திருச்சியில் இன்று நடைபெற உள்ள தேசிய ஜனநாயக கூட்டணி பொதுக்கூட்டத்தில் பங்கேற்பதற்காக மத்திய அமைச்சர் பியூஸ் கோயல் தனி விமானம் மூலம் திருச்சிக்கு வருகை தந்தார். திருச்சி விமான நிலையத்தில் அவரை மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், பா.ஜ.க மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், அதிமுக முன்னாள் அமைச்சர்கள் வேலுமணி, விஜயபாஸ்கர், காமராஜ், வெல்லமண்டி நடராஜன் உள்ளிட்டோர் வரவேற்றனர்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த பியூஸ் கோயல்,
திருச்சியில் நடைபெறவுள்ள ஒரு பெரிய கூட்டத்திற்காக அனைவரும் தயாராகிக் கொண்டிருக்கிறார்கள். எனது குடும்ப உறுப்பினர்களான அதிமுக மற்றும் பாஜக தலைவர்களுடன் இங்கு இருப்பதில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். இன்று மாலை திருச்சி இதுவரை கண்டிராத மிகப்பெரிய பொதுக்கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி அவர்களை வரவேற்க அனைவரும் காத்திருக்கிறோம்.
பிரதமர் மோடி ஏழைகள், நடுத்தர மக்கள் மற்றும் நாட்டின் பெருமைக்காக அயராது உழைத்து வருகிறார். அவர் தமிழக மக்கள், தமிழ் கலாச்சாரம் மற்றும் தமிழர்களின் பெருமை மீது மிகுந்த அக்கறை கொண்டவர்.

தேசிய ஜனநாயகக் கூட்டணி தமிழகத்தில் ஊழல் நிறைந்த திமுக ஆட்சியை மாற்றப்போகிறோம். தமிழகத்தில் நல்ல சட்டம் ஒழுங்கையும், ஜெயலலிதா அவர்களின் காலத்தில் இருந்தது போன்ற நல்லாட்சியையும் மீண்டும் கொண்டு வருவோம்.
எடப்பாடி பழனிசாமி அவர்களின் தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி, தமிழகத்தின் அனைத்து தரப்பு மக்களுக்காகவும் உழைத்து, தமிழகத்தை இந்தியாவின் சிறந்த மாநிலமாக மாற்றும்.

இந்தியாவில் எரிபொருள் தட்டுப்பாடு எதுவும் இல்லை. இது குறித்து அந்தந்த துறையினர் அவ்வப்போது விளக்கமளிப்பார்கள். நிலைமையை அரசு உன்னிப்பாக கவனித்து வருகிறது.
இன்று எங்களது முழு கவனமும் இப்போது பிரதமரை வரவேற்பதில்தான் உள்ளது. கூட்டணியில் உள்ள அனைவரும் ஒரு குடும்பமாகச் செயல்படுகிறோம். தொகுதிப் பங்கீடு குறித்த ஆலோசனைகள் ஒரு அறைக்குள் நடக்கும், இறுதி முடிவு எடுக்கப்பட்டதும் முறைப்படி அறிவிப்போம். எடப்பாடி பழனிசாமி அவர்கள் கூட்டணியின் தலைவராக இருந்து சரியான நேரத்தில் இது குறித்து முடிவெடுப்பார்.
தமிழக வெற்றிக் கழகத்தை எங்கள் கூட்டணியில் இணைப்பது குறித்து எடப்பாடி பழனிசாமி அவர்களிடம்தான் கேட்க வேண்டும். அவருக்கு தான் இது குறித்து நன்றாக தெரியும்.

தினகரன், அன்புமணி ராமதாஸ், ஜி.கே.வாசன் என அனைத்து தலைவர்களும் இணைந்து தேசிய ஜனநாயகக் கூட்டணியை வலுப்படுத்தி வருகிறோம். தமிழக மக்களின் நலனுக்காக ஒரு வலுவான கூட்டணியாக தேர்தலைச் சந்திப்போம்.
திமுக கூட்டணியில் அதிக கட்சிகள் உள்ளது. ஆனால் கட்சிகளின் எண்ணிக்கையை விட, மக்களிடம் இருக்கும் செல்வாக்கும் வாக்கு வங்கியும்தான் முக்கியம். அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி தமிழகத்தில் மிகவும் வலுவாக உள்ளது. வரும் தேர்தலில் திமுகவைத் தோற்கடித்து முழு பெரும்பான்மையுடன் எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஆட்சி அமைப்போம்.
தமிழக மக்கள் மாற்றத்தை எதிர்பார்க்கிறார்கள். உதயநிதி ஸ்டாலினின் செயல்பாடுகளால் மக்கள் அதிருப்தியில் உள்ளனர். திமுகவிற்குள்ளேயே முதல்வருக்கு நெருக்கடிகள் இருப்பதாகத் தெரிகிறது. தமிழ் கலாச்சாரத்திற்கு எதிரானவர்களை மக்கள் ஒருபோதும் ஏற்க மாட்டார்கள். தமிழக மக்கள் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான நல்லாட்சியையே தேர்ந்தெடுப்பார்கள் என்றார்.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
டெலிகிராம் மூலமும் அறிய….
https://t.me/trichyvision https://www.threads.net/@trichy_vision



Comments