Site Logo mobile
Search Icon
Mobile Gif
News

500 சவரன் தங்கம், ரூ.2 கோடி காணிக்கை மாயம்: பூசாரிகள் மீது நடவடிக்கை கோரி மனு

திருச்சி மால்வாய் கிராமத்தில் உள்ள அய்யனார் ஸ்ரீ பூமிபாலகன் திருக்கோவில் சொத்துக்களை முறைகேடு செய்த பூசாரிகள் மீதும், அதற்கு துணை போகும் இந்து சமய அறநிலை துறை அதிகாரிகள் மீதும் நடவடிக்கை எடுக்கவேண்டும். இக்கோரிக்கைகளை வலியுறுத்தி போராடிவருபவர்கள் மீது போடப்பட்டுள்ள பொய்வழக்குகளை ரத்துசெய்துவிட்டு, பொய் வழக்குகளை பதிவு செய்த காவல் ஆய்வாளர் மற்றும் மாவட்ட காவல் துணை கண்காணிப்பாளர் மீது நடவடிக்கை எடுக்கவேண்டுமென கோரி மால்வாய் கிராம மக்கள் திருச்சி ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

இந்துசமய அறநிலையத்துறைக்கு சொந்தமான அய்யனார் ஸ்ரீபூமிபாலகன் திருக்கோவில் மால்வாய் ஊராட்சியில் அமைந்துள்ளது. இக்கோவிலுக்கு சொந்தமான சுமார் 500 சவரன் ஆபரண தங்கம் மற்றும் ஒருகோடி ரூபாய்க்கு மேலான உண்டியல் காணிக்கை, கோவில் திருப்பணி நன்கொடையாக வசூல் செய்யப்பட்ட சுமார் ஒருகோடி ரூபாய் ஆகியவற்றை ஆலய பரம்பரை அறங்காவலரும், கோவில் பூசாரியுமான கே. பாஸ்கரன் என்பவரும், அவரது அண்ணன் மகன்களான தனபால், சுரேஸ் என்பவர்களும் இணைந்து முறைகேடு செய்திருப்பதாகவும், அதற்கு கோவில் செயல் அலுவலர் எஸ்.செல்வம், உதவி ஆணையர் உமா உள்ளிட்டோர் உடந்தையாக இருந்ததாகவும் கிராம மக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுத்து கோவில் சொத்துக்களை பாதுகாக்கவேண்டுமென வலியுறுத்தி, உண்ணாவிரதம், சாலைமறியல் உள்ளிட்ட போராட்டங்களை நடத்தியும் எவ்வித பலனும் கிடைக்கவில்லை என கிராமமக்கள் தங்களது வேதனையை வெளிப்படுத்தினார்கள்.

மேலும், கோவில் சொத்துக்களை பாதுகாக்க வலியுறுத்தி போராட்டம் நடத்தியவர்களையும், அவர்களது குடும்பத்தில் உள்ள பெண்களையும் போலீஸார் கைதுசெய்து, அவர்கள் மீது பொய்வழக்குகளை பதிவுசெய்து ஜனநாயகரீதியான போராட்டங்களை முடக்கப்பார்கிறார்கள்.

அவ்வாறாக போடப்பட்டுள்ள பொய்வழக்குகளை ரத்துசெய்துவிட்டு, பொய் வழக்குகளை பதிவு செய்த காவல் ஆய்வாளர் மற்றும் மாவட்ட காவல் துணை கண்காணிப்பாளர் மீது நடவடிக்கை எடுக்கவேண்டுமென கோரி கிராம மக்கள் திருச்சி ஆட்சியரிடம் இன்று மனு அளித்தனர்.

சம்பந்தப்பட்ட திருக்கோவில் இந்து சமய அறநிலை துறை ஆளுமையின் கீழ் எப்போது கையகப்படுத்தப்பட்டது? என்ற கேள்விக்கு… இது குறித்து தகவல் திருக்கோவில் அலுவலகத்தில் இல்லை எனவும்,

அதுபோல 1972 ஆம் ஆண்டு தேர்த்திருவிழா நடந்த போது, பூசாரி கருப்பு உடையார் வசம் இருந்த, கோவிலுக்கு சொந்தமான தங்கம் மற்றும் வெள்ளி பொருட்கள் கணக்கீடு செய்யப்பட்டுள்ளதா? என்ற கேள்விக்கு… யூகத்தின் அடிப்படையிலான கேள்விகளுக்கு பதில் வழங்க இயலாது எனவும்,

கடந்த 1999 ஆம் ஆண்டு சார்பு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு மாறாக, கோவிலின் வங்கி கணக்கு வரவு – செலவு பரிவர்த்தனை செய்ய பூசாரி தரப்பினரை மட்டும் அனுமதித்தது ஏன்? என்ற கேள்விக்கு… இதுகுறித்து தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கேள்வியே எழுப்ப இயலாது எனவும் இந்து சமய அறநிலைத்துறை உதவி ஆணையர் பதிலளித்துள்ளார்.

இந்நிலையில் கோவில் சொத்துக்களை முறைகேடு செய்தவர்களிடம் இருந்து மீட்டு, அதனை பாதுகாக்க வலியுறுத்தி, இன்று நடந்த மக்கள் குறைதீர் நாள் கூட்டத்தில், திருச்சி மாவட்ட ஆட்சியரை நேரில் சந்தித்து மால்வாய் கிராம மக்கள் கோரிக்கை மனு அளித்தனர்.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF

டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision

    slide image

    Comments

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *