திருச்சியில் கொலை - 64 சவரன் நகை ரூ.10 லட்சம் திருட்டு

திருச்சியில் கொலை - 64 சவரன் நகை ரூ.10 லட்சம் திருட்டு

திருச்சி மாவட்டம்தொட்டியம் ஐயப்பன் நகரை சேர்ந்த கருப்பண்ணன் மனைவி ராஜேஸ்வரி (65) தம்பதியருக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். கருப்பண்ணன் சில ஆண்டுகளுக்கு முன்பு உடல் நலக்குறைவு காரணமாக இறந்து விட்டார். இதில் மகன் மணிகண்டன் நாமக்கல் அருகேயுள்ள வளையப்பட்டியில் மெடிக்கல் கடை நடத்தி கொண்டு குடும்பத்துடன் வசித்து வருகிறார்.

மகள் பிரியா திருமணமாகி திண்டுக்கல்லில் தனது கணவருடன் வசித்து வருகிறார். இந்நிலையில் மூதாட்டி ராஜேஸ்வரி தொட்டியம் ஐயப்பன் நகரில் உள்ள தனது வீட்டில் தனியாக வசித்து வந்தவர் கடந்த சில தினங்களாக வெளியே வரவில்லை எனவும் அக்கம் பக்கத்தினர் மூதாட்டியின் வீட்டிற்குள் துர்நாற்றம் வீசுவதாக தொட்டியம் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

போலீஸார் சம்பவயிடத்திற்கு சென்று பார்த்தபோது ராஜேஸ்வரி கை, கால்கள், வாய் ஆகியவை துண்டால் கட்டப்பட்டு உடல் அழுகிய நிலையில் சடலமாக கிடந்துள்ளார். மேலும் வீடு முழுவதும் மிளகாய் பொடி தூவப்பட்டிருந்தது, பொருட்கள் சிதறி கிடந்துள்ளது.

இதனையடுத்து முசிறி காவல் துணை கண்காணிப்பாளர் யாஸ்மின், தொட்டியம் காவல் ஆய்வாளர் முத்தையா ஆகியோர் நிகழ்விடத்திற்கு சென்று இறந்து கிடந்த ராஜேஸ்வரியின் சடலத்தை திருச்சி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனை செய்வதற்காக அனுப்பி வைத்தனர். இதனை தொடர்ந்து டிஜிபி சரவணசுந்தர் சம்பவயிடத்தில் ஆய்வு மேற்கொண்டார். கைரேகை நிபுணர் சுர்ஜித் தலைமையிலான போலீசார் மூதாட்டியின் வீட்டில் தடயங்கள் சேகரித்து ஆய்வு மேற்கொண்டனர்.

மேலும் திருச்சியிலிருந்து மோப்ப நாய் லீலி வரவழைக்கப்பட்டு கொலையாளிகள் சென்ற பாதைகள் குறித்து தகவல்கள் சேகரித்தனர். மூதாட்டியின் மகன் மணிகண்டனை வரவழைத்து தொட்டியம் போலீஸார் விசாரணை நடத்தியதில் மூதாட்டி வீட்டில் வைத்திருந்த 64 சவரன் நகை மற்றும் ரூபாய் 10 லட்சம் பணம் திருடு போயிருந்தது தெரியவந்தது.

இதனையடுத்து ராஜேஸ்வரியின் மகன் மணிகண்டன் தொட்டியம் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு மூதாட்டியை கால்,கை, வாயினை துண்டால் கட்டிப்போட்டு கொலை செய்து வீட்டில் இருந்த நகை மற்றும் ரொக்கத்தினை திருடி சென்ற மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.