Site Logo mobile
Search Icon
Mobile Gif
News

திருச்சியில் நலம் காக்கும் ஸ்டாலின் மருத்துவ சேவை முகாம் ஆட்சியர் ஆய்வு

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் நலம் காக்கும் ஸ்டாலின் எனும் சிறப்புத் திட்டத்தினை 02.08.2025 அன்று தொடங்கி வைத்ததைத் தொடர்ந்து ஒவ்வொரு சனிக்கிழமைதோறும் நலம் காக்கும் ஸ்டாலின் திட்டம் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் இன்று (06.09.2025) திருச்சிராப்பள்ளி மாவட்டம், மணப்பாறை வட்டம், பண்ணாங்கொம்பு அரசினர் உயர்நிலைப்பள்ளி வளாகத்தில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில் நலன் காக்கும் ஸ்டாலின் திட்ட பல்துறை உயர்சிறப்பு மருத்துவ முகாமினை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.வே.சரவணன். இ.ஆ.ப.,அவர்கள் நேரில் பார்வையிட்டு அங்கு வழங்கப்படும் சிகிச்சைகள் குறித்து மருத்துவர்களிடம் கேட்டறிந்து, பயனாளிகளுக்கு பல்வேறு சுகாதார நலத்திட்ட உதவிகளை வழங்கி பொதுமக்களுடன் கலந்துரையாடினார்.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தலைமையிலான தமிழ்நாடு அரசு மக்கள் நல்வாழ்வு துறையின் சார்பில் பல்வேறு புதிய சிறப்பு திட்டங்கள் தொடர்ச்சியாக செயல்படுத்தி வருகிறது. அந்தவகையில் மக்களை தேடி மருத்துவம், இன்னுயிர் காப்போம் நம்மை காக்கும் 48, வருமுன் காப்போம், இதயம் காப்போம், நடப்போம் நலம் பெறுவோம், மக்களை தேடி மருத்துவ ஆய்வக திட்டம், தொழிலாளர்களை தேடி மருத்துவத் திட்டம், சிறுநீரகம் பாதுகாக்கும் சீர்மிகு திட்டம், புற்றுநோய் கண்டறியும் பரிசோதனைகள் உள்ளிட்ட அனைத்து தரப்பு மக்களும் பயன்பெறும் வகையில் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
ஒவ்வொருவரும் முழு உடற் பரிசோதனை செய்து கொள்வதற்கு தனியார் மருத்துவமனைகளுக்கு சென்றால் கட்டணம் செலுத்தி பரிசோதனை மேற்கொள்ள வேண்டியிருக்கும். இதனை கருத்திற்கொண்டு, ஏழை, எளிய மக்கள் முழு உடற் பரிசோதனை மேற்கொள்வதன் அவசியத்தை உணர்ந்து மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் ”நலம் காக்கும் ஸ்டாலின்” எனும் இந்த சிறப்பு வாய்ந்த திட்டத்தினை செயல்படுத்தியுள்ளார்கள்.
தமிழ்நாட்டில் குறைந்த அளவில் மருத்துவ வசதி மற்றும் சிறப்பு மருத்துவ வசதிகள் கிடைக்கும் ஊரக பகுதிகள், பழங்குடியினர் அதிகம் வசிக்கும் பகுதிகள், நகர்ப்புறப் பகுதிகள்/குடிசைப்பகுதிகள் போன்ற பகுதிகளை முன்னுரிமை அடிப்படையில் தேர்ந்தெடுத்து இத்திட்ட முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. இம்முகாம்கள் நீரிழிவு மற்றும் உயர் இரத்த அழுத்த நோய், மனநல பாதிப்பு, இதய நோய், கர்ப்பிணித் தாய்மார்கள் மற்றும் பாலூட்டும் தாய்மார்கள், வளர்ச்சி குன்றிய குழந்தைகள், மாற்றுத்திறனாளிகள், பழங்குடியினர் மற்றும் சமூக-பொருளாதார ரீதியில் பின்தங்கிய மக்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளிலுள்ள மக்கள் பயன்பெறும் வகையில் ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ உயர் மருத்துவ சேவை முகாம் நடத்தப்பட்டு வருகிறது.
திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் இம்மருத்துவ முகாம்கள் 14 வட்டாரத்திற்கு 3 முகாம்கள் வீதம் 42 முகாம்கள் ஊரகப் பகுதிகளிலும், திருச்சிராப்பள்ளி மாநகராட்சியில் 4 முகாம்கள் என மொத்தம் 46 மருத்துவ முகாம்கள் நடத்தப்படுகிறது. உள்ளாட்சி அமைப்புகள், பள்ளிக்கல்வித் துறை, உயர்கல்வித் துறை, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை, சமூக நலம் மற்றும் மகளிர் உரிமைத் துறை, தொழிலாளர் நலன் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை, வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகள் ஒருங்கிணைந்து செயல்படும்.
இம்முகாம்களில் அடிப்படை மற்றும் உயர்நிலை மருத்துவப் பரிசோதனைகளுடன் முழுமையான உடல் ஆரோக்கியப் பரிசோதனைகளும் (உயர் இரத்த அழுத்தம், நீரிழிவு நோய், மின் இதய வரைபடம், எக்கோ, அல்ட்ராசவுண்ட் ஸ்கேன், எக்ஸ்-ரே), காசநோய் மற்றும் தொழுநோய் கண்டறியும் பரிசோதனைகளும், ஆரம்பகட்ட புற்றுநோய் கண்டறியும் பரிசோதனைகளும், 15 துறைகளைச் சார்ந்த நிபுணர்களின் மருத்துவ ஆலோசனைகளும் (பொது மருத்துவம் கண்கள் காது மூக்கு தொண்டை, பல் மருத்துவம், ஆயுஸ் மருத்துவம், மனநல மருத்துவம், மகப்பேறு மற்றும் மகளிர் இருதய நிபுணர், எலும்பு முறிவு, நாம்பியல் சிகிச்சை, முதல்வர் காப்பீட்டுத்திட்டம் மற்றும் இதயவியல் உள்ளிட்ட துறைகள்) வழங்கப்படுகிறது.
மேற்கண்ட பரிசோதனைகள் மட்டுமன்றி, தமிழ்நாடு முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தின்கீழ் பதிவு செய்தல், மாற்றுத் திறனாளிகளுக்கான அரசு அங்கீகார சான்றிதழ் வழங்குதல் உள்ளிட்ட சேவைகளும் வழங்கப்படுகிறது. ஓராண்டு காலத்திற்கு பொதுமக்களுக்கு இந்தத் திட்டத்தின் மூலம் பரிசோதனைகள் மேற்கொள்ளப்படவிருக்கிறது. இந்த முகாம்களில் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டதற்கான கோப்புகள் அவர்களிடத்திலேயே வழங்கப்படும். இதன் மூலம் பொதுமக்கள் எதிர்காலத்தில் மேல் சிகிச்சை செய்து கொள்ளும் வகையில் இந்த ஆவணங்கள் அவர்களுக்கு மிகப்பெரிய அளவில் பயன்தரும். இந்த முகாம் ஒவ்வொரு வார சனிக்கிழமைகளில் நடைபெறும். எனவே, ”நலம் காக்கும் ஸ்டாலின்” உயர் மருத்துவ சேவை முகாமினை பொதுமக்கள் அனைவரும் பயன்படுத்திக் கொள்ளலாம்.
இந்நிகழ்வின் போது ஸ்ரீரங்கம் வருவாய் கோட்டாட்சியர் திரு.சீனிவாசன், அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர் மரு.எஸ்.குமரவேல், இணை இயக்குநர் மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் மரு.கோபிநாத், மாவட்ட சுகாதார அலுவலர் மரு.ஹேமசந்த் காந்தி, மாற்றுத்திறனாளி நல அலுவலர் திரு.ரவிச்சந்திரன், அரசு அலுவலர்கள், பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF

டெலிகிராம் மூலமும் அறிய….

https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision

    slide image

    Comments

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *