ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்துவதற்கான விண்ணப்பங்கள் சமர்பிக்க வேண்டும் - மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்துவதற்கான விண்ணப்பங்கள் சமர்பிக்க வேண்டும் - மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் வருகின்ற 2022-ஆம் ஆண்டிற்கான ஜல்லிக்கட்டுப் போட்டிகள் நடத்துவதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. கடைசி நேர அவசரம் தவிர்க்கும் பொருட்டும். அரசிதழ்களில் அறிவிப்புகள் வெளியிடும் பொருட்டும் எதிர்வரும் 2022-ஆம் ஆண்டிற்கான ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்துவதற்கான விண்ணப்பங்களை நவம்பர் 2021 மாதத்திற்கு முன்னதாக பெற்றிட வேண்டுமென அரசால் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்த உள்ளவர்கள் வருகிற நவம்பர் 2021 மாதத்திற்கு முன்னதாக தங்கள் விண்ணப்பங்களை அளித்திட கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். மேலும் சென்னை உயர்நீதிமன்ற நீதிப்பேராணை W.P.No.2999/2020 வழக்கின் 19.08.2021-ம் தேதியிட்ட தீர்ப்பின் அடிப்படையில் அரசால் பின்வரும் அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன.

ஜல்லிக்கட்டு நிகழ்ச்சிகளில் நாட்டு மாடுகளை மட்டுமே பங்கேற்க அனுமதிக்க வேண்டும். இறக்குமதி செய்யப்பட்ட, கலப்பின, இனக் கலப்பு (Imported/ Hybrid/ Cross Bulls) காளைகள் ஜல்லிக்கட்டு போட்டிகளில் கலந்து கொள்ள தடை விதிக்கப்பட்டுள்ளது. தகுதியான கால்நடை மருத்துவரிடம் தங்கள் காளை மாடுகள் நாட்டு மாடுகள் என்றும், இறக்குமதி செய்யப்பட்ட, கலப்பின, இனக்கலப்பு காளைகள் இல்லையென்பதற்கும் உரிய சான்றிதழ் பெற்று உரிமையாளர்கள் போட்டிகளில் பங்கேற்க அளிக்கும் விண்ணப்பத்துடன் இணைத்து விண்ணப்பிக்க வேண்டும் எனவும் நீதிமன்ற ஆணையின் உத்தரவுகளை பின்பற்ற அரசால் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேற்குறித்த அறிவுரைகளுடன் கொரோனா நோய்த்தொற்று பரவலைத் தடுத்திட அரசால் தெரிவிக்கப்படும் வழிகாட்டு நெறிமுறைகளைத் தவறாது கடைபிடிக்க உறுதிமொழிகளுடன் போட்டி நடத்த உள்ளவர்கள் தங்கள் விண்ணப்பங்களை 26.10.2021ஆம் தேதிக்குள் அளித்திட வேண்டுமென மாவட்ட ஆட்சியர் சு.சிவராசு, தெரிவித்துள்ளார்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய....
https://chat.whatsapp.com/F2UyA1Y1JhlIdUVAiKp85h

டெலிகிராம் மூலமும் அறிய...
https://t.me/trichyvisionn