திருச்சி மாவட்ட ஆட்சியரக வளாகத்தில் சமூக நலத்துறை சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் உயர்நிலைப் பள்ளி மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் பயிலும் பெண் குழந்தைகளின் பாதுகாப்பு திட்டம், தகவல்கள் தொடர்பான விழிப்புணர்வு பிரச்சார வாகனத்தை மாவட்ட ஆட்சித்தலைவர் பிரதீப் குமார் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

இதனை தொடர்ந்து மாவட்ட ஆட்சித்தலைவர் கூறுகையில்….. திருச்சி மாவட்டத்தில் மாவட்ட சமூகநலத்துறையின் கீழ் இயங்கும் மாவட்ட மகளிர் அதிகார மையம் மற்றும் பெண் குழந்தைகளை காப்போம் பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம் திட்டத்தின் மூலம் குழந்தை திருமணம் தடுப்பு சட்டம், குழந்தைகளுக்கான உதவி எண், மகளிர் உதவி எண், பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டம், புதுமை பெண் திட்டம், தமிழ் புதல்வன் திட்டம் ஆகிய திட்டங்கள் குறித்து உயர்நிலைப்பள்ளி மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் ஊர்தி மூலம் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்திட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதன் மூலம் பள்ளி படிப்பை முடித்து விட்டு கல்லூரி படிப்பை தொடர முடியாமல் இருக்கும் குழந்தைகளுக்கும், கல்லூரியின் சேர்க்கையை அதிகப்படுத்தவும், இடைநிற்றலை தவிர்க்கவும், பெண் குழந்தைகளின் பாதுகாப்பினை மேம்படுத்தும் வகையில் விழிப்புணர்வு வாசகங்கள் இவ்வாகனத்தில் விளம்பரப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த விழிப்புணர்வு வாகனங்கள் திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் உள்ள அனைத்து உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளியில் ஒரு மாதத்திற்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் விழிப்புணர்வு சுற்றுப்பயணம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என தெரிவித்தார்.
இந்நிகழ்வில், மாவட்ட சமூகநல அலுவலர் விஜயலெட்சுமி, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் நித்யா, ஒருங்கிணைந்த சேவைகள் மைய பணியாளர்கள், அரசு அலுவலர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய… https://chat.whatsapp.com/Bc1J0GoecHn2ft2JsWCgfU
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision







Comments