ஸ்ரீரங்கத்தில் 1 மணி 40 நிமிடம் பிரதமர் மோடி தரிசனம் - மலர் தூவி கர கோஷம் எழுப்பி வரவேற்பு

ஸ்ரீரங்கத்தில் 1 மணி 40 நிமிடம் பிரதமர் மோடி தரிசனம் -  மலர் தூவி கர கோஷம் எழுப்பி  வரவேற்பு

ஜனவரி 22ம் தேதி அயோத்தியில் நடைபெறும் ராமர் கோவில் கும்பாபிஷேகத்தில் பங்கேற்பதற்கு முன் பிரதமர் மோடி இன்று ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் சுவாமி தரிசனம் செய்தார்.

அதற்காக சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் காலை 10.10 மணிக்கு திருச்சி வந்தார். 

திருச்சி விமான நிலையத்தில் இருந்து, 10:30 மணிக்கு ஸ்ரீரங்கம் கொள்ளிட ஆற்று கரையோர பஞ்சக்கரையிலுள்ள ஹெலிபேடு தளத்திற்க்கு ஹெலிகாப்டரில் சென்றார். அங்கிருந்து, 11:00 மணிக்கு ஸ்ரீரங்கம் கோவிலுக்கு குண்டு துளைக்காத காரில் சென்ற பிரதமர், வழி நெடுகிலும் நின்ற பொதுமக்களை பார்த்து காரில் நின்றபடி கையசைத்தபடி வந்தார்.

  மலர்களை பொதுமக்களும், பாரதிய ஜனதா கட்சி தொண்டர்களும் அவர் மீது தூவி வரவேற்றார்கள்.

கோவிலில் பிரதமருக்கு, தலைமை அர்ச்சகர் சுந்தர் பட்டர், ஹரிஸ் பட்டர் ஆகியோர் பூரண கும்பம் மரியாதை வழங்கி வரவேற்றனர். கோவில் யானை ஆண்டாளிடம் ஆசி பெற்ற பிரதமர் மோடி, தாயார், ரங்கநாதர் சன்னதிகளில் சுவாமி தரிசனம் செய்தார். 

  தொடர்ந்து, மற்ற சன்னதிகளுக்கும் சென்று சுவாமி தரிசனம் செய்த பின், கோவிலில் தாயார் சன்னதி எதிரே கம்பர் மண்டபத்தில் கம்பராமாயணம் பராயணம் நிகழ்ச்சியில் பங்கேற்றார். 

பகல் 12:50 மணிக்கு ஸ்ரீரங்கம் கோவிலில் இருந்து புறப்பட்ட பிரதமர் காரில் ஹெலிபேட் சென்று, பகல் 1.15 மணிக்கு ஹெலிகாப்டரில் ராமேஸ்வரம் புறப்பட்டுச் சென்றார்.

பிரதமர் வருகைக்காக, கோவிலில் மலர் பந்தல் அமைத்து, அனைத்து சன்னதிகளும் வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு இருந்தன. சன்னதிகளுக்கு செல்லும் நடைகளில் சிவப்பு கம்பளம் விரிக்கப்பட்டு இருந்தது. 

முன்னதாக ரங்கா ரங்கா கோபுரம் முன், 30க்கும் மேற்பட்ட இசைக்கலைஞர்கள் தவில் மற்றும் நாதஸ்வரம் இசைத்து வரவேற்பு அளித்தனர். தெற்கு கோபுர வாசலில் நின்று கேட்டு ரசித்தார்.

பிரதமர் வருகையை முன்னிட்டு, பாதுகாப்பு காரணங்களுக்காக, கோவில் வளாகம் மட்டுமின்றி, கோவிலை சுற்றி உள்ள கடைகளும் அடைக்கப்பட்டுள்ளன. திருச்சியில் ட்ரோன் பறக்க 3 நாட்களுக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது. 

இது தவிர, நேற்று மாலை 6 மணி முதல் இன்று பிற்பகல் 2.30 மணி வரை, ஸ்ரீரங்கம் ரெங்கம் ரெங்கநாதர் கோவிலில் பொது தரிசனமும் ரத்து செய்யப்பட்டிருந்தது.

பிரதமர் மோடி ஸ்ரீரங்கம் கோவிலுக்கு வருவதை முன்னிட்டு, இன்று அதிகாலை 5 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலை மற்றும் புதுக்கோட்டை சாலை தஞ்சாவூர் சாலையில் இருந்து வரும் வாகனங்கள், மாற்று வழியில் திருப்பி விடப்பட்டன.

திருச்சியில் விமான நிலையம், டிவிஎஸ் டோல்கேட், திருவானைக்காவல், கல்லுக்குழி, ஸ்ரீரங்கம் உட்பட 12 இடங்களில் உள்ள டாஸ்மாக் கடைகள் அடைக்கப்பட்டுள்ளன.