பொங்கல் பரிசுத் தொகுப்பு - புகார் தெரிவிக்கலாம் - மாவட்ட ஆட்சியர் தகவல்

பொங்கல் பரிசுத் தொகுப்பு - புகார் தெரிவிக்கலாம் - மாவட்ட ஆட்சியர் தகவல்

2024-ம் ஆண்டு தமிழர் திருநாளாம் தைப்பொங்கல் திருநாளை சிறப்பாக கொண்டாடும் விதமாக, பொது விநியோகத்திட்டத்தின் கீழ் திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் உள்ள தகுதியுள்ள அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கும் இலங்கைத்தமிழர் மறுவாழ்வு முகாமில் வசிக்கும் குடும்பங்களுக்கும் பொங்கல் பரிசாக தலா 1 கிலோ பச்சரிசி, 1 கிலோ சர்க்கரையுடன் முழுக் கரும்பு மற்றும் ரூ.1000/- ரொக்கத் தொகை அடங்கிய பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்க தமிழ்நாடு அரசு ஆணையிட்டுள்ளது. 

பொங்கல் பரிசுத் தொகுப்பினை சிரமமின்றி தகுதியுள்ள குடும்ப அட்டைதாரர்கள் பெற ஏதுவாக ஒவ்வொரு நியாயவிலைக் கடைகளிலும், பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்படும் நாள் மற்றும் நேரம் குறிப்பிடப்பட்டு முன்னதாக இல்லங்களுக்கு சென்று டோக்கன் வழங்கப்படும். (07.01.2024) முதல் (09.01.2024) வரை டோக்கன் விநியோகம் செய்யப்படும் (10.01.2024) முதல் (14.01.2024) வரையில் எல்லா நாட்களிலும் சுழற்சி முறையில் பொங்கல் பரிசுத் தொகுப்பு நியாய விலைக் கடைகளில் விநியோகம் செய்யப்படும். நடைமுறையிலுள்ள 6,97,837 அரிசி குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் வசிக்கும் 891 குடும்பங்கள் ஆக மொத்தம் 6,98,728 குடும்பங்களுக்கு 1280 நியாயவிலைக் கடைகள் மூலம் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்படும்.

குடும்ப அட்டையில் இடம்பெற்றுள்ள உறுப்பினர்கள் எவரேனும் ஒருவர் வந்தாலும் பொங்கல் பரிசுத்தொகுப்பு வழங்கப்படும். பொங்கல் பரிசுத் தொகுப்பினை ஒன்றிய, மாநில அரசு ஊழியர்கள், வருமான வரி செலுத்துவோர், பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரிவோர், சர்க்கரை அட்டைதாரர்கள், பொருளில்லா அட்டைதாரர்கள் தவிர்த்து ஏனைய அரிசி குடும்ப அட்டைதாரர்கள் அனைவருக்கும் வழங்கப்படும். பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும் பணி குறித்த புகார்கள் ஏதும் இருப்பின் அதனை சம்பந்தப்பட்ட உணவுப்பொருள் வழங்கல் தனி வட்டாட்சியர்கள் / வட்ட வழங்கல் அலுவலர்களிடம் தெரிவிக்கலாம். 

மேலும், மாவட்ட அளவில் மாவட்ட வழங்கல் அலுவலக கட்டுப்பாட்டு அறை தொலைபேசி எண் 0431-2411474, அலைபேசி எண். 9445045618-ல் தொடர்பு கொண்டு புகாரினை தெரிவிக்கலாம். மாநில அளவில் கட்டணமில்லா தொலைபேசி எண்கள் 1967 மற்றும் 1800---425---5901 ஆகிய எண்களிலும் மற்றும் ஆணையாளர், உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை, சென்னை அலுவலக கட்டுப்பாட்டு அறை எண் - 044-28592828 என்ற தொலைபேசி எண்ணிலும் புகார்களை தெரிவிக்கலாம் என திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆட்சித்தலைவர் மா.பிரதீப்குமார், தெரிவித்துள்ளார்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய...

https://chat.whatsapp.com/JErJ2bWDTM5D4mAdBc3nOO

#டெலிகிராம் மூலமும் அறிய....

https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision