ஸ்ரீரங்கம் ரெங்கநாயகி தாயாருக்கு ஆனிதிருமஞ்சனம் வைபவம் – தங்ககுடத்தில் புனிதநீர் கோயில் யானை ஆண்டாள்மீது ஊர்வலமாக கொண்டுசென்று திருமஞ்சனம் வைபவம் நடைபெற்றது
108வைணவ ஸ்தலங்களில் முதன்மையானதும், பூலோக வைகுண்டம் என பக்தர்களால் போற்றப்படுவதுமான ஸ்ரீரங்கம் அரங்கநாதர் திருக்கோயில் மிகவும் பிரசித்தி பெற்றதாகும். ரெங்கநாதர் திருக்கோயிலில் ஆண்டுதோறும் ஆனிமாதம் ஆனி திருமஞ்சனம் எனப்படும் ஜேஷ்டாபிஷேகம் ஸ்ரீரெங்கநாதருக்கும், அதனைத் தொடர்ந்து தாயார் மற்றும் சக்கரத்தாழ்வாருக்கு நடத்தப்படும்.
கடந்த எட்டாம்தேதியன்று ரெங்கநாதருக்கு ஆனித்திருமஞ்சனம் எனப்படும் ஜேஷ்டாபிஷேகம் மேற்கொள்ளப்பட்டதையடுத்து, மிகவும் விஷேசமானஇன்று ரெங்கநாயகி தாயாருக்கான ஜேஷ்டாபிஷேகத்திற்காக அம்மா மண்டபம் காவிரி படித்துறையில், காவிரி ஆற்றிலிருந்து தங்கம் மற்றும் வெள்ளிக்குடங்களில் நிரப்பப்பட்ட திருமஞ்சனம் (புனிதநீர்) எடுத்துவரப்பட்டது,
தங்கக்குடத்தில் நிரப்பப்பட்ட புனிதநீர் கோவில் யானை ஆண்டாள்மீது வைத்தும், வெள்ளிக் குடங்களில் நிரப்பபட்ட புனிதநீர் கோவில் பட்டாச்சாரியார்களால் சுமந்துவரப்பட்டது.
நாதஸ்வரம் மற்றும் மேளதாளங்கள் முழங்க அம்மாமண்டபம் படித்துறையில் இருந்து ஸ்ரீரங்கம் தாயார் சன்னதிக்கு ஊர்வலமாக கொண்டுவரப்பட்டது.
அதனைத்தொடர்ந்து தாயாருக்கு சாற்றப்பட்டிருக்கும் வஸ்திரங்களை, அங்கில்களை களைந்து சுத்தம்செய்யப்பட்டு மறுபடியும் அணிவிக்கப்பட்டு, சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றது.
அதனைத் தொடர்ந்து நாளை தாயாருக்கு திருப்பாவாடை சாற்றும் வைபவம் நடைபெறும், தாயார் ஜேஷ்டாபிஷேகம் சைவத்தின் காரணமாக இன்றும் நாளை பிற்பகல் 3 மணி வரையிலும் தாயாரை பக்தர்கள் சேவிக்கமுடியாது.
வழிநெடுகிலும் திரண்டிருந்த பக்தர்கள் புனிதநீர் கொண்டு செல்லும் வைபவத்தினை கண்டு வணங்கியபடி தரிசனம் செய்தனர்.
இந்நிகழ்விற்கான ஏற்பாடுகளை கோவில் இணை ஆணையர் சிவராம்குமார் , கோவில் பட்டாச்சாரியார்கள் மற்றும் பணியாளர்கள் செய்திருந்தனர்.
Comments