108 வைண திருத்தலங்களில் முதன்மையானதும், பூலோக வைகுண்டம் என்ற சிறப்புக்குரியதுமான திருச்சி ஸ்ரீரங்கம் அரங்கநாதர் கோவிலில் வைகுண்ட ஏகாதசி திருவிழா திருநெடுந்தாண்டகத்துடன் தொடங்கி பகல்பத்து திருமொழி, இராப்பத்து திருவாய்மொழி என 21நாட்கள் கொண்டாடப்படுகிறது.
கடந்த 30ம்தேதி திருநெடுந்தாண்டகம் தொடங்கியது. பகல்பத்து திருநாளில் நம்பெருமாள் (உற்சவர்) தினமும் பல்வேறு அலங்காரத்தில் மூலஸ்தானத்திலிருந்து புறப்பட்டு அர்ச்சுன மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்து வந்தார். பகல்பத்தின் கடைசி நாளான இன்று நம்பெருமாள் அசுரர்களிடத்திலிருந்து தேவர்களைக் காக்க மோகினியாக உருவெடுத்தார்.
இதனை எடுத்துரைக்கும் வகையில் நாச்சியார் திருக்கோலம் எனப்படும் மோகினி அலங்காரத்தில் நம்பெருமாள் ரத்தினக்கிளி, தலையில் நாகாபரணம், பவளமாலை, அடுக்கு பதக்கம், ஏலக்காய் ஜடை தரித்து மூலஸ்தானத்திலிருந்து சிம்மகதியில் வெள்ளிபல்லக்கில் புறப்பட்டு பிரகாரங்களில் உலாவந்து, அரையர்கள் சேவை எனப்படும் பாசுரங்களைக் கேட்டருளினார்.
பின்னர் அர்ச்சுன மண்டபத்தில் ஆழ்வார்களுடன் எழுந்தருளி பக்தர்களுக்கு பொதுஜனசேவை சாதித்துவருகிறார். நம்பெருமாளை ஆயிரக்கணக்கான பக்தர்கள் வரிசையில் நின்றபடி சேவித்து வருகின்றனர். முக்கிய திருநாளான வைகுந்த ஏகாதசி எனப்படும் சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி நாளை (10.01.2025) அதிகாலை 5:15 மணிக்கு நடைபெறுகிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை அறநிலையத் துறையினர் மற்றும் ஸ்ரீரங்கம் கோவில் நிர்வாகம் மேற்கொண்டு வருகின்றனர்.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய… https://chat.whatsapp.com/H58t6nW18bYCrFMtKLqSfu
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision
Comments