திருச்சி ஸ்ரீரங்கத்தில் மக்கள் குறைதீர் முகாம்; மக்களின் தேவைகளை உடனுக்குடன் பூர்த்தி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் – அமைச்சர் ரமேஷ் பேட்டி.திருச்சி ஸ்ரீரங்கம் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட திருவானைக்காவல் பகுதியில், பொதுமக்களின் குறைகளை நேரடியாகக் கேட்டறியும் சிறப்பு மக்கள் குறைதீர் முகாம் இன்று நடைபெற்றது. இதில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் கலந்துகொண்டு, பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களைப் பெற்று, அவற்றின் மீது உடனடி நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

அதனை தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் ரமேஷ் கூறியதாவது:-
தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய், அமைச்சர்களும் அதிகாரிகளும் களத்திற்கு நேரடியாகச் சென்று மக்களின் குறைகளைக் கேட்டறிந்து உடனுக்குடன் தீர்வு காண வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார். அந்த வழிகாட்டுதலின்படி, ஸ்ரீரங்கம் மற்றும் திருவானைக்கோவில் பகுதிகளில் இன்று குறைதீர் முகாம் நடத்தப்பட்டது. இம்முகாமில் திருச்சி மாநகராட்சி மற்றும் வருவாய்த்துறை உள்ளிட்ட அனைத்துத் துறை அதிகாரிகளும் பங்கேற்றுள்ளனர்.

பொதுமக்கள் பட்டா பிரச்சினைகள், குடிநீர் வசதி, கால்வாய் பராமரிப்பு, வேலைவாய்ப்பு, வீட்டு வசதி, மருத்துவ வசதிகள், மகளிர் உரிமைத்தொகை மற்றும் முதியோர் ஓய்வூதியம் போன்ற அடிப்படைத் தேவைகள் தொடர்பாக மனுக்களை அளித்துள்ளனர். இந்த மனுக்கள் அனைத்தும் பரிசீலிக்கப்பட்டு, அரசின் வழக்கமான திட்டங்களின் கீழ் உடனடியாகத் தீர்வு காணப்படும்.

இந்த முகாம் ஒரு நாள் நிகழ்வாக மட்டும் இருக்காது; வரும் நாட்களில் மணிகண்டம், அந்தநல்லூர் உள்ளிட்ட ஸ்ரீரங்கம் தொகுதியின் அனைத்துப் பகுதிகளிலும் இந்த முகாம்கள் நடத்தப்படும். மேலும், குறிப்பிட்ட கால இடைவெளியில் இவை தொடர்ந்து நடைபெறும்.ஸ்ரீரங்கம் கிழக்கு கோபுர வாசல் திறப்புப் பணிகளில் ஏற்பட்டிருந்த தாமதம் நீக்கப்பட்டு, பணிகள் விரைவுபடுத்தப்பட்டுள்ளன. மிக விரைவில் பொதுமக்கள் பயன்பாட்டிற்குத் திறந்து வைக்கப்படும்.

திருச்செந்தூர் கோயில் உட்பட எந்த இடத்திலும் தற்போது கட்டண உயர்வு அமல்படுத்தப்படவில்லை. தவறான தகவல்களை நம்ப வேண்டாம். மக்களின் கருத்தின் அடிப்படையிலேயே இறுதி முடிவு எடுக்கப்படும்; மக்களின் விருப்பத்திற்கு மாறாக அரசு எந்த முடிவையும் எடுக்காது.

கோயில்களில் விஐபி தரிசன முறையை ஒழுங்குபடுத்துவது குறித்து ஆலோசனைகள் நடைபெற்று வருகின்றன. ஸ்ரீரங்கம் கோயிலில் நடந்த குறிப்பிட்ட சம்பவம் குறித்து விசாரணை நடத்தப்பட்டு உரியநடவடிக்கைஎடுக்கப்படும்.போதைப்பொருள் வினியோகத்தைக் கட்டுப்படுத்த மாவட்ட ஆட்சியர் தலைமையில் ஆய்வு நடத்தப்பட்டுள்ளது. இரவு நேர ரோந்துப் பணிகளைத் தீவிரப்படுத்த காவல்துறைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

ஶ்ரீரங்கம் யாத்திரி நிவாஸ் முன்பதிவு மோசடி தொடர்பாக தானே நேரடியாகப் புகார் அளித்ததன் பேரில் வடமாநிலத்தவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இனி பாதுகாப்பான அதிகாரப்பூர்வ ஆன்லைன் முன்பதிவு முறையை அறிமுகப்படுத்த ஆலோசனை நடைபெற்று வருகிறது.

தமிழகத்தில் உள்ள கோயில்களின் அடிப்படை வசதிகள் மற்றும் திருப்பணிகளை மேம்படுத்த அரசு முனைப்புடன் செயல்பட்டு வருகிறது. ஆன்மிகமும் தமிழும் ஒன்றோடொன்று பின்னிப் பிணைந்தவை என்பதை உணர்ந்து, இந்து சமய அறநிலையத்துறையில் பல சீர்திருத்தங்கள் கட்டம் கட்டமாக அறிவிக்கப்படும் என்று தெரிவித்தார்.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய
https://chat.whatsapp.com/JErJ2bWDTM5D4mAdBc3nOO?mode=gi_t
திருச்சி விஷன் செய்திகளை மற்ற சமூக வலைதளங்களில் காண
https://www.facebook.com/share/15fQCjhASKm/
https://www.instagram.com/trichy_vision?igsh=MXM2dHdrc2M1Z3Ryag==
Telegram
Threads
https://www.threads.net/@trichy_vision
Youtube
https://youtube.com/@trichyvision3651?si=1RqWZPI32hJjwwav






Comments