இந்திரா கணேசன் அறக்கட்டளையின் முன்-தொழில் முனைவோர் மையம் (Pre-Incubation Centre), இந்திரா கணேசன் கல்வி நிறுவனங்களின் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுத் துறை மற்றும் உன்னத் பாரத் அபியான் (Unnat Bharat Abhiyan) ஆகியவற்றின் இணை ஏற்பாட்டில், 03.06.2026 அன்று கல்லூரி மாணவர்கள் மற்றும் புதுமையாளர்களுக்காக “காளான் வளர்ப்பு நேரடி செயல்விளக்கப் பயிற்சி” நிகழ்ச்சி வெற்றிகரமாக நடத்தப்பட்டது.

நிகழ்ச்சியை இந்திரா கணேசன் கல்வி நிறுவனங்களின் செயலாளர் திரு. ஜி. இராஜசேகரன் அவர்கள் தொடங்கி வைத்தார். தனது தொடக்க உரையில், மாணவர்களிடையே தொழில் முனைவோர் மனப்பான்மையை வளர்ப்பதன் அவசியத்தை வலியுறுத்தினார். குறைந்த முதலீட்டில் அதிக வருமானம் ஈட்டக்கூடிய துறைகளில் காளான் வளர்ப்பு முக்கிய இடம் பெறுகிறது என்றும் அவர் எடுத்துரைத்தார்.
நிகழ்ச்சியில் இயக்குநர் டாக்டர் ஜி. பாலகிருஷ்ணன் அவர்கள் வாழ்த்துரை வழங்கினார். மாணவர்களின் திறன் மேம்பாடு மற்றும் தொழில் முனைவோர் வளர்ச்சிக்காக இத்தகைய பயிற்சி நிகழ்ச்சிகள் மிகவும் பயனுள்ளதாக அமைகின்றன என்றும், மாணவர்கள் தங்களின் புதுமையான சிந்தனைகளை தொழில் முயற்சிகளாக மாற்றிக் கொள்ள வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
பதிவாளர் டாக்டர் மு. அனுசுயா அவர்கள் சிறப்புரை வழங்கினார். தொழில் முனைவோர் மேம்பாடு நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கும் இளைஞர்களின் தன்னிறைவு வாழ்க்கைக்கும் முக்கிய பங்காற்றுகிறது என்பதை விளக்கினார்.

இந்நிகழ்ச்சியின் வளநபராக டாக்டர் செந்தில்குமார், உரிமையாளர், ஸ்ரீ அம்மன் பயோகேர் SAB ரிசர்ச் அகாடமி, திருக்கானூர்பட்டி, தஞ்சாவூர் ஆகியோர் கலந்து கொண்டார். அவர் காளான் வளர்ப்பின் முழுமையான செயல்முறைகளை நடைமுறை விளக்கங்களுடன் கற்றுக்கொடுத்தார். மூலப்பொருள் தயாரித்தல், விதையிடுதல் (Spawning), படுக்கை அமைத்தல், பராமரிப்பு, அறுவடை, மதிப்புக் கூட்டப்பட்ட பொருட்கள் தயாரித்தல் மற்றும் சந்தைப்படுத்துதல் வரை அனைத்து நிலைகளையும் மாணவர்களுக்கு செயல்விளக்கப் பயிற்சியின் மூலம் எடுத்துரைத்தார்.பயிற்சியின் முக்கிய அம்சங்களாக காளான் வளர்ப்பில் உள்ள தொழில் முனைவோர் வாய்ப்புகள், சந்தைப்படுத்தல் உதவிகள், குறைந்த முதலீட்டில் தொழில் தொடங்கும் முறைகள் மற்றும் வருமானம் ஈட்டும் வழிமுறைகள் குறித்து விரிவாக விளக்கப்பட்டது. மாணவர்கள் நேரடியாக செய்முறைப் பயிற்சியில் பங்கேற்று காளான் வளர்ப்பின் தொழில்நுட்பங்களை அறிந்து கொண்டனர்.
இப்பயிற்சியில் VSS அரசு கலைக் கல்லூரி, சிவகங்கை மாவட்டம், ஞானமணி பொறியியல் கல்லூரி, நாமக்கல் மாவட்டம், NIT திருச்சி மற்றும் இந்திரா கணேசன் மருத்துவ இயல், இயற்கை மருத்துவம் மற்றும் யோகா, துணை மருத்துவ அறிவியல் கல்லூரி மாணவர்கள் ஆர்வமுடன் பங்கேற்று பயனடைந்தனர். நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைத்து பங்கேற்பாளர்களுக்கும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

உன்னத் பாரத் அபியானின் நோக்கங்களான கிராமப்புற மேம்பாடு, திறன் வளர்ச்சி மற்றும் நிலையான வாழ்வாதார வாய்ப்புகளை உருவாக்குதல் ஆகியவற்றை முன்னிறுத்தும் வகையில் நடைபெற்ற இப்பயிற்சி, மாணவர்களிடையே தொழில் முனைவோர் சிந்தனையை ஊக்குவித்து, சுயதொழில் வாய்ப்புகளை உருவாக்கும் பயனுள்ள முயற்சியாக அமைந்தது. இந்நிகழ்ச்சி மாணவர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றதுடன், அவர்களின் திறன், தன்னம்பிக்கை மற்றும் தொழில் முனைவோர் ஆர்வத்தை மேம்படுத்தும் சிறப்பான நிகழ்வாக அமைந்தது.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய
https://chat.whatsapp.com/JErJ2bWDTM5D4mAdBc3nOO?mode=gi_t
திருச்சி விஷன் செய்திகளை மற்ற சமூக வலைதளங்களில் காண
https://www.facebook.com/share/15fQCjhASKm/
https://www.instagram.com/trichy_vision?igsh=MXM2dHdrc2M1Z3Ryag==
Telegram
Threads
https://www.threads.net/@trichy_vision
Youtube
https://youtube.com/@trichyvision3651?si=1RqWZPI32hJjwwav





Comments