திருச்சி மாவட்டம் துறையூர் அடுத்த உப்பிலியபுரம் ஒன்றியத்திற்கு உட்பட்ட ஆங்கியம் கிராமம். இந்த கிராமத்தின் எல்லை முடிவில் ஆங்கியம் கரடு என அழைக்கப்படும் காட்டுப் பகுதி உள்ளது. இந்த பகுதிகளில் சிறுத்தை, கரடி உள்ளிட்ட வன விலங்குகள் சுற்றி திரிவதாக அப்பகுதி பொதுமக்கள் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் இன்று அதே பகுதியைச் சேர்ந்த ஹரி பாஸ்கரன் என்பவர் கரடு பகுதியில் செல்பி எடுப்பதற்காக சென்றுள்ளார்.
அங்குள்ள குகையின் முன்பு நின்று செல்பி எடுக்கும் பொழுது எதிர்பாராத விதமாக குழிக்குள் இருந்த சிறுத்தை தாக்கியதாக கூறப்படுகிறது. இதனைக் கண்ட விவசாயி துரைசாமி என்பவர், ஹரிபாஸ்கரை காப்பாற்ற முயன்ற போது, அவரையும் சிறுத்தை தாக்கிவிட்டு தப்பியோடியது. இதில் படுகாயமடைந்த ஹரி பாஸ்கரன் மற்றும் விவசாயி துரைசாமி ஆகிய இருவரையும் அப்பகுதியில் மக்கள் மீட்டு, தாத்தையங்கார்பேட்டை ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
பின்னர் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக நாமக்கல் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதுபற்றி தகவல் அறிந்த துறையூர் வனத்துறை அதிகாரிகள் மற்றும் உப்பிலியபுரம் ஒன்றிய ஆணையர்கள் மற்றும் உப்பிலியபுரம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ஆய்வு செய்து வருகின்றனர்.

துறையூரில் இரண்டு பேரை சிறுத்தை தாக்கிய சம்பவத்தால் அப்பகுதி மக்கள் அச்சத்தில் உள்ளனர்.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய:
https://chat.whatsapp.com/Ge0RgD7SIGiHznfNQgIidr







Comments