ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் சார்பில் “போதை இல்லா தமிழ்நாடு” விழிப்புணர்வு பரப்புரை – திருச்சியில் இலச்சினை வெளியீடு.தமிழ்நாட்டில் மது மற்றும் போதைப்பொருள்களின் பயன்பாட்டை முற்றிலுமாக ஒழிக்கும் நோக்கில், ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் அமைப்பின் சார்பில் “போதை இல்லா தமிழ்நாடு” என்ற மாபெரும் மக்கள் விழிப்புணர்வு பரப்புரை ஆகஸ்ட் 15 முதல் 30 வரை மாநிலம் முழுவதும் நடைபெற உள்ளது.

இது குறித்த செய்தியாளர் சந்திப்பு மற்றும் இலச்சினை வெளியீட்டு நிகழ்ச்சி திருச்சி பிரஸ் கிளப்பில் இன்று நடைபெற்றது. இதில் ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் அமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளர் முகமது ரியாஸ் மற்றும் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் மாநில பொதுச்செயலாளர் பாபு பெஞ்சமின் இளங்கோ ஆகியோர் கலந்துகொண்டு அதிகாரப்பூர்வ இலச்சினையை வெளியிட்டனர்.அதனை தொடர்ந்து மாநில ஒருங்கிணைப்பாளர் முகமது ரியாஸ்
செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அதில்:-

தமிழ்நாட்டில் முன்பு எப்பொழுதும் இல்லாத அளவிற்கு போதைப்பொருள்களின் விநியோகமும், மது அருந்துபவர்களின் எண்ணிக்கையும் கணிசமாக உயர்ந்துள்ளது. குறிப்பாக, ஜென்-சி தலைமுறை மற்றும் 12 வயதுக்குட்பட்ட குழந்தைகள் கூட அறியாமலேயே பாதிக்கப்பட்டு, சமூகம் ஆபத்தான நிலைக்குச் சென்று கொண்டிருக்கிறது.

1971-ல் மது விற்பனை பரவலாகத் திறக்கப்பட்டதிலிருந்து கடந்த இரண்டு தலைமுறைகளாக மக்கள் இதனால் பாதிக்கப்பட்டுள்ளனர். பல குற்றச் செயல்களுக்கும், வன்புணர்வு சம்பவங்களுக்கும் போதையே முக்கிய காரணமாக அமைகிறது.இந்த விழிப்புணர்வு பரப்புரையானது வெறும் அரசின் மீது குற்றஞ்சாட்டுவது மட்டுமல்லாமல், மக்களிடையே ஒருமித்த கருத்தை உருவாக்குவதற்காக மேற்கொள்ளப்படுகிறது.

ஆன்லைன் மற்றும் கியூஆர் கோடு மூலம் 5லட்சம் வாலண்டியர்களிடம் கையெழுத்து பெற்று, அதன் தரவுகள் மூலம் மக்களிடம் பொதுக்கருத்து உருவாக்கப்படும். குறும்படங்கள், மனித சங்கிலிகள், திருமணக் கூட்டங்கள், டிஜிட்டல் திரை காணொளி வாகனங்கள் மற்றும் விழிப்புணர்வு கூட்டங்கள் மூலமாக தீமைகள் பொதுமக்களிடம் கொண்டு செல்லப்படும். மதுவிலக்குத் துறை என்று பெயரிடப்பட்டிருந்தாலும், டாஸ்மாக் மூலம் அரசு ஈட்டும் வருவாய் கடந்த 10 ஆண்டுகளில் இரண்டு மடங்கு உயர்ந்துள்ளது. 2016-ல் ரூ. 25,000 கோடியாக இருந்த வருமானம், தற்போது ரூ. 55,000 கோடியாக அதிகரித்துள்ளது. அரசின் கஜானாவில் 16% வருவாய் டாஸ்மாக் மூலமாக வருவதால், எந்த ஆட்சி மாறினாலும் இதனை கைவிட தயங்குகின்றனர்.

விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்துவதோடு மட்டும் அரசு கடந்துவிட முடியாது. மதுவை எப்போது, எப்படி முழுமையாகக் கைவிடப் போகிறோம் என்பதற்கான காலக்கெடு மற்றும் தெளிவான தொலைநோக்குத் திட்டத்தை அரசு அறிவிக்க வேண்டும்.
இந்த விழிப்புணர்வு இயக்கம் என்பது எந்தவொரு தனி இயக்கத்தின் வேலை மட்டுமல்லாமல், ஒட்டுமொத்த சமுதாயமும் இணைந்து போராட வேண்டிய அவசியமான தருணம் என தெரிவித்தார்.
பேட்டி: முகமது ரியாஸ், மாநில ஒருங்கிணைப்பாளர், ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த்.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய
https://chat.whatsapp.com/JErJ2bWDTM5D4mAdBc3nOO?mode=gi_t
திருச்சி விஷன் செய்திகளை மற்ற சமூக வலைதளங்களில் காண
https://www.facebook.com/share/15fQCjhASKm/
https://www.instagram.com/trichy_vision?igsh=MXM2dHdrc2M1Z3Ryag==
Telegram
Threads
https://www.threads.net/@trichy_vision
Youtube






Comments