திருச்சியில் இதுவரை சுமார் 700 ஊழியர்களை வீட்டிற்கு அனுப்பிய கால் சென்டர்!!

திருச்சியில் இதுவரை சுமார் 700  ஊழியர்களை வீட்டிற்கு அனுப்பிய கால் சென்டர்!!

திருச்சியில் முன்னறிவிப்பின்றி சுமார் 700 ஊழியர்களை வேலையிலிருந்து நீக்கியதாக கால் சென்டர் நிறுவனத்தின் மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது.திருச்சி கன்டோன்மென்ட் பாரதிதாசன் சாலையில் "கார்வி டஜிட் கனெக்ட்" என்ற தனியார் கால் சென்டர் செயல்பட்டு வந்தது. ஹைதராபாத்தை தலைமையிடமாகக் கொண்டு இந்த நிறுவனம் திருச்சியில் கடந்த இரண்டு வருடமாக செயல்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் இந்நிறுவனத்தில் சுமார் 800க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணியாற்றி வந்தனர். ஏர்டெல் நிறுவனத்தின் டிடிஎச், மொபைல் பிரிவு ஆகியவற்றிக்கு கால் சென்றதாக ஒப்பந்த அடிப்படையில் செயல்பட்டு வந்த இந்நிறுவனம் கடந்த மாதம் கொரோனா வைரஸ் காரணமாக நிறுவனத்திற்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது.

Advertisement

எனினும் 10 நபர்கள் மட்டுமே அங்கு வேலை பார்த்து வந்தனர். இந்நிலையில் கடந்த மே 6ம் தேதியன்று பணிக்கு வருமாறு ஊழியர்களுக்க அழைப்பு விடுத்து இருந்தது ஆனால் ஊரடங்கு பிரச்சனை காரணமாக பலர் வேலைக்கு வர இயலாத சூழ்நிலையில் இருந்தது. இவ்வாறு வேலைக்கு வராத 300 ஊழியர்களை உடனடியாக இந்நிறுவனம் வேலையில் இருந்து நீக்கியது. அடுத்த கட்டமாக கடந்த மே 31ம் தேதி அனைத்து ஊழியர்களும் பணிக்கு வந்து இருந்தனர்.  அப்போது இந்நிறுவனத்தின் தலைமை நிர்வாகி ஏர்டெல் நிறுவனத்துடன் ஒப்பந்தம் ரத்தாகிவிட்டது. இதனால் கால் சென்டர் மூடப்படுகிறது. இதனால் பணியிலிருந்து  நீங்கள் நீக்கபடுகிறீர்கள். உடனடியாக வெளியில் செல்லுங்கள் என்று உத்தரவிட்டார். இதனைத் தொடர்ந்து ஊழியர்களின் நிறுவனத்தின் மனித மேம்பாட்டு பிரிவு அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.ஒரு சில நாட்களில் இதற்கு தீர்வு காண்பதற்காக அவர்கள் உறுதியளித்ததை தொடர்ந்து ஊழியர்கள் கலைந்து சென்றனர். இந்நிலையில் இன்று சுமார் 300 ஊழியர்களும் அந்நிறுவனத்திற்கு திரண்டு வந்தனர்.

இதுகுறித்து ஊழியர்கள் சிலர் கூறுகையில்…இந்த மாதிரியான கொரோனா காலகட்டத்தில் வேலை இழந்தால் நாங்கள் என்ன செய்வோம். முன்னறிவிப்பின்றி வேலைக்கு வந்த உடன் வீட்டிற்கு செல்ல சொன்னால் எங்கள் குடும்பத்தை எப்படி காப்பாற்றுவது? என்கின்றனர். மேலும் இந்நிறுவனம் ஜிஎஸ்டி சம்பந்தமான வரிகளை கட்டாமல் தற்சமயம் ஒரு தெளிவான முடிவு எடுக்க முடியாமல் ஊழியர்கள் எங்களையும் அலைக்கழித்து வருகிறது. வேலையிலிருந்து நீக்குவதால் பணப்பயன், சான்றிதழ், சம்பளம் எதுவுமே வழங்கப்படவில்லை என்றும் தெரிவிக்கின்றனர் வேறுசிலர்!

தகவலறிந்த கன்டோன்மென்ட் காவல்துறையினர் விரைந்து வந்து ஊழியருடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டன. இதனைத் தொடர்ந்து நிறுவனத்தின் மீது ஊழியர்கள் காவல்துறையில் புகார் அளித்தனர்.காவல்துறையினர் நிறுவனத்தின் தலைமை நிர்வாகிகள் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளனர்.இதன்பின் காவல்துறையினர் பேசியதால் போராட்டத்தை கைவிட்டு வீட்டுக்கு திரும்பியுள்ளார். ஒரு சில நாட்களில் தீர்வு காண்பதற்காக காவல்துறை உத்தரவாதம் அளித்ததும் ஊழியர்கள் இந்த முடிவு எடுத்தனர். திடீரென தனியார் நிறுவன ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பாரதிதாசன் சாலையில் நேற்று பரபரப்பாக காணப்பட்டது.