அரசு பேருந்து படிக்கட்டில் தொங்கிய மாணவன் - பெண்ணின் கை விரல் துண்டானது

அரசு பேருந்து படிக்கட்டில் தொங்கிய மாணவன் - பெண்ணின் கை விரல் துண்டானது

திருச்சி சத்திரம் பேருந்து நிலையத்தில் இருந்து ஓலையூருக்கு அரசு மாநகர பேருந்து ஒன்று புறப்பட்டது. திருச்சி பாரதியார் சாலையில் உள்ள பள்ளி அருகே உள்ள பேருந்து நிறுத்தத்தில் அந்த பேருந்து நின்ற போது அளவுக்கு அதிகமாக பள்ளி மாணவர்கள் ஏறியுள்ளனர். அவர்களை ஓட்டுநரும், நடத்துனரும் இறங்கும்படி கூறியும் அவர்கள் கேட்க வில்லை. இதனால் ஓட்டுநர் பேருந்தை ஜங்ஷன் நோக்கி ஒட்டி வந்தார். மாணவர்கள் படிக்கட்டில் தொங்கியபடியே பயணம் செய்தனர்.

இந்தநிலையில், ரெயில் அருங்காட்சியகத்தை கடந்து, ரெயில் நிலைய 2-வது நுழைவு வாயில் முன் இரும்பு தடுப்புகள் போடப்பட்டு இருந்தது. பேருந்து அந்த தடுப்புகளை கடந்து சென்ற போது, படிக்கட்டில் தொங்கிய மாணவனின் புத்தக பை இரும்பு தடுப்பில் சிக்கியது. இதனால் பஸ் சென்ற வேகத்தில் இரும்பு தடுப்பு கீழே விழுந்தது.

அப்போது, இரும்பு தடுப்பு அருகே நின்று கொண்டிருந்த பண்ருட்டியை சேர்ந்த ஜெயபால் மனைவி கொளஞ்சி (வயது 55) மீது விழுந்தது. இதில் அவருடைய இடது கையின் சுண்டுவிரல் துண்டானது. இதைத்தொடர்ந்து அந்தவழியாக வந்தவர்கள், அந்த பெண்ணை மீட்டு சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்த புகாரின் பேரில் அரசு பேருந்து ஓட்டுநரிடம் பாபுவிடம் திருச்சி தெற்கு போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் விசாரணை நடத்தினர்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய.... https://chat.whatsapp.com/GgA8w690Wqd7IwIEsO6ZZ5
#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvisionn