Site Logo mobile
Search Icon
Mobile Gif
Events

ஸ்ரீரங்கம் அரங்கநாதர் கோவில் சொர்க்கவாசல் திறப்பு – பக்திபரவசத்துடன் நம்பெருமாளை சேவித்த லட்சக்கணக்கான பக்தர்கள்

108 வைணவ திருத்தலங்களில் முதன்மையானதும், பூலோக வைகுண்டம் என பக்தர்களால் போற்றப்படுவதுமான திருச்சி ஸ்ரீரங்கம் அரங்கநாதர் சுவாமி கோவிலில் வருடம் தோறும் நடைபெறும் விழாக்களில், மிகவும் சிறப்பு வாய்ந்தாக கருதப்படும் வைகுந்த ஏகாதசி விழாவில் பரமபத வாசல் எனப்படும் சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி மிகவும் கோலாகலமாக இன்று நடைபெற்றது.

கடந்த டிசம்பர் 30ஆம் தேதியன்று திருநெடுந்தாண்டகத்துடன் தொடங்கியது. அதனைத் தொடர்ந்து டிசம்பர் 31 ஆம் தேதி பகல் பத்து விழா தொடங்கியது. பகல் பத்து பத்தாவது நாளான நேற்று நம் பெருமாள் மோகினி அலங்காரத்தில் காட்சி அளித்தார் வைகுண்ட ஏகாதசி விழா நாட்களில் நம்பெருமாள் (உற்சவர்) மூலஸ்தானத்திலிருந்து பல்வேறு அலங்காரங்களில் ஆழ்வார்கள், ஆச்சார்யார்களுடன் கோவில் பிரகாரங்களில் வலம் வந்து பின்னர் அர்ச்சுன மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு சேவை சாதித்தார்.

இராப்பத்து திருவிழாவின் முதல் நாளான 10 ஆம் தேதி இன்று அதிகாலை 4:15 மணிக்கு மூலஸ்தானத்திலிருந்து புறப்பட்டு விழாவின் முக்கிய நிகழ்வான சொர்க்கவாசல் திறப்பு எனப்படும் பரமபதவாசல் திறப்பு நிகழ்ச்சி அதிகாலை 5:15 மணியளவில் தனுர் லக்னத்தில் மூலஸ்தானத்திலிருந்து புறப்பட்ட நம்பெருமாள் ரத்தின அங்கி, பாண்டியன் கொண்டை, கிளிமாலை, வைர அபயஸ்தம் உட்பட பல்வேறு திரு ஆபரணங்கள் அணிந்து திருச்சுற்றில் உள்ள தங்க மரத்தை சுற்றி வந்து பரமபதவாசல் எனப்படும் சொர்க்கவாசல் வழியாக கடந்து வந்தார்.

அப்போது லட்சக்கணக்கான பக்தர்கள் ரெங்கா, ரெங்கா என பக்திகோஷமிட்டவாறு பரமபதவாசலைக் கடந்துச்சென்றனர் பின்னர் நம்பெருமாள் பக்தர்களுக்கு நேரடியாகச் சென்று காட்சி தரும் திருகொட்டகை பிரவேசம் கண்டருளினார். ஆயிரங்கால் மண்டபத்திற்கு வந்தடைந்து பக்தர்களுக்கு பொதுஜனசேவை கண்டருளினார். ஆயிரம்கால் மண்டபத்தில் எழுந்தருளியுள்ள நம்பெருமாளை இன்று இரவு 11 மணி வரை பக்தர்கள் தரிசனம் செய்யலாம்.

இதனை தொடர்ந்து ஆயிரங்கால் மண்டபத்தில் இருந்து நள்ளிரவு 12 மணிக்கு புறப்பட்டு அதிகாலை 1.15 மணிக்கு வீணை வாத்தியத்துடன் மூலஸ்தானம் சென்று அடைகிறார். சொர்க்கவாசல் திறப்பு முன்னிட்டு லட்சக்கணக்கான பக்தர்கள் நம்பெருமாளை நீண்டவரிசையில் நின்று பக்திபரவசத்துடன் சேவித்து வருகின்றனர். வைகுண்ட ஏகாதசி விழாவில் திருச்சி மட்டுமில்லாமல் வெளி மாநிலங்கள் மற்றும் வெளி நாடுகளில் இருந்தும் பக்தர்கள் வருகை புரிந்து சாமி தரிசனம் செய்கின்றனர். பக்தர்கள் பாதுகாப்பிற்காக வெளியூர்களில் இருந்தும் போலீசார் வரவழைக்கப்பட்டு 3 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

பொதுமக்களுக்கு பக்தர்களுக்கு தேவையான குடிநீர் சுகாதாரம் உள்ளிட்ட வசதிகளை கோவில் நிர்வாகம் மற்றும் மாநகராட்சியுடன் இணைந்து மாவட்ட நிர்வாகம் செய்துள்ளது. நம்பெருமாள் சொர்க்க வாசலை கடந்து ஆயிரம்கால் மண்டபத்திற்கு சென்றதற்கு பிறகு தான் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர்.

ஆனால் இந்த வருடம் நம்பெருமாலுடன் பக்தர்களும் சொர்க்கவாசலை கடந்து சென்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல இன்று முதல் ராப்பத்து உற்சவம் தொடங்கி வருகிற ஜனவரி 20 ஆம் தேதி நம்மாழ்வார் மோட்சத்துடன் விழா இனிதே நிறைவடைகிறது. ஸ்ரீரங்கம் வைகுண்ட ஏகாதசி சொர்க்கவாசல் திறப்பு நிகழ்வில் அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய… https://chat.whatsapp.com/H58t6nW18bYCrFMtKLqSfu

#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision

    slide image

    Comments

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *