தலையெழுத்தை மாற்றும் பிரம்மா

தலையெழுத்தை மாற்றும் பிரம்மா

திருப்பம் தரும் திருப்பட்டூர், திருச்சி சுற்று வட்டாரத்தில் பல திருத்தலங்கள் இருப்பது அனைவரும் அறிந்ததே. இத்திருக்கோவில் ஓரளவுக்கு தெரிந்த கோயிலாகும். இன்னும் பலர் அறியப்பட வேண்டிய கோவில் என்பதால் இந்த கட்டுரை. திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில் இருந்து 40 கிலோமீட்டர் தொலைவிலும் சத்திரம் பேருந்து நிலையத்தில் இருந்து 33 கிலோமீட்டர் தொலைவிலும் அமைந்துள்ளது திருப்பட்டூர்.

மக்களின் மிகப்பெரிய நம்பிக்கைக்குரிய இந்த கோவிலை அடைய திருச்சியிலிருந்து சென்னை செல்லும் வழியில் சிறுகனூர் என்ற ஊரில் இருந்து மேற்கு புறமாக நான்கு கிலோ மீட்டர் செல்ல வேண்டும். திருச்சியில் இருந்து சமயபுரம் டோல்பிளாசாவை கடந்து அடுத்த 12 கிலோமீட்டர் தொலைவில் சிறுகனூர் வருகிறது. இந்த கோவிலை பார்க்கச் செல்லும்போது ஆங்காங்கே பெயர்ப் பலகைகள் வழிகாட்டியாக வைக்கப்பட்டுள்ளன. 

பிரம்மபுரீஸ்வரர் கோவிலுக்குச் செல்லும் முன்னர், தர்ம சாஸ்தா அய்யனார் கோவில் என்று ஒரு கோவில் உள்ளது அங்கே சிவனுக்கு நந்தி இருப்பது போல் அய்யனாருக்கு யானை இருக்கிறது அந்த கல் யானைக்கு தேங்காய் உடைப்பதன் மூலம் நம் பிரார்த்தனைகள் நிறைவேறும் என்பது நம்பிக்கை. ஒவ்வொரு பிரார்த்தனைக்கு தகுந்தாற் போல் எத்தனை தேங்காய்கள் உடைக்க வேண்டும் என்று அங்கே எழுதி வைக்கப்பட்டுள்ளது. இந்த கோவிலுக்கு சென்றுவிட்டுதான் பிரம்மாவின் கோவிலுக்கு செல்ல வேண்டும் என்ற நம்பிக்கை அங்கு எழுதி வைக்கப்பட்டுள்ளது.

முதலில் சிறுகனூரில் இருந்து பிரம்மபுரீஸ்வரர் கோவிலுக்குச் செல்லும் வழியிலேயே இந்த அய்யனார் கோவில் உள்ளது. மிகவும் அமைதியான கோவில். அய்யனார் கல்விக்காகவும் கடன் பிரச்சனை தீரவும் சனீஸ்வரனின் பிடியில் இருந்து விடுபடுவதற்காகவும் ஒரு பரிகார தெய்வமாக இருக்கிறார். 

அங்கிருந்து பிரம்மபுரீஸ்வரக் கோவில் சற்று தொலைவில் உள்ளது, வியாழக் கிழமை பிரம்மாவுக்கு உகந்த நாளாகக் கருதப்படுகிறது. உலகில் படைக்கும் தொழிலை கொண்ட பிரம்மா தான் மிகப்பெரிய கடவுள் என நினைத்து மமதை கொண்டதால், சிவபெருமான் பிரம்மாவின் ஐந்து தலைகளில் ஒரு தலையை கொய்ததாகவும் படைக்கும் தொழிலின் சக்தியை பிரம்மாவிடமிருந்து எடுத்துக் கொண்டதாகவும் ஒரு நம்பிக்கை.

அதன் பின்னால் பிரம்மா பல சிவலிங்கங்களை வழிபட்டு சிவபெருமானை மகிழ்வித்து மீண்டும் படைக்கும் சக்தியை வரமாக பெற்றார் என்பது புராணக் கதை. பிரம்மா சிவனை வழிபட்ட தலமான திருப்பட்டூர் பிரம்மபுரீஸ்வரர் திருக்கோயிலில் மனம் மகிழ்ந்து சிவபெருமான் பிரம்மாவுக்கெனெ தனி சன்னிதியும் அமைத்து, படைக்கும் தொழிலை மீண்டும் அளித்ததுடன், கஷ்டத்துடன் வரும் பக்தர்களின் தலையெழுத்தையும் மாற்றி அமைக்குமாறும் பணித்தார். 

பிரம்மாவுக்கென்று தனி சன்னிதி மிகவும் குறைவு, அதிலும் திருச்சியிலேயே பிரம்மாவுக்கென தனி சந்நிதி இருக்கும் இரண்டு திருத்தலங்களில் இது பிரம்மாவுக்கான பெரிய சன்னிதையைக் கொண்ட சிறப்பான திருத்தலமாகும். இந்த கோவிக்கு வருபவர்கள் தங்களது தலையெழுத்து மாற்றி அமைக்கப்படும் என்ற நம்பிக்கையுடன் வருகிறார்கள். அதனால் தங்கள் ஜாதக நோட்டை எடுத்து வந்து பிரம்மாவின் முன்பு வைத்து எடுத்துச் சென்றால் பிரம்மா தலையெழுத்தை மாற்றி அமைப்பார் என்று நம்பிக்கை இருக்கிறது. 

வியாழக் கிழமை சந்தன அபிஷேகம் செய்து சந்தன காப்புடன் பிரம்மா மிகவும் அற்புதமாக காட்சியளிக்கிறார். இங்கு பிரம்மா வழிபட்ட பல்வேறு சிவலிங்கங்கள் உள்ளன. கட்டிடக்கலையைப் பொறுத்தவரை கோபுரத் திருப்பணி நடந்து கொண்டிருக்கிறது. பிரகாரத்தின் வழியாக வரும் அம்மன் சன்னதி வெளிப்புற சுவரில் மீன் சின்னம் இருப்பதால் அது பாண்டியர் திருப்பணியாக இருக்கலாம். அதேசமயம் பல சிவலிங்கங்கள் திருக்கோயில்கள் பிரம்ம தீர்த்தத்தின் அருகில் இருக்கிறது அதில் கைலாசநாதருக்கு தனி சன்னிதி உள்ளது அந்த அந்த கோவில் விமானம் பல்லவர் கால கட்டிடக் கலையைப் போன்றுள்ளது. சிவன் சந்நிதி சோழர்களும், அம்மன் சன்னதி பாண்டியர்களும் கைலாசநாதர் பல்லவர்களும் திருப்பணி செய்திருக்கக்கூடும். பிரம்மாவை வழிபட்ட பின் இங்கே பதஞ்சலி முனிவருக்காக ஒரு சன்னிதியும் தியானம் செய்வதற்காக ஒரு இடமும் உள்ளது. 

பிரம்ம தீர்த்தம், தல விருட்சமான மகிழ மரம், பல லிங்கங்களின் தனித்தனி சன்னிதி ஆகியவை உள்ள இடம் நன்முறையில் பராமரிக்கப்படுகிறது. நந்தவனம் அற்புதமாக இருக்கிறது. அந்த இடத்தில் கற்கள் அடுக்கி வைக்கிறார்கள். பல கோவில்களில் கற்கள் அடுக்கி வைத்து வேண்டிக்கொள்ளும் பழக்கம் இருக்கிறது. கற்கள் அடுக்கி வேண்டிக் கொண்டால் வீடு கட்டும் பிராப்தம் கிடைக்கும் என்ற நம்பிக்கையும் இருக்கிறது. அந்த பிரம்ம தீர்த்தம் சிறிய குளமாக இருந்த பொழுதிலும் நான்கு அற்புதமான படித்துறைகள் உள்ளன. திருச்சி பகுதியில் திருப்பட்டூர் ஒரு முக்கிய சுற்றுலா தலமாகும். வாசகர்கள் இவ்விடத்தின் வரலாற்றுத் தகவல்களை பின்னூட்டமாக இட்டால் இன்னும் சிறப்பாக இருக்கும்.

தொகுப்பு மற்றும் புகைப்படங்கள் - தமிழூர் கபிலன். 

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய... https://chat.whatsapp.com/K6yszbySvxu9S3fSVAMEnM

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision