தேசிய தடகளப் போட்டியில் தங்கம் வென்ற திருச்சி வீராங்கனை தனலட்சுமிக்கு  சிறப்பான வரவேற்பு

தேசிய தடகளப் போட்டியில் தங்கம் வென்ற திருச்சி வீராங்கனை தனலட்சுமிக்கு  சிறப்பான வரவேற்பு

பஞ்சாப் மாநிலம் பாட்டியாலாவில் 24-வது தேசிய ஃபெடரேஷன் கோப்பை தேசிய தடகள சாம்பியன்ஷிப்பில் போட்டிகள் கடந்த 15-ம் தேதி தொடங்கி 19-ம் தேதி வரை நடைபெற்றது.

இப்போட்டியில் தமிழ்நாடு அணியில் திருச்சியில் இருந்து மட்டும் 20 பேர் பங்கேற்றுள்ளனர். இந்த தேசிய தடகளப் போட்டியில் பெண்கள் பிரிவில் திருச்சியைச் சேர்ந்த தனலட்சுமி 100 மீட்டர் ஓட்டத்தில் 11.39 வினாடிகளில் கடந்து தங்கம் வென்றுள்ளார்.

100 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் ஹீமா தாஸ், டூட்டி சந்த் என இரு புகழ்பெற்ற இந்திய வீராங்கனைகளையும் பின்னுக்கு தள்ளி திருச்சி வீராங்கனை தனலட்சுமி சாதனை படைத்துள்ளார்.

நேற்று முன்தினம் நடைபெற்ற 200 மீட்டர் ஓட்டப்பந்தயத்தின் தகுதிச்சுற்றில் 23.26 நொடிகளில் முடித்து, 23 ஆண்டுகளுக்கு முன் பி.டி.உஷா நிகழ்த்திய சாதனையை முறியடித்துள்ளார் தனலெட்சமி. 

திருச்சி விமான நிலையம் அருகே குண்டூர் பகுதியைச் சேர்ந்த தனலட்சுமி கல்லூரியில் படித்த போது பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான போட்டிகளில் சாதனை புரிந்துள்ளார். 

மேலும் தற்போது தேசிய அளவிலான போட்டியில் தனி சாதனை படைத்து, சர்வதேச போட்டிகளில் பங்கெடுக்க தகுதி பெற்றுள்ளார். இதே போல் ஆண்கள் பிரிவில் 100 மீ ஓட்டத்தில், தஞ்சாவூரைச் சேர்ந்த திருச்சி ரயில்வே ஊழியரான தடகள வீரர் இலக்கியதாசன் வெள்ளிப் பதக்கம், 200 மீட்டர் ஓட்டத்தில் தங்கம் பெற்று சாதனை படைத்துள்ளார்.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய!
https://chat.whatsapp.com/Bc1J0GoecHn2ft2JsWCgfU

திருச்சி ரயில் நிலையத்தில் வந்த 3 வீரர்களுக்கும் திருச்சி மாவட்ட தடகள சங்கம், மக்கள் சக்தி இயக்கம் மற்றும் பொன்மலை ரயில்வே மைதானம் வீரர்கள் சிறப்பான வரவேற்பு அளித்தனர்.