திருச்சி சரகத்தில் கடந்த இரண்டரை வருடத்தில் 366 பேர் எலி மருந்தால் தற்கொலை!!

திருச்சி சரகத்தில் கடந்த இரண்டரை வருடத்தில் 366 பேர் எலி மருந்தால் தற்கொலை!!

திருச்சி சரகத்திற்கு உட்பட்ட திருச்சி, புதுக்கோட்டை, கரூர், பெரம்பலூர் மற்றும் அரியலூர் ஆகிய 5 மாவட்டங்களில் பல்வேறு காரணங்களுக்காக எலி மருந்து சாப்பிட்டு கடந்த இரண்டரை வருடங்களில் 366 பேர் தற்கொலை செய்துள்ளனர்.2018ம் ஆண்டு 138 நபர்களும் 2019ல் 165 நபர்களும் மற்றும் 2020 மே மாதம் வரை 63 நபர்களும் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.

எனவே எலி மருந்து சாப்பிட்டு தற்கொலை செய்து கொள்பவர்களை தடுக்கும் பொருட்டு எலி மருந்து தயாரிப்பு மற்றும் விற்பனை செய்யும் கம்பெனிகளின் முகவரி மற்றும் அரசு அனுமதி பெற்று எந்தெந்த இடங்களில் விற்பனை செய்யப்படுகிறது என்ற விபரமும் சேகரிக்கப்பட்டுள்ளது. மேலும் திருச்சி சரகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் அரசு அனுமதியின்றி சட்டவிரோதமாக எலி மருந்து விற்பனை செய்யும் கடைகள் மீது சட்டப்படியான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

Advertisement

திருச்சி சரகத்தில் 228 கடைகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதில் திருச்சியில் 160 கடைகளும் புதுக்கோட்டையில் 68 கடைகளும் அடங்கும்.எலி மருந்து சாப்பிட்டு தற்கொலை செய்து கொள்பவர்களை தடுக்கும் முயற்சியாக காவல்துறை துணைத் தலைவரின் உத்தரவின்படி ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள காவலர் நல ஆய்வாளர்களாக அஜீம் (காவல் ஆய்வாளர் திருச்சி), லட்சுமி (காவல் ஆய்வாளர் புதுக்கோட்டை), கிருத்திகா (காவல் ஆய்வாளர் கரூர்) கார்த்திகாயினி (காவல் ஆய்வாளர் பெரம்பலூர்) சுமதி (காவல் ஆய்வாளர் அரியலூர்) ஆகியோர் தற்கொலை தடுப்பு சிறப்பு பிரிவு ஆய்வாளர்களாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.இவர்கள் எலி மருந்து விற்பனை செய்யும் கடைகளில் ஒன்றிணைந்து ஒவ்வொரு மாவட்டத்திற்கும் ஒரு வாட்ஸ்அப் குழுவை உருவாக்கியுள்ளனர்.

திருச்சி சரகத்தில் உள்ள மாவட்ட கண்காணிப்பாளர் தலைமையில் அந்தந்த மாவட்டத்தில் எலி மருந்து விற்பனை செய்யும் கடைக்காரர்கள் வைத்து கூட்டம் நடத்தப்பட்டு அவர்களுக்கு தங்கள் கடைகளில் யாரும் எலி மருந்து வாங்கினால் தற்கொலை தடுப்பு சிறப்பு பிரிவு ஆய்வாளருக்கு தொலைபேசி மூலமோ அல்லது அவர்கள் உருவாக்கி நடத்தப்படும் வாட்ஸப் குழுவின் மூலம் தகவல் கொடுக்க அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. மேற்கண்ட பிரிவில் தகவல் கொடுக்க முடியாத பட்சத்தில் அந்தந்த மாவட்ட தனிப்பிரிவு அலுவலகத்திற்கு திருச்சி 0431-233629, புதுக்கோட்டை 04322-266243 கரூர் 04324-255299, பெரம்பலூர் 04328-224962 மற்றும் அரியலூர் 04329-222106 என்ற எண்ணில் தகவல் தெரிவிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும் எலி மருந்து வாங்குவதற்காக காரணத்தை அறிந்து அவர்கள் யாரும் தற்கொலை எண்ணம் இருப்பதாக கண்டறியப்பட்டால் அவர்களுக்கு ஆலோசனை வழங்கி அதிலிருந்து விடுபடுவதற்கான உதவி செய்ய ஏற்பாடு செய்யப்படும் என்று காவல்துறை துணைத்தலைவர் அவர்களால் தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.