யானைகள் புத்துணர்வு முகாம் - திருச்சியின் கோவில் யானைகள் கொடியசைத்து அனுப்பி வைப்பு!!

யானைகள் புத்துணர்வு முகாம் - திருச்சியின் கோவில் யானைகள் கொடியசைத்து அனுப்பி வைப்பு!!

யானைகள் புத்துணர்வு முகாமிற்கு திருச்சியிலிருந்து ஸ்ரீரங்கம், திருவானைக்காவல் மற்றும் மலைக்கோட்டை கோவில் யானைகள் கொடியசைத்து அனுப்பி வைக்கப்பட்டது.

Advertisement

தமிழகத்தில், அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் செயல்படும் கோயில்களுக்குச் சொந்தமான யானைகளுக்கு, மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா அவர்களால் தொடங்கப்பட்டு ஆண்டுதோறும் தமிழக அரசு சார்பாக புத்துணர்வு முகாம் நடத்தப்பட்டுவருகிறது.

Advertisement

கோவை மாவட்டம் தேக்கம்பட்டியில், பவானி ஆற்றங்கரையில் இந்த முகாம் நடத்தப்படுகிறது. இந்த ஆண்டுக்கான முகாம், நாளை தொடங்கி 48நாட்கள் நடைபெற உள்ளது. இந்த முகாமில் கலந்து கொள்வதற்காக ஸ்ரீரங்கம் கோயில் யானை ஆண்டாள் மற்றும் லட்சுமி, திருவானைக்காவல் கோவில் யானை அகிலா மற்றும் மலைக்கோட்டை தாயுமானசுவாமி திருக்கோயில் யானை லெட்சுமி ஆகியவை திருச்சியிலிருந்து இன்று லாரிகளில் புறப்பட்டுச் சென்றது.

ஸ்ரீரங்கம் யாத்ரிகா நிவாஸிலிருந்து சிறப்பு பூஜைகளுக்குப் பிறகு அந்த யானைகளை இந்துசமய அறநிலையத்துறை திருச்சி மண்டல இணைஆணையர் சுதர்சன் கொடியசைத்து அனுப்பிவைத்தார். 

48 நாட்கள் நடைபெற உள்ள இந்த முகாமில் யானைகளுக்கான நடைப்பயிற்சி, பசுந்தீவனம், சத்தான உணவுகள், ஊட்டச்சத்துடன் கூடிய இயற்கை மருந்துகள் உள்ளிட்டவை வழங்கப்படும். திருச்சியிலிருந்து புறப்பட்ட யானைகளுடன் யானை பாகன்கள் மற்றும் கால்நடை மருத்துவக்குழுவும் அனுப்பி வைக்கப்பட்டது. 

Advertisement

இந்த முகாம் யானைகளின் ஆரோக்கியத்திற்கு முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும். நடப்பாண்டு இந்தயானைகளின் சிறப்பு முகாமில் பங்கேற்கும் யானைகள் மற்றும் யானை பாகன், உதவியாளர் ஆகியோர் கொரோனா பரிசோதனை எடுக்கப்பட்டு நெகட்டிவ் என்று ரிசல்ட் வந்த பிறகே அவர்கள் செல்வதற்கு அனுமதிக்கப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.