Site Logo mobile
Search Icon
Mobile Gif
News

திருவெறும்பூர் ரயில் நிலையம்–பேருந்து நிலையம் இணைக்கும் புதிய மாற்றுப்பாதை விரைவில் திறப்பு

திருவெறும்பூர் பேருந்து நிலையத்திலிருந்து ரயில் நிலையம் செல்லும் தற்போதைய சாலை மிகவும் குறுகலாகவும், தூரமான பாதையாகவும் உள்ளதாக திருவெறும்பூர் ரயில்பயனாளர்கள் சங்கத்தினர் எனது கவனத்திற்குக் கொண்டு வந்தனர்.

அந்தப் பகுதியில், ரயில் நிலையம் முன்பாக உள்ள சிமென்ட் சாலையிலிருந்து சில மீட்டர் தூரத்தில் உள்ள காவேரி நகர் தார் சாலையுடன் இணைப்பதன் மூலம், பொதுமக்களுக்கு பேருந்து நிலையத்திலிருந்து விரைந்து ரயில் நிலையம் செல்ல இயலும் என்றும் தெரிவித்தனர்.இதையடுத்து, கடந்த 09.06.2025 அன்று நான், ரயில்வே அதிகாரிகளுடன் இணைந்து திருவெறும்பூர் ரயில் நிலையத்தில் ஆய்வு மேற்கொண்டேன். அப்போதைய திருச்சி பிரிவு திருச்சி கோட்ட ரயில்வே மேலாளர் அவர்கள், அந்த இணைப்பை ஏற்படுத்த ஒப்புதல் தெரிவித்தார்.

பின்னர், இது குறித்து அப்போதைய மாநகராட்சி ஆணையர், தற்போதைய மாவட்ட ஆட்சியரிடம் 10.06.2025 -இல் எனது தலைமையில் நடந்த மாவட்ட வளர்ச்சி – ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக் குழு (DISHA) கூட்டத்தில் எடுத்துரைத்தேன்.

அப்பொழுது, அந்த மாற்றுப் பாதையின் நுழைவுப் பகுதி அரசின் நிலமாக இருப்பதால், 10 அடி வரை விரிவாக்கம் செய்யலாம் என்ற எனது ஆலோசனையை ஏற்று செய்து தருவதாக அப்போதைய மாநகராட்சி ஆணையர் என்னிடம் உறுதி அளித்தார்.

அதனைத் தொடர்ந்து, 13.10.2025 அன்று எனது தலைமையில் நடந்த DISHA கூட்டத்திலும், மீண்டும் இக்கருத்தை புதிய மாநகராட்சி ஆணையர் மற்றும் ரயில்வே அதிகாரிகள் முன்னிலையில் எடுத்துரைத்தேன்.

இப்போது, புதிய கோட்ட ரயில்வே மேலாளர் பொறுப்பேற்றிருப்பதால், 26.10.2025 அன்று திருச்சியில் உள்ள அவரது அலுவலகத்தில் சந்தித்தபோது, மீண்டும் இக்கோரிக்கையை வலியுறுத்தி இடத்தை நேரில் பார்வையிடுமாறு கேட்டுக்கொண்டேன்.

இதனைத் தொடர்ந்து இன்று (01.11.2025) காலை 9 மணிக்கு கோட்ட ரயில்வே மேலாளருடன் திருவெறும்பூர் ரயில் நிலையத்தைப் பார்வையிட்டோம். இந்த ஆய்வின்போது கோட்ட ரயில்வே மேலாளர் அவர்கள், இது உண்மையில் பொதுப் பயன்பாட்டிற்கான நியாயமான கோரிக்கை. ஆகவே, உடனடியாகத் தீர்வு காணப்படும் என்று உறுதியளித்தார்.

இந்த நேரடி ஆய்வில் பங்கேற்ற திருச்சி கோட்ட ரயில்வே மேலாளர், ரயில் பயனாளர் சங்கங்களைச் சேர்ந்த நிர்வாகிகள், அப்பகுதி மாநகராட்சி உறுப்பினர் மற்றும் ரயில்வே துறை அதிகாரிகளுக்கும் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கின்றேன்.

இந்த ஆய்வின்போது திருச்சி மாநகர் மாவட்டச் செயலாளர் அண்ணன் வெல்லமண்டி இரா.சோமு, திருச்சி தெற்கு மாவட்டச் செயலாளர் மணவை தமிழ்மாணிக்கம், திருச்சி வடக்கு மாவட்டச் செயலாளர் டி.டி.சி.சேரன் மற்றும் கழக முன்னோடிகள் உடன் இருந்தனர் என்று கூறினார் துரை வைகோ அவர்கள்.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF

டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision

    slide image

    Comments

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *