ஓடும் பேருந்தில் 23 ½ பவுன் தங்க நகைகளை திருடிய 4 நபர்கள் கைது - நகைகள் முழுவதும் மீட்பு

ஓடும் பேருந்தில் 23 ½ பவுன் தங்க நகைகளை திருடிய 4 நபர்கள் கைது -  நகைகள் முழுவதும் மீட்பு

கடந்த (17.02.24)-ம் தேதி 18:00 மணிக்கு தனியார் பேருந்தில் மார்க்கெட்டிங் மேனேஜர் ஒருவர் தனது குடும்பத்துடன் உறவினரின் திருமணத்திற்கு 23 ½ பவுன் தங்க நகைகளை டிராவல்ஸ் பேக்கில் வைத்து கொண்டு திருச்சி சத்திரம் பேருந்து நிலையத்திலிருந்து மத்திய பேருந்து நிலையத்திற்கு சென்ற போது தனது டிராவல்ஸ் பேக்கை அடையாளம் தெரியாத நபர்கள் திருடி சென்றுவிட்டதாகவும், பல இடங்களில் தேடிபார்த்தும் கிடைக்கவில்லை என இன்று (19.02.24)-ந் தேதி பாலக்கரை காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின்பேரில் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

திருச்சி மாநகர காவல் ஆணையர் ந.காமினி, மேலான உத்தரவின்படி டிராவல்ஸ் பேக்கில் வைத்திருந்த நகை பையை திருடிய எதிரிகளை கைது செய்ய காவல் ஆய்வாளர் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டது. பேருந்தில் இருந்த சிசிடிவி காட்சிகளையும், சம்பவ நடைபெற்ற இடத்தின் வழிநெடுகளிலும் உள்ள சிசிடிவி காட்சிகளையும் ஆய்வு செய்தும் விசாரணை செய்தும் இந்த திருட்டு குற்றத்தை ஸ்ரீரங்கம் அழகிரிபுரத்தை சேர்ந்த 1. தென்னூரைச்சேர்ந்த அப்துல் அஜீஸ் (எ) வெள்ளை ராஜா (42), த.பெ. முகமது அலி,  2. தென்னூர் காஜாதோப்பைச்சேர்ந்த சூசைராஜ் (34), த.பெ.இன்னாசி, 

3. அரியமங்கலம் மதினா பள்ளிவாசல் தெருவை சேர்ந்த யாசர் அரபாத் (29), த.பெ.சிக்கந்தர் பாஷர்,  4. சேக் தாவுத் (எ) கோலி சேக் (38), த.பெ.பீர் முகமது ஆகிய நான்கு நபர்கள் திட்டமிட்டு நகை இருந்த டிராவல் பேக்கை திருடி சென்றுள்ளது தெரியவந்து, மேற்படி நான்கு எதிரிகளும் கைது செய்யப்பட்டு அவர்களிடமிருந்து திருடு போன 23 ½ பவுன் தங்க நகைகள் மீட்கப்பட்டது. மேலும் அவர்களுக்கு திருட்டு பொருட்களை மறைக்கவும், விற்று கொடுக்கவும் உதவியாக இருந்த பீமநகரைச்சேர்ந்த அன்வர் சதாக் (49), த.பெ. தயுப்கான் என்பவரையும் கைது செய்தனர். மேற்படி ஐந்து எதிரிகளும் நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

இந்த திருட்டு குற்ற சம்பவத்தில் ஈடுபட்டவர்களை துரிதமாக செயல்பட்டு கைது செய்தும், நகைகளை மீட்ட தனிப்படையினரை திருச்சி மாநகர காவல் ஆணையர் வெகுவாக பாராட்டினார். மேலும் திருச்சி மாநகரில் இதுபோன்ற திருட்டு குற்றங்களில் ஈடுபடுவோர் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என திருச்சி மாநகர காவல் ஆணையர் கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளார்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய...

https://chat.whatsapp.com/DV3MG0TGN9x0CYy54GyO6a

#டெலிகிராம் மூலமும் அறிய....

https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision