திருச்சியில் ரயில்வே மேம்பால  பணிகளை ராணுவ இடத்தில் மேற்கொள்ள 8 ஆண்டுகளுக்கு பிறகு பாதுகாப்பு அமைச்சகம் அனுமதி

திருச்சியில் ரயில்வே மேம்பால  பணிகளை ராணுவ இடத்தில்  மேற்கொள்ள 8 ஆண்டுகளுக்கு பிறகு பாதுகாப்பு அமைச்சகம் அனுமதி

திருச்சியில் பல ஆண்டுகளாக பாதியில் நிற்கும் ரெயில்வே மேம்பாலத்துக்கு தேவையான 67 சென்ட் ராணுவ இடத்தில் ரூ.8½ கோடி வழங்கி விட்டு பணிகள் மேற்கொள்ள பாதுகாப்பு அமைச்சகம் அனுமதி அளித்துள்ளதாக மாவட்ட கலெக்டர் எஸ்.சிவராசு தெரிவித்துள்ளார்.

திருச்சியில் பல ஆண்டுகளாக பாதியில் நிற்கும் ரெயில்வே மேம்பாலத்துக்கு தேவையான 67 சென்ட் ராணுவ இடத்தில் ரூ.8½ கோடி வழங்கி விட்டு பணிகள் மேற்கொள்ள பாதுகாப்பு அமைச்சகம் அனுமதி அளித்துள்ளதாக மாவட்ட கலெக்டர் எஸ்.சிவராசு தெரிவித்துள்ளார்.

ரெயில்வே மேம்பாலம்

திருச்சி மாநகரில் மிகவும் பழமையான மேம்பாலமாக திருச்சி ஜங்ஷன் ரெயில்வே மேம்பாலம் உள்ளது. 

மிகவும் அகலம் குறைவான இந்த மேம்பாலத்திற்கு பதிலாக, புதிய மேம்பாலம் அமைக்கும் பணி கடந்த 2014-ம் ஆண்டு மார்ச் மாதம் தொடங்கியது. ரூ.81 கோடி திட்ட மதிப்பீட்டில் 2 கட்டங்களாக பாலத்தை கட்டி முடிக்க திட்டமிடப்பட்டது.

இதில் முதல்கட்டமாக அரிஸ்டோ ரவுண்டானாவை மையமாக வைத்து திண்டுக்கல் சாலை, மத்திய பஸ் நிலைய பகுதி, ஜங்ஷன் ரெயில் நிலையம், மதுரை சாலை ஆகியவற்றை இணைக்கும் வகையில் பாலம் கட்டுமான பணிகள் முடிவடைந்து தற்போது மக்கள் பயன்பாட்டில் உள்ளது. ஆனால் சென்னை சாலையை இணைக்கும் வகையிலான மன்னார்புரம் பகுதியில் மட்டும் பாலம் அமைக்கும் பணி இன்னும் நிறைவடையாமல் உள்ளது.

ராணுவ இடம்இதற்கு காரணம் பாலம் அமைக்க ராணுவத்திற்கு சொந்தமான 67 சென்ட் நிலம் தேவைப்படுகிறது. இந்த நிலம் மாவட்ட நிர்வாகத்திடம் ஒப்படைக்கப்பட்டால் தான் அந்த பகுதியில் பாலம் கட்டுமான பணிகளை நிறைவு செய்ய முடியும். ஆனால் ராணுவ இடத்தை ஒப்படைப்பதில் பல்வேறு சிக்கல்கள் நிலவியதால் அந்த பகுதியில் கட்டுமான பணி பல ஆண்டுகளாக பாதியில் நிற்கிறது.

இந்தநிலையில் பல வருடங்களாக இந்த பாலப்பணி நிறைவு பெறாமல் இருப்பதால் இதுதொடர்பாக தமிழ்நாடு நுகர்வோர் பாதுகாப்பு கவுன்சில் அமைப்பினர் தொடர்ந்த வழக்கில் இந்த பணிகளை விரைவாக முடிக்க சென்னை ஐகோர்ட்டின் மதுரை கிளை கடந்த பிப்ரவரி மாதம் உத்தரவிட்டது. மேலும் திருச்சி எம்.பி. திருநாவுக்கரசர் ராணுவ மந்திரியை சந்தித்து ராணுவ இடத்தை வழங்குவது தொடர்பாக கோரிக்கை விடுத்தார்.

ரூ.8½கோடி இழப்பீடு

இதற்கிடையே ராணுவ பாதுகாப்பு துறை செயலாளர் தலைமையில் கடந்த ஜூன் மாதம் நடந்த கூட்டத்தில் ஏர்போர்ட் விரிவாக்கத்துக்கு தேவையான இடத்துடன், திருச்சியில் மேம்பாலம் கட்ட தேவைப்படும் இடத்தை சேர்க்க வேண்டாம் என்று முடிவு செய்யப்பட்டது. அதன்படி, திருச்சியில் மேம்பாலம் கட்ட தேவைப்படும் 67 சென்ட் நிலத்தை அதற்கு ஈடான தொகையை பெற்றுக்கொண்டோ அல்லது ஈடான இடத்தை பெற்றுக்கொண்டோ வழங்க பாதுகாப்பு செயலாளர் அனுமதி வழங்க உத்தரவிட்டார்.

இதைத்தொடர்ந்து ராணுவத்துக்கு சொந்தமான 67 சென்ட் இடத்துக்கு ஈடாக ரூ.8 கோடியே 45 லட்சத்து 72 ஆயிரத்து 961 வழங்கி விட்டு, பணிகளை தொடங்க பாதுகாப்பு அமைச்சகம் அனுமதி அளித்து ஆணை பிறப்பித்துள்ளது. 

மேலும் பணிகளை மேற்கொள்ளும் போது கடைபிடிக்க வேண்டிய நடைமுறைகள் குறித்தும் பல்வேறு கட்டுப்பாடுகளும் அதில் விதிக்கப்பட்டுள்ளன.

விரைவில் தொடங்கப்படும்

இதுபற்றி, மாவட்ட கலெக்டர் எஸ்.சிவராசு கூறும்போது, தற்போது அனுமதி கிடைத்துள்ளதால் இழப்பீட்டு தொகையை வழங்க அரசு ஏற்பாடு செய்யும். விரைவில் ஒப்பந்த புள்ளிகள் கோரப்பட்டு, மேம்பால பணிகளை தொடங்கப்படும் என்றார். நீண்ட இழுபறிக்கு பிறகு பாலப்பணிகள் நடைபெற இருப்பதால் திருச்சி பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.