை குறித்து கலந்தாய்வு கூட்டம் திருச்சி - திண்டுக்கல் மெயின்ரோடு J.K.நகர் திருச்சியில் உள்ள நம்மாழ்வார் அரங்கில் நடைபெற்றது. அக்ரி கிருஷ்ணன் தலைமை தாங்க பாரதிய கிசான் சங்க மாநில அமைப்பு செயலாளர் P.S.குமார் முன்னிலையில் மாநில செயற்குழு உறுப்பினர் சீமான் வரவேற்க நிகழ்ச்சி துவங்கியது.

மாநில செயலாளர் N.வீரசேகரன் நிகழ்ச்சிக்கான நோக்க உரை ஆற்றினார். அகில பாரத நுணைத்தலைவர் த.பெருமாள் வழிகாட்டுதலில் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியில் முன்னோடி விவசாயி வயலூர் ராஜேந்திரன், விதை யோகநாதன், வேளாண் வல்லுநர் Dr.சிவபாலன், கண்ணன் மற்றும் விதை நிறுவன பிரதிநிதிகளாக சௌந்தர்ராஜன், விக்னேஷ் கலந்து கொண்டனர்.

தற்போது விதைசட்டம் 1967 என்ற பழமையான சட்டம் மட்டுமே நடைமுறையில் உள்ளது. இதற்கு மாற்றாக கடந்த 2004-ஆம் ஆண்டு சட்ட முன்மொழிவு வெளியிடப்பட்டது. இச்சட்டம் முழுவதும் மரபணுக்கள் மாற்றப்பட்ட விதை நிறுவனங்களுக்கு ஆதரவாக அவைகளை பயன்பாட்டிற்கு உதவும் வகையில் இருந்ததால் நாடு முழுவதும் பலத்த எதிர்ப்பினால் கைவிடப்பட்டது. தொடர்ந்து 2019 விதைசட்ட முன்மொழிவு இதர பல காரணங்களால் நடைமுறைப்படுத்தப்படவில்லை.

எனவே அரசு எதிர்வரும் ஆளுநர் உரையில் விதைக்கான ஒரு கொள்கை முடிவினை அறிவிக்க வேண்டும். வேளாண் நிதிநிலை அறிக்கையில் இதற்காக நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்று தமிழக அரசை கோருகிறோம். மேற்படி கூட்டத்தில் விதை உற்பத்தி, தேவை, கையிருப்பு, விற்பனை, வரிவருவாய் பாதிப்புகள், இழப்பீடு முதலியவை குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டு கீழ்கண்ட பரிந்துரைகள் அரசுக்கு அனுப்பப்பட்டுள்ளது.

1. ஒன்றியம் தோலும் விதை கிராமங்களை உருவாக்கி அந்த பகுதிகளுக்கான விதைகளை அந்தந்த விவசாயிகள் உற்பத்தி செய்யக்கூடிய வகையில் தொழில்நுட்ப ஆலோசனைகளை வேளாண் துறையும், விற்பனையை கூட்டுறவு துறையும் மேற்கொள்ள வேண்டும்.

2. மாவட்ட அளவில் விதைக்காக தனியாக ஒரு குழு ஏற்படுத்த வேண்டும். இக்குழுவில் மாவட்ட ஆட்சித்தலைவர், துறைசார்ந்த அதிகாரிகள், முன்னோடி விவசாயிகள் பயிர் வாரியாக இருக்க வேண்டும். இவர்கள் குறிப்பிட்ட இடைவெளியில் சந்தித்து மாவட்ட விதை தேவையை பூர்த்தி செய்ய வேண்டும்.

3. வேளாண் கல்லூரிகள், விதை பண்ணைகள் மற்றும் வேளாண் பயிற்சி மையங்களில் நிலங்கள் தற்சமயம் பயன்படுத்தப்படாமல் திருவண்ணாமலை, திருச்சி, கல்லக்குறிச்சி, மதுரை போன்ற மாவட்டங்களில் பயன்படுத்தப்படாமல் பல்லாயிரகணக்கான நிலங்கள் உள்ளது. இவற்றை வேளாண் கல்லூரி தத்தெடுத்துள்ள உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்கள் மூலமாக விதைகள் உற்பத்தி செய்து விற்பனை செய்ய அரசு உதவ வேண்டும்.

4. மேலும் விதை விலை நிர்ணயம் செய்வதில் உள்ள குறைகளை தீர்க்க அரசு நிர்ணயம் செய்த விலைக்கு தனியார்கள் விற்பனை செய்ய வேண்டும். அரசு மட்டுமே விவசாயிகளின் விதை தேவையை சரிசெய்ய முடியாது. தற்போது சுமார் 20% விதைகள் அரசின் மூலமாகவும், 5% விவசாயிகளின் பராமரிப்பிலும், 75% தனியார்களை நம்பி உள்ளது.

5. இந்நிலையை மாற்றி அரசு 75% விதைகளை விவசாயிகளுக்கு வழங்கக்கூடிய நிலையில் உயர வேண்டும். மேலும் சட்ட ரீதியாகவும், இதர பிரச்சினைகள் குறித்து பல்வேறு பரிந்துரைகள் தயாரிக்கப்பட்டு எதிர்வரும் (24.07.2024) அன்று தமிழக முதல்வரையும், வேளாண் துறை சார்ந்த அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளை சந்தித்து வழங்குவது என முடிவு செய்யப்பட்டது. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை திருச்சி மாவட்ட தலைவர் கண்ணன் செய்திருந்தார்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய... https://chat.whatsapp.com/Cs9s0CdOqXmGS1SrcL2f9I

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision