திருச்சி வனப்பகுதியில் இளம்பெண் சடலமாக மீட்பு

திருச்சி வனப்பகுதியில் இளம்பெண் சடலமாக மீட்பு

திருச்சி மாவட்டம் முசிறி அருகே தேரப்பம்பட்டி என்ற இடத்தில் வனப்பகுதி அமைந்துள்ளது இங்கு இளம் பெண் ஒருவர் சடலமாக கிடப்பதாக ஜம்புநாதபுரம் காவல் நிலையத்திற்கு தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு சென்ற முசிறி போலீஸ் டிஎஸ்பி யாஸ்மின், தா.பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் பொன்ராஜ் ஆகியோர் இளம்பெண் சடலத்தை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த வந்த திருச்சி எஸ்.பி வருண்குமார் சம்பவ இடத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தார். கொலை செய்யப்பட்டு கிடந்த இளம்பெண்ணின் வாய் அவர் அணிந்திருந்த துப்பட்டாவால் கட்டப்பட்டிருந்த நிலையில் வாய் மற்றும் கழுத்து பகுதிகளில் காயம் காணப்பட்டது. சடலத்தின் அருகே அந்த பெண்ணின் உடைகள் அடங்கிய லெதர்பை மற்றும் காலிபீர் பாட்டில்கள், குளிர்பான பாட்டில்கள் கிடந்தது.

இதையடுத்து போலீசார் மேற்கொண்ட விசாரணையில் கொலை செய்யப்பட்டு சடலமாக கிடந்த இளம் பெண் தா.பேட்டை அருகே உள்ள ஊரக்கரை கிராமத்தை சேர்ந்த அறிவழகன் மகள் பிரியங்கா (22) என்பதும், கடந்த ஒரு வருடத்துக்கு முன்பு மகாதேவி மலையப்ப நகர் பகுதியைச் சேர்ந்த வாலிபர் ஒரு ஒருவரை காதல் திருமணம் செய்து கொண்டார் என்பதும் தெரியவந்தது.

இளம் பெண்ணின் கணவர் ராயவேலூர் பகுதியில் கூலி தொழிலாளியாக வேலை செய்து வருவதாகவும் கூறப்படுகிறது. இளம் பெண் பிரியா வனப்பகுதிக்கு எவ்வாறு வந்தார் அவரை கொலை செய்தது யார், கொலைக்கான காரணம் என்ன, வேறு பகுதியில் கொலை செய்து சடலத்தை கொண்டு வந்து போடப்பட்டதா என போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

மேலும் சம்பவ இடத்திற்கு தடயவியல் நிபுணர்கள் மற்றும் மோப்பநாய் லீலீ வரவழைக்கப்பட்டு தடயங்கள் சேகரிக்கப்பட்டது. இளம் பெண் வனப்பகுதியில் கொலை செய்து கிடந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய.... https://chat.whatsapp.com/D0TGphikme7AsbscoQstiY

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvisionn

https://www.threads.net/@trichy_vision