பள்ளி மாணவனை திருமணம் செய்து 21 நாட்கள் கழித்து ஆசிரியை போக்சோவில் கைது

பள்ளி மாணவனை திருமணம் செய்து 21 நாட்கள் கழித்து ஆசிரியை போக்சோவில் கைது

திருச்சி மாவட்டம் துறையூர் அருகே கொட்டையூர் செல்லும் சாலையில் உள்ள தனியார் பள்ளியில் 11ம் வகுப்பு படிக்கும் மாணவர் கடந்த 5ம் தேதி பள்ளி முடிந்ததும் மாலை வீட்டுக்கு சென்றார். அதன்பின்னர் விளையாட செல்வதாக கூறிவிட்டு சென்றவர் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்காததால் மாணவனின் தாயார் கடந்த 11ம் தேதி துறையூர் காவல் நிலையத்தில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வந்தனர்.

ஆரம்பகட்ட விசாரணையில் எம்ஏ, பிஎட், எம்ஃபில் முடித்து விட்டு மாணவன் படிக்கும் அதே பள்ளியில் சிக்கத்தம்பூரைச் சேர்ந்த சர்மிளா (26) அதே தேதியில் மாயமானது தெரிந்தது. 6 ஆண்டுகளாக இந்த பள்ளியில் வேலை செய்கிறார். மாணவன் ஏழாம் வகுப்பு படிக்கும்போது அவருக்கு சர்மிளா பாடம் நடத்தியதாக தெரிகிறது. கிடைத்த தகவல்கள்,  ஆசிரியையின் செல்போன் ஐஎம்ஈஐ எண்ணைக் கொண்டு போலீசார் டிரேஸ் செய்ததில் வேளாங்கண்ணி, திருவாரூர், தஞ்சாவூர், திருச்சி ஆகிய இடங்களை காட்டியது. கடைசியாக திருச்சி எடமலைப்பட்டி புதூரில் ஆசிரியை தோழி வீட்டில் தங்கி இருந்தது தெரிந்தது.

துறையூர் சப்-இன்ஸ்பெக்டர் கலைச்செல்வன் தலைமையில் அங்கு சென்ற போலீசார் ஆசிரியை மற்றும் மாணவனிடம் விசாரித்தனர். தஞ்சாவூர் கோயிலில் தாலி கட்டி திருமணம் செய்தது தெரிந்தது.  இதையடுத்து துறையூர் காவல்துறையினர் மாணவனையும், ஆசிரியையும் துறையூர் காவல் நிலையத்திற்கு அழைத்து வந்தனர் இதுகுறித்து முசிறி அனைத்து மகளிர் காவல்நிலைய ஆய்வாளர் காவேரி ஆசிரியையிடம் விசாரணை மேற்கொண்டார்.

துறையூர் காவல் நிலையத்தில் வைத்து இருவரிடமும் விசாரணை முடிந்ததும் 17 வயது மாணவனை ஆசை வார்த்தை கூறி அழைத்துச் சென்று திருமணம் செய்ததாக ஆசிரியை சர்மிளாவை போக்சோ சட்டத்தில் கைது செய்தனர். மாணவனை காப்பகத்தில் ஒப்படைத்தனர்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய....
https://chat.whatsapp.com/EBWOGQoz6UK760TTm5WwQK

#டெலிகிராம் மூலமும் அறிய...
https://t.co/nepIqeLanO