திருச்சி மலைக்கோட்டை சித்திரை தேர்திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது

திருச்சி மலைக்கோட்டை சித்திரை தேர்திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது

திருச்சி மலைக்கோட்டை தாயுமானசுவாமி கோயிலில் சித்திரை தேர்திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது


தென்கயிலாயம் என்று பக்தர்களால் அன்போடு போற்றப்படும் திருச்சி மலைக்கோட்டை மட்டுவார் குழலம்மை உடனுறை தாயுமானவசுவாமி ஆலயத்திற்குச் சென்று வழிபட்டால் சுகபிரசவம் கிட்டும் என்பது ஐதீகம். இக்கோயிலில் ஆண்டுதோறும் சித்திரை மாதத்தில் தேர்திருவிழா வெகுவிமரிசையாக நடைபெறுவது வழக்கம். அதன்படிவருகிற மே 3ம்தேதி நடைபெறும் தேர்திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.

 முன்னதாக தாயுமானவர் சன்னதியில் உள்ள தங்ககொடிமரத்திற்கு பல்வேறு அபிஷேகம் நடைபெற்றது. பின்னர் சுவாமி அம்பாள் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருச்செய்ய, பின்னர் மேளதாளங்கள் முழங்கிட ரிஷபக்கொடியேற்றப்பட்டு மகா தீபராதனை நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

கொடியேற்றத்தை தொடர்ந்து இன்றுமுதல் கற்பகவிருட்ச வாகனம், பூதவாகனம், வெள்ளி ரிஷபம், யானை, தங்க குதிரை ஆகிய வானங்களில் நாள்தோறும் தாயுமானவர், மட்டுவார்குழலம்மை சமேதராக வலம்வருவார். 

29ம் தேதி இரத்தினாவதிக்கு சிவபெருமான் தாயுமானவராய் எழுந்தருளி மருத்துவம் செய்த செட்டிப் பெண் பிரசவ வைபவமும், 30ம் தேதி திருக்கல்யாண வைபவமும், 
தொடர்ந்து வரும் மே 3ம்தேதி திருத்தேர் வடம்பிடித்தல் நிகழ்ச்சி நடைபெறும். அப்போது அலங்கரிக்கப்பட்ட தேரில் சுவாமி, அம்பாள் எழுந்தருளி  திருத்தேரோட்டம் நடைபெறும்.

 தொடர்ந்து 9ம்தேதி பஞ்சமூர்த்திக்கு பிராயசித்த அபிஷேகம், இரவு அவரோகணம் எனப்படும் கொடியிறக்க நிகழ்ச்சியுடன் விழா நிறைவுபெறுகிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை அறநிலையத்துறை மற்றும் கோயில் ஊழியர்களும் மேற்கொண்டு வருகின்றனர்.