சாலை விபத்தில் உயிரிழந்த திருச்சி செய்தியாளர் கோபியின் மனைவிக்கு அரசு வேலை - அமைச்சர் உறுதி

சாலை விபத்தில் உயிரிழந்த திருச்சி செய்தியாளர் கோபியின் மனைவிக்கு அரசு வேலை - அமைச்சர் உறுதி

திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் தினமணி செய்தியாளராகப் பணிபுரிந்து வந்த இ.கோபி (வயது 37) நேற்று (07.10.2021) சாலை விபத்தில் மரணமடைந்தார். திருச்சிராப்பள்ளி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்கு பிறகு அவரது உடலுக்கு நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு, பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, மாவட்ட ஆட்சித்தலைவர் சு.சிவராசு ஆகியோர் மலர் மாலை வைத்து அஞ்சலி செலுத்தி அன்னாரது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினர்.

மறைந்த கோபியின் குடும்பத்தினருக்கு நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் தனது சொந்த நிதியிலிருந்து ரூ.25 ஆயிரம், மாவட்ட ஆட்சித்தலைவர் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் ரூ.10 ஆயிரம் நிதியுதவி வழங்கினர். மேலும், அன்னாரது குடும்பத்தினருக்குத் தேவையான உதவிகளைச் செய்து கொடுப்பதாக 
அமைச்சர் பெருமக்கள் தெரிவித்தனர். 

இந்நிகழ்வில் மாநகராட்சி ஆணையர் ப.மு.நெ.முஜிபுர் ரகுமான், மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வர் டாக்டர் வனிதா, மாநகராட்சி முன்னாள் துணை மேயர் மு.அன்பழகன், செய்தி மக்கள் தொடர்புத் துறையின் சார்பில் உதவி இயக்குநர் த.செந்தில்குமார், உதவி மக்கள் தொடர்பு அலுவலர் செ.கார்த்திக்ராஜ், மாவட்டப் பிரமுகர் வைரமணி மற்றும் அனைத்துப் பத்திரிகையாளர்கள் உட்பட பலர் அஞ்சலி செலுத்தினர்.

இதனையடுத்து கோபியின் மனைவி இந்துமதிக்கு உள்ளாட்சித் துறையில் வேலை பெற்றுத் தருவதாக அமைச்சர் கே.என்.நேரு உறுதியளித்துள்ளார். பின்னர் செய்தியாளர் கோபியின் உடல் திருச்சியிலிருந்து தருமபுரிக்கு ஆம்புலன்சில் புறப்பட்டது.

திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய....
https://chat.whatsapp.com/IyQSibsRvD11s0WNXsg2A7

டெலிகிராம் மூலமும் அறிய...
https://t.me/trichyvisionn