ஏமன் நாட்டு எண்ணெய் கப்பலில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி உயிரிழந்த தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த மாலுமி ஃபெர்னாண்டோ ரெமிசியன் சுரேஷ் அவர்களின் உடல், திருச்சி நாடாளுமன்ற உறுப்பினர் துரை வைகோ தொடர் முயற்சியால் இன்று தாயகம் கொண்டு வரப்படுகிறது.

தூத்துக்குடியைச் சேர்ந்த திரு. ஃபெர்னாண்டோ ரெமிசியன் சுரேஷ், ஏமன் நாட்டு நிறுவன எண்ணெய் கப்பலில் பணியாற்றி வந்தார். கடந்த 08.03.2026 அன்று கப்பலில் ஏற்பட்ட தீ விபத்தில் அவர் கடுமையான பாதிப்புக்குள்ளானார். ஏமனின் ஹொதெய்தா நகரிலுள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர், மருத்துவர்களின் தீவிர முயற்சிக்கு இடையேயும் கடந்த 03.04.2026 அன்று உயிரிழந்தார்.

அவரது உடலை இந்தியா கொண்டு வருவதற்காக ரியாத்திலுள்ள இந்திய தூதரகம் 12.04.2026 அன்று தடையில்லா சான்று (NOC) வழங்கியது. இருப்பினும், விமான மற்றும் போக்குவரத்து வசதிகளின் பற்றாக்குறை மற்றும் சில நிர்வாகச் சிக்கல்களால் அவரது உடலை தாயகம் கொண்டு வருவதில் பெரும் தாமதம் ஏற்பட்டது. இது குறித்து அவரது குடும்பத்தினர் மிகுந்த மனவேதனையுடன் துரை வைகோ அவர்களிடம் முறையிட்டனர்.
இதனைத் தொடர்ந்து, 04.05.2026 அன்று ஒன்றிய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் அவர்களுக்கு கடிதம் எழுதிய துரை வைகோ, இந்திய தூதரகம் மற்றும் அதிகாரிகளுடன் உடனடி ஒருங்கிணைப்பை மேற்கொண்டு உடலை விரைவாகக் கொண்டு வர நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொண்டார்.

இந்த நடவடிக்கைகளின் பயனாக, ஃபெர்னாண்டோ ரெமிசியன் சுரேஷ் அவர்களின் உடல் இன்று ஏமனிலிருந்து விமானம் மூலம் புறப்பட்டுவிட்டதாகத் தகவல் கிடைத்துள்ளது. இன்று கேரளம் வழியாக அவரது சொந்த ஊரான தூத்துக்குடிக்கு உடல் கொண்டு செல்லப்படவுள்ளதைச் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் உறுதிப்படுத்திக் கொண்டதாக துரை வைகோ தெரிவித்துள்ளார்.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய
https://chat.whatsapp.com/JErJ2bWDTM5D4mAdBc3nOO?mode=gi_t
திருச்சி விஷன் செய்திகளை மற்ற சமூக வலைதளங்களில் காண
Facebook
https://www.facebook.com/share/15fQCjhASKm/
Instagram
https://www.instagram.com/trichy_vision?igsh=MXM2dHdrc2M1Z3Ryag==
Telegram
https://t.me/trichyvision
Threads
https://www.threads.net/@trichy_vision
Twitter
https://x.com/VisionTrichy
Youtube
https://youtube.com/@trichyvision3651?si=1RqWZPI32hJjwwav



Comments