திருச்சி மாவட்டம் தொட்டியம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட காட்டுப்புத்தூர் அருகே உள்ள உன்னியூர் ஊராட்சியைச் சேர்ந்த ஒரு ஏழைக் குடும்பத்தின் கதை, கேட்போர் நெஞ்சை உலுக்குவதாக அமைந்துள்ளது.

பெற்றோரை அடுத்தடுத்து இழந்து, தங்குவதற்கு வீடும் இன்றி, 5 சிறு குழந்தைகள் தவித்து வரும் அவல நிலை அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
உன்னியூர் கிராமத்தைச் சேர்ந்தவர் மகாமுனி. இவருடைய மனைவி சாந்தி. இவர்களுக்கு 3 பெண் குழந்தைகளும், 2 ஆண் குழந்தைகளும் என மொத்தம் 5 குழந்தைகள் உள்ளனர்.
மகாமுனி மற்றும் சாந்தி ஆகிய இருவரும் கூலி வேலை செய்து தங்களது குடும்பத்தைக் காப்பாற்றி வந்தனர். குறிப்பாக, மனைவி சாந்தி விவசாயத் தோட்டத்தில் வாழைத்தார்களைச் சுமக்கும் கடினமான கூலி வேலை செய்து குடும்பத்திற்கு உறுதுணையாக இருந்தார். கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு, சாந்தி இருசக்கர வாகனத்தில் சென்றபோது, எதிர்பாராத விதமாக கார் மோதி நேரிட்ட விபத்தில் பரிதாபமாக உயிரிழந்தார்.

தாயை இழந்து தவித்த குழந்தைகளை தந்தை மகாமுனியும், அவரது தாய் பொன்னம்மாளும் (குழந்தைகளின் பாட்டி) கண்ணும் கருத்துமாகப் பராமரித்து வந்தனர். இந்நிலையில், கடந்த சில நாட்களாகக் கடுமையான உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டிருந்த தந்தை மகாமுனியும், சிகிச்சை பலனின்றி கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு பரிதாபமாக உயிரிழந்தார்.
பெற்றோர்கள் இருவரையும் அடுத்தடுத்து இழந்த 5 குழந்தைகளும் தற்போது அநாதையாக நிற்பதைக் கண்டு கிராம மக்கள் கண்ணீர் வடிக்கின்றனர்.

இவர்களில் மூத்த மகள் ஜனனி 10-ஆம் வகுப்பு முடித்து ஒரு பாடத்தில் தோல்வியடைந்துள்ளார். இரண்டாவது மகள் சங்கீதா 8-ஆம் வகுப்பு முடித்துள்ளார். மூன்றாவது மகள் பூமிகா நடப்பு கல்வியாண்டில் 6-ஆம் வகுப்பு சேர வேண்டிய நிலையில் உள்ளார். இவர்களுடன் முகிலீஸ்வரன் என்ற 5 வயது சிறுவனும், ரித்திக்ராஜ் என்ற 3 வயது பச்சிளம் குழந்தையும் உள்ளனர்.
தற்போது இந்த 5 குழந்தைகளையும், வயது முதிர்ந்த பாட்டி பொன்னம்மாள் மட்டுமே கவனித்து வருகிறார். போதிய வருமானமோ, சொந்த வீடோ அல்லது அடிப்படை வசதிகளோ எதுவும் இல்லாத நிலையில், முதிர்ந்த வயதில் இந்த 5 குழந்தைகளையும் எவ்வாறு வளர்த்து ஆளாக்கப் போகிறோம் என்ற வேதனையில் பாட்டி தவித்து வந்தார்.

இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்த முசிறி தொகுதி த. வெ. க.சட்டமன்ற உறுப்பினர் விக்னேஷ் உடனடியாக உன்னியூர் கிராமத்திற்கு நேரில் சென்றார். பெற்றோரை இழந்து தவிக்கும் 5 குழந்தைகளையும், பாட்டி பொன்னம்மாளையும் நேரில் சந்தித்து அவர் ஆறுதல் கூறினார்.
அப்போது அக்குடும்பத்திற்குத் தேவையான அரிசி, பருப்பு, போர்வை உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்கள் மற்றும் உபகரணங்களை எம்.எல்.ஏ விக்னேஷ் வழங்கினார். தொடர்ந்து பேசிய அவர், ஆதரவற்ற நிலையில் இருக்கும் இக்குழந்தைகளுக்கு நான் எப்போதும் துணையாக இருப்பேன் என்றும், அவர்களின் படிப்புக்குத் தேவையான அனைத்து உதவிகளும் செய்யப்படும் என்றும் உறுதியளித்தார்.

மேலும், இக்குடும்பத்திற்குத் தேவையான நிரந்தர வீடு உள்ளிட்ட அடிப்படை வசதிகளைத் தமிழக அரசிடம் பேசி, கண்டிப்பாகப் பெற்றுத் தருவேன் என்று வாக்குறுதி அளித்தார்.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய
https://chat.whatsapp.com/KNv2yb8cLEr6BuJWcHPLyh
திருச்சி விஷன் செய்திகளை மற்ற சமூக வலைதளங்களில் காண
Facebook
https://www.facebook.com/share/15fQCjhASKm/

Instagram
https://www.instagram.com/trichy_vision?igsh=MXM2dHdrc2M1Z3Ryag==
Telegram
https://t.me/trichyvision
Threads
https://www.threads.net/@trichy_vision
Twitter
https://x.com/VisionTrichy
Youtube
https://youtube.com/@trichyvision3651?si=1RqWZPI32hJjwwav



Comments