குறைந்த எண்ணிக்கையில் தடுப்பூசி ஆயிரக்கணக்கில் குவிந்த பொதுமக்கள் - காவல்துறையினர் கூட்டத்தை கலைப்பு

குறைந்த எண்ணிக்கையில் தடுப்பூசி ஆயிரக்கணக்கில் குவிந்த பொதுமக்கள் - காவல்துறையினர் கூட்டத்தை கலைப்பு

கொரோனா தொற்று 2வது அலை வேகமாக பரவி வரும் நிலையில், அதனை கட்டுப்படுத்துவதற்காக பொதுமக்கள் அனைவரும் கோவிட் தடுப்பூசி எடுத்துக் கொள்ள வேண்டும் என மத்திய, மாநில அரசு விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறது. அதன்படி முகாம்கள் அமைக்கப்பட்டு வயது ஏற்றார் போல் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில் திருச்சி மாவட்டம் மற்றும் மாநகராட்சி சார்பில் திருச்சியில் 4 கோட்டங்களில் தடுப்பூசி முகாம் நடத்தப்பட்டு வருகிறது.

இதில் 18 வயதில் இருந்து 44 வயதுக்குள் உள்ள அனைவரும் தடுப்பு ஊசி செலுத்தப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகில் உள்ள கலையரங்கம் திருமண மண்டபத்தில் தடுப்பூசி செலுத்தும் முகாம் நடைபெற்று வருகிறது. தினந்தோறும் காலை 10 முதல் மாலை 4 மணி வரை பயனாளிகளுக்கு தடுப்பூசி செலுத்தப்படுகிறது.

இதற்கிடையில் கடந்த இரண்டு நாட்களாக தடுப்பூசி இல்லாததால் இந்த முகாம் ரத்து செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து தமிழக அரசு திருச்சி மாவட்டத்திற்கு நேற்று முன்தினம் 15 ஆயிரம் கோவிசீல்டு மற்றும் 3 ஆயிரம் கோவாக்சீன் என மொத்தம் 18 ஆயிரம் தடுப்பூசிகளை வழங்கியுள்ளது. இதனையடுத்து இன்று திருச்சி மாநகராட்சிக்கு உட்பட்ட தேவர் ஹால் மற்றும் கலையரங்கம் தடுப்பு ஊசி செலுத்தும் முகாமில் பொதுமக்கள் நீண்ட வரிசையில் காத்திருக்கின்றனர். குறிப்பாக கலையரங்கம் முகாமில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் திடீரென குவிந்ததால் இங்கு சமூக இடைவெளியின்றி காணப்பட்டது.

பின்னர் பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் குறைந்த அளவிலான பொது மக்களை உள்ளே அனுமதித்து மற்றவர்களை கலைந்து 
போக அறிவுறுத்தினர். நேற்று ஒரு நாளில் மட்டும் 13 ஆயிரத்து 71 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

திருச்சிக்கு நேற்று முன்தினம் வந்த 18 ஆயிரம் தடுப்பூசிகளில் மீதம் 5000 தடுப்பூசி மட்டுமே உள்ளது. இன்று மீதமுள்ள ஊசிகள் தீர்ந்துவிடும் என சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதனால் பயனாளிகளின் கூட்டம் அதிகமாக இருப்பதால் காவல்துறை பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய!
https://chat.whatsapp.com/L02NDTkd6Wg4hHDkNo6EQC