Site Logo mobile
Search Icon
Mobile Gif
News

109 ஊரக குடியிருப்புகளுக்கான குடிநீர் திட்டம்: ஆட்சியர் ஆய்வு

திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் உள்ள இலால்குடி மற்றும் புள்ளம்பாடி ஒன்றியங்களைச் சார்ந்த 109 ஊரக குடியிருப்புகளுக்கு கொள்ளிடம் ஆற்றில் இருந்து குடிநீர் வழங்க புதிய கூட்டுக் குடிநீர் திட்டம் தொடங்கப்பட்டு 109 ஊரக குடியிருப்புக்களுக்கு குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது.

இத்திட்டத்தின் மூலம் திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் உள்ள இலால்குடி ஒன்றியத்தைச் சார்ந்த 26 ஊராட்சிகளுக்கு உட்பட்ட 59 குடியிருப்புகளுக்கும், புள்ளம்பாடி ஒன்றியத்தில் உள்ள 24 ஊராட்சிகளுக்கு உட்பட்ட 50 குடியிருப்புகளுக்கும் என 109 குடியிருப்புகள் பயன்பெறும் வகையில் இத்திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இத்திட்டத்தின் மூலம் நாளொன்றுக்கு நபர் ஒருவருக்கு 55 லிட்டர் வீதம் தற்போதைய மக்கள் தொகையின் குடிநீர் தேவையான 8.30 மில்லியன் லிட்டர் குடிநீர் 15,454 வீடுகளுக்கு குடிநீர் குழாய் இணைப்புகள் வழங்கப்பட்டு குடிநீர் விநியோகம் சீராக வழங்கப்பட்டு வருகிறது.

இத்திட்டத்தில் நாளொன்றுக்கு தேவையான 8.30 மில்லியன் லிட்டர் குடிநீரை திருச்சிராப்பள்ளி மாவட்டம், இலால்குடி ஒன்றியம் கீழ்அன்பில் அருகில் கொள்ளிடம் ஆற்றில் அமைக்கப்பட்ட நீர் சேகரிப்பு கிணறு மூலம் வழங்கப்பட்டு வருகிறது.

மேலும், நீர்சேகரிப்பு கிணற்றின் மூலம் பெறப்படும் நீர் நகர் கிராமத்தில் உள்ள புதிதாக அமைக்கப்பட்டுள்ள 5.25 இலட்சம் கொள்ளளவு கொண்ட தரைமட்ட நீர் உந்து நிலையத்தில் குடிநீர் சேகரிக்கப்பட்டு, அதிலிருந்து 3 நீர் வழங்கும் நிலையம் மூலமாக 43 தரைமட்ட நீர்த்தேக்க தொட்டிகளுக்கு நீரேற்று குழாய்கள் அமைக்கப்பட்டு நீரேற்றம் செய்யப்படுகிறது மற்றும் பகிர்மான குழாய் மூலம் பயன்பாட்டிலுள்ள 260 மேல்நிலை நீர்தேக்கத் தொட்டிகள் மற்றும் புதியதாக கட்டப்பட்ட 15 மேல்நிலை நீர்தேக்க தொட்டிகளுக்கும் குடிநீர் ஏற்றப்பட்டு பிறகு மேல்நிலை நீர்தேக்க தொட்டிகளில் இருந்து ஏற்கனவே பயன்பாட்டில் உள்ள மற்றும் புதியதாக அமைக்கப்பட்டுள்ள பகிர்மான குழாய்கள் மூலம் பயனாளிகளுக்கு குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது.

109 ஊரக குடியிருப்புக்களுக்கான கூட்டுக் குடிநீர் வழங்கிடும் வகையில் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் சார்பில் கீழ்அன்பில் பகுதியில் அமைந்துள்ள தலைமை நீரேற்று நிலையத்தின் செயல்பாடுகளை மாவட்ட ஆட்சித்தலைவர் வே.சரவணன், அவர்கள் இன்று (16.12.2025) நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து பொதுமக்களுக்கு சீரான குடிநீர் விநியோகம் வழங்கிடும் வகையில் பணிகளை மேற்கொள்ள அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

இந்நிகழ்வில், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் நிர்வாக பொறியாளர் வீ.பரிமளாதேவி, உதவி நிர்வாக பொறியாளர் ஆர்.தர்மராஜன், உதவி பொறியாளர் பி.சுசித்ரா, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் உள்ளிட்ட அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF

டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision

    slide image

    Comments

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *