என்.ஐ.டி திருச்சி மற்றும் காவேரி மருத்துவமனை இணைந்து புதிய முதுகலை டிப்ளமோ படிப்பை வழங்கத் திட்டம் இரு நிறுவனங்களுக்கும் இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தம் முறைப்படி கையெழுத்தானது.
இதன் மூலம் மாணவர்களுக்கு மருத்துவ நிபுணர்களின் வகுப்புகள், மருத்துவமனையில் நேரடிப் பயிற்சி ஆகியவை கிடைக்கும்.

திருச்சி தேசிய தொழில்நுட்பக் கழகமும் (என்.ஐ.டி) மற்றும் திருச்சி காவேரி மருத்துவமனையும் இணைந்து, ‘ஹெல்த்கேர் டெக்னாலஜி’ துறையில் ஒரு புதிய முதுகலை டிப்ளமோ படிப்பை தொடங்க திட்டமிட்டுள்ளன. மருத்துவ சேவையில் பொறியியல் பயன்பாடுகள் குறித்த பயிற்சிகளை வழங்குவதே இந்த படிப்பின் நோக்கமாகும். இந்தப் படிப்பை என்.ஐ.டி திருச்சி ஜூலை 2026 முதல் வழங்கும்.

இத்திட்டத்தின் மூலம் மாணவர்களுக்கு ‘மைக்ரோ-கிரெடிட்’ பாடப்பிரிவுகள், துறை சார்ந்த நிபுணர்களின் சிறப்பு உரைகள், காவேரி மருத்துவமனைகளில் நேரடிப் பயிற்சி மற்றும் மருத்துவத் துறையின் சவால்களுக்குத் தீர்வுகாணும் ப்ராஜெக்ட்கள் ஆகியவற்றுடன், ஆராய்ச்சி மற்றும் தொடர் கல்வி வாய்ப்புகளும் வழங்கப்படும்.இது குறித்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தில், என்.ஐ.டி திருச்சியின் இயக்குநர் முனைவர் ஜி. அகிலா மற்றும் காவேரி மருத்துவமனை குழுமத்தின் நிறுவனர் மற்றும் நிர்வாக இயக்குநர் முனைவர் எஸ். மணிவண்ணன் செல்வராஜ் ஆகியோர் சமீபத்தில் கையெழுத்திட்டனர்.

இந்த முயற்சி குறித்து முனைவர் அகிலா கூறுகையில்: “தேசிய கல்விக் கொள்கை 2020-ன் தொலைநோக்குப் பார்வைக்கு ஏற்ப, மருத்துவ சேவைத் துறையில் உள்ள தற்போதைய சவால்கள் மற்றும் வளர்ந்து வரும் மாற்றங்களைக் தொழில்நுட்பத்தின் உதவியுடன் சந்திப்பதற்கு மாணவர்களை தயார்ப்படுத்துவதற்காக இந்த முதுகலை டிப்ளமோ படிப்பு வடிவமைக்கப்பட்டுள்ளது. என்.ஐ.டி திருச்சியின் வலுவான தொழில்நுட்பத் திறன்களையும், மருத்துவ சேவைத் துறையில் காவேரி மருத்துவமனையின் நிபுணத்துவத்தையும் ஒன்றிணைப்பதன் மூலம், இந்தப் படிப்பு அர்த்தமுள்ள ஆராய்ச்சி மற்றும் கண்டுபிடிப்புகளை ஊக்குவிக்கும்; அதே நேரத்தில் உயர்கல்வி மற்றும் ஆராய்ச்சிக்கு வலுவான அடித்தளத்தை உருவாக்கும்.”
டாக்டர் மணிவண்ணன் செல்வராஜ் கூறுகையில்: “இந்த படிப்பு கல்வி நிறுவனங்களில் வழங்கப்படும் தொழில்நுட்ப பயிற்சிக்கும் நிஜ உலக மருத்துவ நடைமுறைக்கும் உள்ள இடைவெளியைக் குறைக்க உதவும் என்று நாங்கள் நம்புகிறோம். என்.ஐ.டி திருச்சியுடனான இந்த ஒப்பந்தத்தின் மூலம், சிறப்பு விரிவுரைகள் மற்றும் நேரடித் ப்ராஜெக்ட்கள் மாணவர்களுக்கு வழங்கப்படும். இந்த படிப்பு நாட்டின் மருத்துவ சேவை கல்வி, ஆராய்ச்சி மற்றும் திறன் மேம்பாட்டில் ஏற்பட்டுள்ள ஒரு முக்கிய மைல்கல்லாகும்.”
இந்தப் படிப்பின் பாடநெறி ஒருங்கிணைப்பாளராக தகவல் தொழில்நுட்பத் துறையின் பேராசிரியர் முனைவர் என். சிவகுமாரன் நியமிக்கப்பட்டுள்ளார். புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடும் நிகழ்வில், என்.ஐ.டி டீன் (கல்வி) முனைவர் எஸ். டி. ரமேஷ், டீன் (தொழில்துறை மேம்பாடு) முனைவர் ஜி. உமா, பேராசிரியர் முனைவர் எம். உமாபதி, மற்றும் கருவி மற்றும் கட்டுப்பாட்டுப் பொறியியல் துறைத் தலைவர் முனைவர் கே. சீனிவாசன், பேராசிரியர்கள் முனைவர் ராமகல்யாண், முனைவர் என். சிவகுமாரன், முனைவர் ஸ்ரீதேவி, முனைவர் பெரியசாமி, முனைவர் பி. ஏ. கார்த்திக் மற்றும் முனைவர் கீதா ஆகியோர் கலந்து கொண்டனர்.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
டெலிகிராம் மூலமும் அறிய….
https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision



Comments