மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு தனியார்துறை வேலைவாய்ப்பு முகாமில் 171 தேர்வு

மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு தனியார்துறை வேலைவாய்ப்பு முகாமில் 171 தேர்வு

திருச்சிராப்பள்ளி கலையரங்கில், மாவட்ட நிர்வாகம், மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம் மற்றும் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் சார்பில் திருச்சிராப்பள்ளி, தஞ்சாவூர், அரியலூர், பெரம்பலூர், நாகப்பட்டினம், திருவாருர், மயிலாடுதுறை மற்றும் கடலூர் ஆகிய 8 மாவட்டங்களுக்கு மண்டல அளவில் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற்றது.

இந்த மாபெரும் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு வேலை வாய்ப்பு முகாமில் அனைத்து வகை மாற்றுத்திறனாளிகளுக்கும் வேலைவாய்ப்பு வழங்கிடும் வகையில் சிப்ட் நிறுவனம், ரிலையன்ஸ், மகேந்திரா பைனான்ஸ், யூத் பார் ஜாப், சமர்த்தனம், டார்லிங் எலக்ட்ரானிக்ஸ், அஸ்வின் ஹோம்ஸ் ஸ்பெசல், ஆர்வி நிறுவனம் மற்றும் சீடு நிறுவனம் உள்ளிட்ட 35-ற்கும் மேற்பட்ட தனியார்துறை நிறுவனங்கள் மாற்றுத்திறனாளிகளின் கல்வி தகுதிகளுக்கேற்ப வேலை நாடுநர்களை தேர்வு செய்தனர்.

இம்முகாமில் 8 மாவட்டங்களை சேர்ந்த சுமார் 1,100-க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் கலந்து கொண்டனர். அதில் 171 மாற்றுத்திறனாளிகள் பல்வேறு நிறுவனங்களின் சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டனர். மேலும் திறன் பயிற்சி வழங்கிடும் வகையில் அரசு திறன் மேம்பாட்டு நிறுவனம் மற்றும் ஸ்டார்ட்டப், ஆகியவற்றின் வாயிலாக 82 மாற்றுத்திறனாளிகள் பயிற்சியுடன் கூடிய வேலைவாய்ப்பிற்காக தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

தேர்வு செய்யப்பட்ட வேலை நாடுநர்களுக்கு அரசு செயலாளர் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சிஜி தாமஸ்வைத்தியன், இயக்குநர் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை எம்.லஷ்மி, மாவட்ட ஆட்சித்தலைவர் மா.பிரதீப் குமார் ஆகியோர் முன்னிலையில் தேர்வு செய்த நிறுவனத்தின் நிர்வாகிகள் பணி நியமன ஆணைகளை வழங்கினார்கள்.

மேலும் இம்முகாமில் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம், மகளிர் மேம்பாட்டுத்திட்ட அலுவலகம், மாவட்ட தொழில் மையம், தாட்கோ, மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி, ஆவின் ஆகிய அரசு நிறுவனங்கள் மாற்றுத்திறனாளிகளின் பொருளாதார மேம்பாட்டிற்கான விண்ணப்பங்கள் மற்றும் ஆலோசனைகளும் வழங்கினார்கள்.

இந்நிகழ்வில், மாற்றுத்திறனாளிகள் நல இயக்குநகரத்தின் துணை இயக்குநர் (திட்டங்கள்) கு.இரவிந்திரநாத்சிங், உதவி இயக்குநர் (பணியமர்த்துதல் மற்றும் சிறப்பு பள்ளிகள்) க.ஜெகதீசன், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் இரா.இரவிச்சந்திரன், துணை இயக்குநர் வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையம் மகாராணி, உதவி செயல்படுத்தும் அலுவலர் ரமேஷ் மற்றும் திருச்சிராப்பள்ளி, தஞ்சாவூர், அரியலூர், பெரம்பலுார், நாகப்பட்டினம், திருவாருர், மயிலாடுதுறை மற்றும் கடலூர் ஆகிய 8 மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள், தன்னார்வ தொண்டு நிறுவன பிரதிநிதிகள், மாற்றுத்திறனாளிகள் நலச்சங்க உறுப்பினர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய... https://chat.whatsapp.com/IpuTLRgmGqo0toZpY6O5jW

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision