இதயத்தை கவனியுங்கள் - உலக இதய தினம் சிறப்பு கட்டுரை

இதயத்தை கவனியுங்கள் - உலக இதய தினம் சிறப்பு கட்டுரை

தாயின் வயிற்றில் கரு உருவாகி, நான்கு வாரத்தில் தொடங்குகிறது முதல் இதயத் துடிப்பு. அன்று முதல் மனிதன் இறக்கும் வரை நிற்காமல் சதா சர்வ காலமும் துடித்துக்கொண்டிருக்கிறது இதயம். இதன் நான்கு அறைகள், வால்வுகள் மற்றும் ரத்த நாளங்களின் செயல்பாடு அளப்பரியது. உடல் முழுவதும் ரத்தத்தை அழுத்திச் செலுத்தி, பிராணவாயுவைக் கொண்டு போய்ச் சேர்க்கிறது. இதய அறுவை சிகிச்சையில் மருத்துவ மற்றும் தொழில்நுட்ப முன்னேற்றங்கள் பல பல வந்து விட்டபோதிலும், எந்த ஓர் இதய நோயும் வருமுன் காப்பதே சிறந்தது.

செப்டம்பர் 29ம் தேதி கடைப்பிடிக்கப்படும் உலக இதய தினத்தன்றும் இதய நலம் தொடர்பான குறிப்புகளையும், உங்கள் இதயத்தின் மிக முக்கிய அங்கத்தை பாதுகாப்பது  குறித்தும் தெரிந்து கொள்ளலாம். இதய நோய் என்றால் என்ன? கார்டியோவாஸ்குலர் நோய் என்பது, இதயத்தின் அமைப்பு மற்றும் செயல்பாடு உள்ளிட்டவற்றை பாதிக்கக் கூடிய பல்வேறு வகையான இதயம் தொடர்பான பாதிப்புகளை குறிக்க பயன்படுகிறது.

கோரோனரி ஹார்ட் டிசீஸ் (Coronary heart disease), ஆர்ஹைதைமியாஸ் (Arrhythmias), ஆரோடிக் ஸ்டெனோசிஸ் (Aortic stenosis), மாரடைப்பு, இதய செயலிழப்பு உள்ளிட்டவை இதில் அடங்கும். மன அழுத்தம், மந்தமான வாழ்க்கை முறை, டிரான்ஸ் கொழுப்பு நிறைந்த உணவை உட்கொள்வது, புகையிலை, பருமன் ஆகியவை இதற்கான முக்கியக் காரணங்களாக அமைகின்றன.

மக்கள் இந்த பாதிப்புகளில் இருந்து விடுபட வேண்டுமானால், சமநிலையான, ஆரோக்கியமான வாழ்க்கை முறையில் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது. இதயத்தில் ஏதேனும் பாதிப்புகள் அல்லது அறிகுறிகள் தென்பட்டால், அதனை புறக்கணிக்காமல் மருத்துவமனைக்கு சென்று பரிசதோனை செய்து கொள்ளுங்கள். யோகா, காலை நடைப்பயிற்சி, உடற்பயிற்சிகள் தவிர, இதய நலத்துக்கு அதிகாலை மூச்சுப் பயிற்சி மிகவும் அவசியம். இதனால், ரத்தத்துக்கு அதிக ஆக்சிஜன் கிடைக்கிறது. 

20 வயதுக்கு மேற்பட்ட இளைஞர்கள் ஒரு நாளைக்குக் குறைந்தது ஏழு மணி நேரம் தூங்க வேண்டும். அதற்குக் குறைவாகத்  தூங்குபவர்களுக்கு இதய நாளங்களில் கால்சியம் குறைபாடு ஏற்படும். இதுவே, பின்னர் இதய நோய்களுக்கு வழிவகுக்கும். இன்று நிறைய பேர் பலவகையான டயட் முறைகளைப் பின்பற்றுகின்றனர். எந்த வகை டயட்டை பின்பற்றினாலும், அவை உடலின் அமிலத்தன்மையை அதிகரிக்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும். மனஅழுத்தம் என்பது நமது அன்றாட வாழ்வில் இயல்பாக ஏற்படும் ஒரு விஷயம். இதனை முற்றிலும் ஒழிக்க  முடியாது. வேலைப் பளு, குடும்பப் பிரச்னை காரணமாக ஏற்படும் மனஅழுத்தத்தைக்  கட்டுக்குள் வைக்கலாம். புத்தகம் படிப்பது, குழந்தைகளுடன் விளையாடுவது, நீச்சல், நடைப்பயிற்சி என தினமும் ஏதாவது பிடித்த விஷயம் ஒன்றைச் செய்வதன் மூலம் மனஅழுத்தத்தைக்  குறைக்கலாம். 

கொலஸ்ட்ரால் அளவைக் கட்டுக்குள் வைக்க வேண்டும். இதய நாளங்களில் கொலஸ்ட்ரால் படிவதால் நாளடைவில் இறுகி, ரத்தம் செல்லும் பாதை அடைபட்டு மாரடைப்பு ஏற்படுகிறது. நிறைவுறா கொழுப்பு அமிலம் (Unsaturated fat) அதிகம் உள்ள நொறுக்குத் தீனிகளை அளவாகச் சாப்பிட வேண்டும். ரத்த அழுத்தத்தைக் கட்டுக்குள் வைக்க வேண்டும். இதற்கு நம் அன்றாட உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டிய உப்பின் அளவை கவனிக்க வேண்டும். இளைஞர்களுக்கு ஒரு நாளைக்கு ஒரு டீஸ்பூன் (6 கிராம்) உப்பு தேவைப்படும். 50 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு  மூன்று கிராம் போதுமானது. இவை அனைத்தையும் சரியாக செய்தாலே இதயத்தை இதமாக வைத்து கொள்ளலாம்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய....
https://chat.whatsapp.com/F2UyA1Y1JhlIdUVAiKp85h

டெலிகிராம் மூலமும் அறிய...
https://t.me/trichyvisionn