இண்டர்நேஷனல் பாலிடிக்ஸ் கேள்விலாம் வேண்டாம் நான் உள்ளூர் மந்திரி என திருச்சியில் அமைச்சர் கே.என்.நேரு பேட்டி

இண்டர்நேஷனல் பாலிடிக்ஸ் கேள்விலாம் வேண்டாம் நான் உள்ளூர் மந்திரி என திருச்சியில் அமைச்சர் கே.என்.நேரு பேட்டி

திருச்சி மாநகராட்சியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் வரையறுக்கப்பட்ட பகுதிகளில் பொதுமக்களுக்கு போதிய அழுத்தத்துடன் சீரான அளவில் குடிநீர் வழங்கும் நோக்கில் பெரியார் நகர், கம்பரசம்பேட்டை நீர்சேகரிப்பு கிணற்றில் புதிதாக நீள்சுற்று வட்டக் குழாய்கள், புதிதாக மோட்டார் பம்பு செட் மற்றும் டீசல் ஜெனரேட்டர்  மற்றும் புதிதாக முதன்மை சமநிலை நீரேற்ற தொட்டி, நீர் பரிசோதனை ஆய்வகம், நடைபாலம் மற்றும் தரைமட்ட நீர்தேக்க தொட்டி ஆகியவைகள் மறுசீரமைத்தல் உள்ளிட்ட பணிகள் தொடக்க விழா திருச்சி உறையூர் பகுதியில் நடைப்பெற்றது. 

இந்த நிகழ்ச்சியில் நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே.என்.நேரு கலந்து கொண்டு தொடக்கி வைத்தார். நிகழ்ச்சிக்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் கே.என்.நேரு... 17 வார்டுகளில் 24/7 குடிநீர் வழங்கும் வகையில் 28.5 கோடி ரூபாய் செலவில் இந்த பணி இன்று தொடங்கப்பட்டுள்ளது.

விநியோகிக்க கூடிய தண்ணீர் கலங்கலாக இல்லாமல் சுத்தமான குடிநீராக வழங்கும் வகையில் புதிய இயந்திரம் (Aerator) 5 கோடி ரூபாய் செலவில் வைக்கப்பட உள்ளது. திருச்சி மாநகராட்சிக்கு  அடுத்த 30 ஆண்டுகளுக்கு குடிநீர் விநியோகிக்க தேவையான திட்டம் தான் கொள்ளிடம் கூட்டு குடிநீர் திட்டம். அங்கிருந்து போதுமான அளவு தண்ணீர் விநியோகிக்கும் வசதி உள்ளது. மக்கள் தொகை பெருகினாலும் அத்திட்டத்தில் தண்ணீர் விநியோகிக்க மேலும் பல வசதிகள் செய்து தரப்படும்.

அடுத்த ஓர் ஆண்டில் திருச்சி மாநகராட்சி மக்களுக்கு 24/7 என்கிற அடிப்படையில் சுத்திகரிக்கப்பட்ட தண்ணீர் விநியோகிக்கப்படும். ஏற்கனவே போடப்பட்ட பாதாள சாக்கடை குழாய்கள் சரி இல்லாத காரணத்தால் குடிநீரோடு சாக்கடை நீர் கலக்கிறது. அவற்றை சரி செய்யவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. கம்பரசம்பேட்டையில் குடிநீர் விநியோகிக்க பயன்படும் பழுதடைந்துள்ள ஆழ்குழாய் கிணறுகள் சரி செய்யப்படும்.

தி.மு.க வினர் எதிர்ப்பை சமாளிக்கும் வலுவோடு தான் இருப்பார்கள். தி.மு.க சந்திக்காத எதிர்ப்பா, எமர்ஜென்சியையே எதிர்த்த இயக்கம் தி.மு.க. அண்ணாமலை புதிதாக பா.ஜ.க வின் தலைவராகி இருக்கிறார். அவர் மக்களிடம் பெயர் வாங்கவே இது போன்று பேசுகிறார். நாங்கள் தவறு செய்தால் தான் பயப்பட வேண்டும். தவறு செய்தால் எங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பேச்சுக்கு பதிலளித்தார்.

காவிரி நதி நீர் பிரச்சனையில் திமுக அரசியல் செய்யுது என செய்தியாளர் கேள்வி எழுப்பிய பொழுது இன்டர்நேஷனல் பாலிக்டிக்ஸ் அது திருச்சி பாலிடிக்ஸ் பத்தி கேளுங்க இந்திய அளவிலான கேள்விகளுக்கு முதல்வர் பதிலளிப்பார். நான் இந்த ஊரு எம். எல்.ஏ மந்திரி அதை பத்தி கேளுங்க. மேலும் நீங்க முதன்மை செயலாளர் என்று செய்தியாளர் கூறியவுடன் எனக்கு மேல் மூன்று பேர் உள்ளனர் என நகைப்புடன் தெரிவித்தார். கழிவு நீரை ஆறுகளில் கலப்பதை தடுக்கும் வகையில் திட்டம் உள்ளது.இன்னும் ஓரிரு ஆண்டுகளில் அந்த திட்டம் செயல்படுத்தப்படும் என்றார்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய....

https://chat.whatsapp.com/GJDm40VrfQc6PgMBZJzYBf

டெலிகிராம் மூலமும் அறிய....
https://t.me/trichyvisionn