விவசாய சங்க மாநில செயலாளர் வெட்டிக் கொலை

விவசாய சங்க மாநில செயலாளர் வெட்டிக் கொலை

திருச்சி மாவட்டம், சிறுகனூர் அருகே உள்ள எம்.ஆர்.பாளையம் பகுதியை சேர்ந்தவர் சண்முகசுந்தரம் (60), தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநில செயலாளரான இவரது முதல் மனைவி இறந்ததும் வளர்மதி என்பவரை இரண்டாவதாக திருமணம் செய்து வசித்து வந்தார்.

இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு கணவன் மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக வளர்மதி லால்குடி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் சண்முகசுந்தரம் மீது நடவடிக்கை எடுக்க கோரி புகார் அளித்திருந்தார். மேலும் சண்முக சுந்தரத்தை வளர்மதி பிரிந்து இருக்கிறார்.

இந்த சூழலில் சண்முகசுந்தரத்திற்கு அவரது அக்கா மகன் ஆனந்த் என்பவர் இன்று காலை உணவு கொடுக்க வந்தபோது வீட்டில் இருந்த மாட்டு கொட்டகையில் சண்முகசுந்தரம் ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்தார். அதிர்ச்சி அடைந்த ஆனந்த் இதுகுறித்து சிறுகனூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த லால்குடி டிஎஸ்பி அஜய் தங்கம் தலைமையிலான போலீசார் சண்முகசுந்தரம் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தினர்.

முதல்கட்ட விசாரணையில் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தபோது நள்ளிரவில் வந்த மர்ம நபர்கள் யாரோ சண்முகசுந்தரத்தை வெளியே வரவழைத்து அரிவாள் மற்றும் கத்தி உள்ளிட்ட ஆயுதங்களால் தாக்கி கொலை செய்துவிட்டு தப்பிச் சென்றது தெரியவந்தது. தொடர்ந்து சம்பவ இடத்திற்கு கை ரேகை நிபுணர்கள் வரைவழங்கப்பட்டு சம்பவம் இடத்தில் மர்ம நபர்கள் விட்டு சென்ற தடயங்கள் கைப்பற்றி கை ரேகைகளை பதிவு செய்தனர். மோப்ப நாய் சம்பவ இடத்தில் மோப்பமிட்டு வீட்டை சுற்றியுள்ள வயல்வெளிகளில் சுற்றிவந்து யாரையும் கவ்வி பிடிக்கவில்லை.

இந்த கொலை சம்பவம் குறித்து சிறுகனூர் போலீசார் வழக்கு பதிவு செய்து கொலை சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம நபர்கள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். கடந்த சில மாதங்களுக்கு முன்பு திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலக விவசாயிகள் குறைதீர்ப்பு கூட்டத்தில் விவசாய சங்க மாநில செயலாளர் சண்முகசுந்தரத்திற்கும் தமிழக ஏரி பாசன விவசாய சங்க மாநில தலைவர் பூவை விசுவநாதன், என்பவருக்கும் கடுமையான மோதல் ஏற்பட்டு இருவரும் திருச்சி கண்டோன்மெண்ட் காவல் நிலையத்தில் புகார் அளித்தது சம்பவம் குறித்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.