நீண்ட காலமாக பூட்டிய நிலையில் உள்ள சமயபுரம் சுங்கசாவடி கழிவறைகள்- வாகன ஓட்டுநர்கள், பயணிகள் அவதி

நீண்ட காலமாக பூட்டிய நிலையில் உள்ள சமயபுரம் சுங்கசாவடி கழிவறைகள்- வாகன ஓட்டுநர்கள், பயணிகள் அவதி

திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் நாள்தோறும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் கடந்து செல்கின்றன. வாகனத்தில் செல்பவர்கள் இயற்கை உபாதைகளை கழிக்க சுங்கச்சாவடிகளில் அமைக்கப்பட்டுள்ள கழிவறைகளை பயன்படுத்தி வந்தனர்.

இந்நிலையில் திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சமயபுரம் சுங்கச்சாவடியில் உள்ள ஆண், பெண் கழிவறைகள் முறையான பராமரிப்பு மற்றும் மின்வசதி இல்லாமல் நீண்ட காலமாக பூட்டியே கிடக்கிறது. இதனால் அப்பகுதி சாலையை ஓரங்களை இயற்கை உபாதைகளை கழிப்பதற்கு வாகன ஓட்டிகள் பயன்படுத்தக்கூடிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

வாகனங்களில் வருபவர்கள் இயற்கை உபாதைகளை கழிக்க பெட்ரோல் நிலையங்கள் மற்றும் உணவகங்களில் உள்ள கழிவறைகளில் பயன்படுத்துவதற்கு அனுமதிக்க வேண்டும் என மத்திய அரசு உத்தரவிட்டிருந்தது. இருப்பினும் ஒருசில பெட்ரோல் நிலையங்கள் மற்றும் உணவகங்கள் கட்டணம் வசூலிப்பதால் வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்திற்கு ஆளாகின்றனர்.

மேலும் சுங்கச்சாவடி கழிவறைகள் பயன்பாட்டில் இல்லாததால் சாலை ஓரங்களில் இயற்கை உபாதை கழிக்க வேண்டிய சூழ்நிலைக்கு வாகன ஓட்டிகள் மற்றும் பயணிகள் தள்ளப்பட்டுள்ளனர். சுங்கச்சாவடியை கடக்கும் வாகனங்களிடம் அதிக அளவு கட்டணம் வசூலிப்பதில் அதிக ஆர்வம் காட்டும் இந்த தேசிய நெடுஞ்சாலை ஆணையம் வாகன ஓட்டிகள் மற்றும் பயணிகளுக்கு அடிப்படை வசதிகள் செய்து தருவதில் கவனம் செலுத்துவார்களா என வாகன ஓட்டிகள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய:
https://chat.whatsapp.com/D0TGphikme7AsbscoQstiY