நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என். நேரு, திருச்சியில் முதல்முறையாக 11 தாழ்தள பேருந்துகளை இன்று துவக்கி வைத்தார். இப்பேருந்துகளில் தாழ்தள வசதி, மாற்றுத்திறனாளிகள் ஏறி இறங்க சறுக்கு நிலை, தானியங்கி கதவு, ஓட்டுநர் அறிவிப்பு, சிசிடிவி கண்காணிப்பு உள்ளிட்ட நவீன வசதிகள் அமைக்கப்பட்டுள்ளன.
தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர், “திருச்சி பஞ்சபூதூர் பேருந்து நிலைய வளாகத்தில் கட்டப்பட்டு வரும் வணிக வளாகப் பணிகள் மேலும் 2 மாதங்களில் நிறைவுபெற்று திறக்கப்படும். தந்தை பெரியார் காய்கறி அங்காடி கட்டுமான பணிகளை விரைவுபடுத்த அதிகாரிகள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்” என்றார்.
அதிமுக ஒருங்கிணைப்பாளர் இ.பி.எஸ். குறித்த கேள்விக்கு, “திமுக கூட்டணியில் கருத்து வேறுபாடு இல்லை; அதிமுகவில்தான் கருத்து வேறுபாடு உள்ளது. அதனால் தான் ஓ.பி.எஸ். இபி.எஸ்ஸை விட்டு வெளியேறினார். இ.பி.எஸ். கனவு பலிக்காது; மீண்டும் தமிழக முதலமைச்சராக மு.க. ஸ்டாலின் பதவியேற்பார். முதலமைச்சர் கூட்டணி கட்சிகளை அரவணைத்து வழிநடத்தி வருகிறார்” என்றார்.
“திமுகவை விமர்சித்தால் தான் தன்னை அடையாளம் காட்டிக்கொள்ள முடியும் என அன்புமணி ராமதாஸ் நினைத்து தொடர்ந்து விமர்சித்து வருகிறார்” என்றும், “ஸ்டாலின் திட்டங்களை மக்கள் மிகுந்த வரவேற்புடன் ஏற்றுக்கொண்டுள்ளனர். நாளை முதலமைச்சர் ரேஷன் பொருட்களை இல்லம் தோறும் வழங்கும் திட்டத்தை தொடங்குகிறார். திமுக அரசு வாக்குறுதிகளை நிறைவேற்றி வருகிறது” என்றும் குறிப்பிட்டார்.
பிரதமர் நரேந்திர மோடி மீண்டும் தமிழகத்திற்கு வருவது குறித்து, “ஏற்கனவே எட்டு முறை வந்துள்ளார். அவர் வந்தாலும், கடந்த முறை 40-க்கும் 40 தொகுதிகளையும் திமுக கூட்டணி வென்றது” என்று தெரிவித்தார்.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
டெலிகிராம் மூலமும் அறிய….
Comments