திருச்சி மாவட்டம் முசிறியில் எம் ஐ டி கல்வி நிறுவனங்கள் அமைந்துள்ளது. இதில் எம் ஐ டி பாலிடெக்னிக் கல்லூரி மகளிர் கலை அறிவியல் கல்லூரி எம் ஐ டி போதி வித்யாலயா மற்றும் வெள்ளாளப்பட்டியில் எம் ஐ டி வேளாண்மை தொழில்நுட்பக் கல்லூரி ஆகியவை இயங்கி வருகிறது.
இந்நிறுவனங்கள் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியின் நெருங்கிய நண்பரான முன்னாள் கூட்டுறவு சங்கத் தலைவர் இளங்கோவன் அவர்களின் தலைமையின் கீழ் இயங்கும் சுவாமி ஐயப்பன் அறக்கட்டளையின் கீழ் செயல்பட்டு வருகிறது. இந்நிறுவனங்களில் கடந்த செவ்வாய்க்கிழமை முதல் வருமான வரித்துறையினர் அதிரடியாக உள்ளே நுழைந்து சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
தற்பொழுதும் சோதனை நடைபெற்று வருகிறது. இது வழக்கமான ஒன்று என்று கூறினாலும் வருமானவரி சோதனை என்பது முக்கியமான ஒன்றாகவே கருதப்படுகிறது. திருச்சி வருமான வரி அலுவலகத்தைச் சேர்ந்த 10 பேர் வருகை தந்து சோதனை மேற்கொண்டு வருகின்றனர். விடிய விடிய சோதனை மேற்கொண்டு வருவதால் முக்கிய ஆவணங்கள் கிடைத்து இருக்கலாம் என கருதப்படுகிறது. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
வருமான வரித்துறை அதிகாரிகள் கல்லூரிக்குள் சோதனைகள் நடத்தி வந்த நிலையில் கல்லூரி வழக்கம் போல இயங்கி வருகிறது. கல்லூரிக்குள் செல்வதற்கும், வெளியே வருவதற்கும் யாருக்கும் தடை விதிக்காத நிலையில் அதிகாரிகள் அலுவலகத்தில் மட்டும் முகாமிட்டுள்ளனர்.நேற்று இரவு மழை பெய்த நிலையிலும் கூட வருமானவரித்துறை இரண்டு கல்லூரிகளுக்கும் மாறி மாறி சென்றவாறு சோதனையை தீவிரப்படுத்தி இருந்தனர்.
முக்கிய புள்ளி ஒருவரை குறிவைத்து அவர் குறித்த தடயங்கள் ஏதேனும் கிடைக்கிறதா என சோதனை நடைபெறுவதாக அரசியல் வட்டாரத்தில் பேசப்படுகிறது. நேற்று மதியம் வருமானவரித் துறையினரின் சோதனை முடியும் என்ற எதிர்பார்த்த நிலையில் நான்காவது நாளாக இன்றும் தொடர்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய… https://chat.whatsapp.com/LYWjbKaEy206I5aquHTp81
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision
Comments