Wednesday, September 10, 2025 |
Site Logo mobile
Search Icon
Mobile Gif
News

திருச்சியில் திமுக பிரமுகர் கொலை இரண்டு பேர் சரண் – பலரை தேடும் போலீஸ்

No image available

திருவெறும்பூர் அருகே உள்ள காட்டூர் கைலாஷ் நகர் பகுதியில் உடலில் காயத்துடன் கிடந்த ரியல் எஸ்டேட் தொழில் செய்பவர் சிகிச்சைக்கு பலன் இல்லாமல் பரிதாபமாக இறந்த வழக்கில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது. இரண்டு பேர் திருச்சி 6வது குற்றவியல் நீதிமன்றத்தில் சரணடைந்துள்ளனர். மேலும் சிலரை திருவெறும்பூர் போலீசார் பிடித்து விசாரணை செய்து வருவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

திருவெறும்பூர் அருகே உள்ள அரியமங்கலம் பெரியார் தெரு அம்மா குளம் பகுதியை சேர்ந்தவர் பொன்ராஜ் (64) இவர் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்துள்ளார்.இந்த நிலையில் பொன்ராஜிற்கு காட்டூர் கைலாஷ் நகர் பகுதியில் உள்ள தெரிந்தவர் வீட்டிற்கு அடிக்கடி வந்து செல்வதாகவும் அப்படி 10 ஆம் தேதி இரவு வந்துவிட்டு திரும்ப சென்ற பொழுது பொன்ராஜ் திருவெறும்பூர் அருகே உள்ள காட்டூர் கைலாஷ் நகர் பகுதியில் இருசக்கர வாகனத்துடன் உடலில் காயத்துடன்  விழுந்து கிடந்துள்ளார். பொன்ராஜ் சாலை விபத்தில் தான் காயம் அடைந்துள்ளார் என நினைத்து அப்பகுதி மக்கள் பொன்ராஜை மீட்டு திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.

அங்கு சிகிச்சைக்கு பலன் இல்லாமல் பொன்ராஜ் பரிதாபமாக இறந்துள்ளார்.இந்த நிலையில் பொன்ராஜ் உடலில் இருந்த காயங்கள் சாலை விபத்தினால் ஏற்பட்ட காயங்கள் போல் தெரியவில்லை என்றும் அது யாரோ பொன்ராஜை அடித்து கொலை செய்திருக்கலாம் என சந்தேகிப்பதாகவும் அவரது மகனும் திமுக கட்சியின் 37 வது வார்டு இளைஞரணி அமைப்பாளருமான சுந்தர்ராஜ் திருவெறும்பூர் காவல் நிலையத்தில் புகார் செய்துள்ளார்.அதன் அடிப்படையில் திருவெறும்பூர் போலீசார் வழக்கு பதிவு பொன்ராஜ் உண்மையில் சாலை விபத்தில் தான் இறந்தாரா அல்லது வேறு யாரேனும் அவரை அடித்து அந்தப் பகுதியில் வீசி சென்றார்களா என விசாரணை செய்து வந்தப்போது அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்தனர்.

அதில் பொன்ராஜை சிலர் தாக்குவது அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ளதாக கூறப்படுகிறது.அதன் அடிப்படையில் திருவெறும்பூர் போலீசார் விசாரணை மேற்கொண்ட நிலையில் கடந்த இரண்டு ஆண்டுக்கு முன்பு பொன்ராஜின் மருமகளுடன் அரியமங்கலம் முத்துநகரை சேர்ந்த பாலசுப்பிரமணியன் மகன் நிஷாந்த் ( 27 ) என்பவருக்கும் இடையே பழக்கம் இருந்து வந்ததாகவும் அதனை பொன்ராஜ் கண்டித்ததாகவும் அதனால் பொன்ராஜை நிஷாந்த் மற்றும் அவனது கூட்டாளிகள் தாக்கி இருக்கலாம் என போலீசார் சந்தேகித்து நிசாந்தையும் அவரது கூட்டாளிகள் சிலரையும் பிடித்து விசாரணை செய்து வருகின்றனர்.இந்த நிலையில் இன்று திருச்சி 6வது குற்றவியல் நீதிமன்றத்தில் இந்த வழக்கு சம்பந்தமாக ஸ்ரீரங்கம் அடையவளைஞ்சான் வீதியைச் சேர்ந்த மகேந்திரன் மகன் பிரசன்னா (20) ஸ்ரீரங்கம் வடக்கு வாசலை சேர்ந்த ரங்கராஜ் மகன் குணசேகர் (21) ஆகிய இரண்டு பேரும் திருச்சி 6வது குற்றவியல் நீதிமன்றத்தில் சரணடைந்துள்ளனர்.இதனால் பொன்ராஜ் இறப்பு கொலை தான் என்பது உறுதியாகி உள்ளது.

மேலும் இந்த கொலை சம்பந்தமாக நீதிமன்றத்தில் சரணடைந்த பிரசன்னா, குணசேகர் இருவரையும் போலீசார் கஸ்டடி எடுத்து விசாரணை செய்த பிறகு பொன்ராஜ் கொலைக்கான உண்மையான காரணம் தெரியவரும் என போலீசார் தெரிவித்தனர்.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…

https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF

டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision

    slide image

    Comments

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *