திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே பெரிய சூரியூரில், ஜனவரி 15ஆம் தேதி துணை முதல்வரும் விளையாட்டுத்துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் புதிய ஜல்லிக்கட்டு மைதானத்தை திறந்து வைக்க உள்ள நிலையில், அதற்கான முன்னேற்பாடு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
இந்தப் பணிகளை மாவட்ட ஆட்சியர் சரவணன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
தமிழகத்தின் பாரம்பரிய விளையாட்டுகளில் ஒன்றான ஜல்லிக்கட்டு, தைப்பொங்கலை முன்னிட்டு தமிழகம் முழுவதும் உற்சாகமாக நடைபெறுவது வழக்கம். அந்த வகையில், திருச்சி மாவட்டத்தில் முதன்மையான மற்றும் சிறப்புமிக்க ஜல்லிக்கட்டு போட்டி, பெரிய சூரியூரில் உள்ள ஸ்ரீ நற்கடல்குடி கருப்பண்ணசாமி கோயில் திருவிழாவை முன்னிட்டு தை மாதம் 2ஆம் நாள் விமர்சையாக நடத்தப்பட்டு வருகிறது.
இதுவரை கிராம திடலில் நடைபெற்று வந்த ஜல்லிக்கட்டு போட்டிக்காக நிரந்தர மைதானம் அமைத்து தர வேண்டும் என, ஊர் பொதுமக்கள் சார்பில் தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.
அதன் அடிப்படையில், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் ஒப்புதலுடன், விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சகத்தின் கீழ் ரூ.3 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, புதிய ஜல்லிக்கட்டு மைதானம் கட்டும் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. தற்போது கட்டுமான பணிகள் நிறைவடைந்து, திறப்பு விழாவிற்கு மைதானம் தயாராகியுள்ளது.
வரும் ஜனவரி 16ஆம் தேதி நடைபெற உள்ள ஜல்லிக்கட்டு போட்டிக்காகவும், பாதுகாப்பு, பார்வையாளர்கள் வசதி, வாடிவாசல், தடுப்பு கேலரிகள் உள்ளிட்ட பல்வேறு முன்னேற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
மேலும் இந்த ஆண்டு நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டியில்,
முதல் பரிசாக கார்,
இரண்டாம் பரிசாக டூவீலர் வழங்கப்பட உள்ளது.
அதேபோல் களத்தில் பங்கேற்கும் அனைத்து காளைகளுக்கும் வேஷ்டி, சேலை பரிசாக வழங்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision



Comments