Site Logo mobile
Search Icon
Mobile Gif
News

மேற்கு ஆபிரிக்காவில் உள்ள மாலி நாட்டில் தீவிரவாதிகளால் கடத்தப்பட்ட தமிழ்நாட்டைச் சேர்ந்த இந்தியர்கள் என் முயற்சியால் மீட்பு!

தமிழ்நாட்டின் தூத்துக்குடி மற்றும் தென்காசி மாவட்டங்களைச் சேர்ந்த திரு. புதியவன் சுடலை, திரு. பொன்னுதுரை பாக்கியராஜ், திரு. பேச்சிமுத்து முத்துசாமி, திரு. ஈசக்கிராஜா மற்றும் திரு. தளபதி சுரேஷ் முருகேசன் ஆகிய ஐந்து இந்தியர்கள் வேலைவாய்ப்பிற்காக மேற்கு ஆப்பிரிக்காவில் உள்ள மாலி நாட்டிற்கு சென்றிருந்த நிலையில், கடந்த 06.11.2025 அன்று அவர்கள் பணியாற்றிய இடத்தில் தீவிரவாதிகளால் கடத்தப்பட்ட சம்பவம் அவர்களது குடும்பத்தினரால் எனது கவனத்திற்கு கொண்டு வரப்பட்டது.

இதையடுத்து, இந்த விவகாரத்தை அவசரமானதாகக் கருதி 19.11.2025 அன்று இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் திரு. ஜெய்சங்கர் அவர்களிடம் நான் கோரிக்கை கடிதம் அளித்து, சம்பந்தப்பட்ட நாட்டில் உள்ள இந்திய தூதரகம் மற்றும் அதிகாரிகள் மூலம் உடனடி நடவடிக்கை எடுத்து, கடத்தப்பட்ட இந்தியர்களை கண்டுபிடித்து பாதுகாப்பாக மீட்டு இந்தியாவிற்கு கொண்டு வர வேண்டுமென கேட்டுக் கொண்டேன். இதன் தொடர்பாக 12.12.2025 அன்று மீண்டும் நினைவூட்டும் கடிதத்தையும் வழங்கி விரைந்து நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொண்டேன்.

அதன் தொடர்ச்சியாக வெளியுறவுத்துறை அமைச்சகம் மற்றும் மாலியில் உள்ள இந்திய தூதரகம் எடுத்த முயற்சிகளின் விளைவாக, கடத்தப்பட்ட ஐந்து பேரில் நான்கு இந்தியர்கள் தீவிரவாதிகளிடமிருந்து விடுவிக்கப்பட்டு 12.03.2026 அன்று இந்தியா திரும்பியுள்ளதாக அதிகாரப்பூர்வமாக எனக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

துரதிருஷ்டவசமாக, கடத்தப்பட்டவர்களில் ஒருவரான திரு. முத்துசாமி பெச்சிமுத்து அவர்கள் தீவிரவாதிகளின் பிடியில் இருந்தபோது மலேரியா நோயால் 04.03.2026 அன்று உயிரிழந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவரது உடல் அங்கு இந்து சமய மரபுகளின்படி அடக்கம் செய்யப்பட்டுள்ளதாக இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது.

இந்த விவகாரத்தில் உடனடி நடவடிக்கை எடுத்து நான்கு இந்தியர்களை பாதுகாப்பாக மீட்க முக்கிய பங்கு வகித்த வெளியுறவுத்துறை அமைச்சர் திரு. ஜெய்சங்கர் அவர்களுக்கும், வெளியுறவுத்துறை அமைச்சகத்திற்கும், மாலியில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகளுக்கும் எனது மனப்பூர்வமான நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

மேலும் உயிரிழந்த திரு. முத்துசாமி பெச்சிமுத்து அவர்களின் ஆன்மா சாந்தியடைய இறைவனை வேண்டி, அவருடைய குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF

டெலிகிராம் மூலமும் அறிய….

https://t.me/trichyvision https://www.threads.net/@trichy_vision

    slide image

    Comments

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *