இன்று (15.08.2026) காலை, மாண்புமிகு தமிழக நிதியமைச்சர் திரு. மரிய வில்சன் அவர்களைச் சந்தித்தேன்.அப்போது, சுரங்கங்கள் மற்றும் கனிமங்கள் (மேம்பாடு மற்றும் ஒழுங்குமுறை) திருத்த மசோதா, 2026 தொடர்பாக, மாநிலங்களின் அதிகாரங்களையும் நிதி ஆதாரங்களையும் பாதிக்கும் அம்சங்கள் குறித்து மாண்புமிகு அமைச்சர் அவர்களிடம் விரிவாக எடுத்துரைத்தேன். இம்மசோதா 12.08.2026 அன்று மக்களவையிலும், 13.08.2026 அன்று மாநிலங்களவையிலும் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இம்மசோதாவை நாடாளுமன்ற நிலைக்குழுவிற்கு (Standing Committee) அனுப்பி விரிவாக ஆய்வு செய்ய வேண்டும் என்றும், மாநில அரசுகளுடன் கலந்தாலோசிக்க வேண்டும் என்றும் ஒன்றிய நிலக்கரி மற்றும் சுரங்கத்துறை அமைச்சர் திரு. கிஷன் ரெட்டி அவர்களை நேரில் சந்தித்து, நான் உள்ளிட்ட எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் வலியுறுத்தினோம்.மேலும், மாநிலங்களின் வரி விதிக்கும் அதிகாரத்தைப் பாதுகாக்கும் வகையில், Section 9D-ஐ நீக்கும் திருத்த முன்மொழிவையும் நான் தனிப்பட்ட முறையில் மக்களவை சபாநாயகர் திரு. ஓம் பிர்லா அவர்களிடம் சமர்ப்பித்திருந்தேன். ஆனால், எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களின் கோரிக்கைகளை ஏற்காமல், எவ்வித விரிவான விவாதமுமின்றி நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் இம்மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது.

இம்மசோதாவில் புதிதாக சேர்க்கப்பட்டுள்ள Section 9D, “கனிம வளங்கள் மீதான உரிமை” மற்றும் “கனிமங்கள் தாங்கிய நிலங்கள்” மீது மாநில அரசுகள் வரி விதிப்பதற்கு கட்டுப்பாடுகளை ஏற்படுத்துகிறது. மாநில அரசுகளால் ஏற்கனவே விதிக்கப்பட்டு, இதுவரை வசூலிக்கப்படாமல் நிலுவையில் உள்ள லட்சக்கணக்கான கோடி ரூபாய் வருவாயையும் இனி வசூலிக்க முடியாத நிலையை இந்தத் திருத்தம் ஏற்படுத்துகிறது. இதனால் மாநிலங்களின் முக்கியமான நிதி ஆதாரங்கள் பாதிக்கப்பட்டு, அவற்றின் நிதிசார் தன்னாட்சிக்கு கடுமையான சவால் ஏற்படும்

உச்சநீதிமன்றத்தின் ஒன்பது நீதிபதிகள் கொண்ட அமர்வு 2024-ஆம் ஆண்டு வழங்கிய தீர்ப்பில், கனிமங்கள் தாங்கிய நிலங்கள் மீது வரி விதிக்கும் அதிகாரம் மாநிலங்களுக்கு இருப்பதைத் தெளிவுபடுத்தியுள்ளது.இந்தத் தீர்ப்பின் அடிப்படையில்தான் தமிழக அரசு Tamil Nadu Mineral Bearing Land Tax Act, 2024 மற்றும் Tamil Nadu Mineral Bearing Land Tax Rules, 2025 ஆகியவற்றை இயற்றியது. 04.04.2025 முதல் இவ்வரி வசூலிக்கப்பட்டு வருகிறது. 2025–26ஆம் ஆண்டில் புவியியல் மற்றும் சுரங்கத்துறை மூலம் கிடைத்த ரூ.4,395.68 கோடி வருவாயில், ரூ.2,265 கோடி Mineral Bearing Land Tax மூலம் கிடைத்துள்ளது. இந்தச் சட்டத் திருத்தம் அமலுக்கு வந்தால், தமிழகத்தின் இந்த முக்கியமான வருவாய் ஆதாரம் பாதிக்கப்படும்.

எனவே, இது வெறும் வருவாய் இழப்புப் பிரச்சினை அல்ல; மாநிலங்களின் அதிகாரம், நிதிசார் தன்னாட்சி மற்றும் இந்தியாவின் கூட்டாட்சித் தத்துவத்தைப் பாதிக்கும் பிரச்சினையாகும்.இந்த விவரங்களை மாண்புமிகு நிதியமைச்சர் திரு. மரிய வில்சன் அவர்களிடம் எடுத்துரைத்து, தமிழகத்தின் நிதி உரிமைகளைப் பாதுகாக்க ஒன்றிய அரசிடம் வலுவாக வலியுறுத்த வேண்டும் என்றும், தேவையான சட்டரீதியான முன்னெடுப்புகளை தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டேன்.

எனது கோரிக்கையை கவனத்துடன் கேட்டறிந்த மாண்புமிகு நிதியமைச்சர் அவர்கள், தமிழக அரசின் சார்பில் எனக்கு நன்றி தெரிவித்ததுடன், இந்த விவகாரத்தில் மாண்புமிகு தமிழக முதல்வர் அன்பு சகோதரர் திரு ஜோசப் விஜய் அவர்கள் தலைமையிலான தமிழக அரசு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என்று உறுதியளித்தார்.
அன்புடன்,
துரை வைகோ
நாடாளுமன்ற உறுப்பினர் – திருச்சி
மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் (ம.தி.மு.க.)
15.08.2026

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய
https://chat.whatsapp.com/JErJ2bWDTM5D4mAdBc3nOO?mode=gi_t
திருச்சி விஷன் செய்திகளை மற்ற சமூக வலைதளங்களில் காண
https://www.facebook.com/share/15fQCjhASKm/
https://www.instagram.com/trichy_vision?igsh=MXM2dHdrc2M1Z3Ryag==
Telegram
Threads
https://www.threads.net/@trichy_vision
Youtube






Comments