காலாவதியான சுங்கச்சாவடிகளை அகற்றாவிடில் லாரிகளை நிறுத்தி போராட்டம் அறிவிப்பு

காலாவதியான சுங்கச்சாவடிகளை அகற்றாவிடில் லாரிகளை நிறுத்தி போராட்டம் அறிவிப்பு

திருச்சி தஞ்சை தேசிய நெடுஞ்சாலை துவாக்குடியில் உள்ள சுங்கச்சாவடி முன்பு மாநில லாரி உரிமையாளர் சங்க கிழக்கு மண்டலம் (டெல்டா) சார்பில் சுங்க கட்டண உயர்வை கண்டித்து சங்கசாவடியை மறித்து விளம்பர பதாகைகள் ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டதால் பரப்பரப்பு ஏற்பட்டது. மத்திய அரசு தேசிய நெடுஞ்சாலைகள் செல்லும் வாகனங்களுக்கு வசூலிக்கும் சுங்க கட்டணத்தை இன்று முதல் அதிரடியாக உயர்த்தி உள்ளது.

இதற்கு பல்வேறு அரசியல் கட்சிகளும், லாரி உரிமையாளர்கள் சங்கம், சமூக ஆர்வலர்கள் என பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.ஜசுங்க கட்டணம் உயர்வால் அத்தியாவசிய பொருள்களின் விலை உயரும்இதனால் அப்பாவி பொதுமக்கள் பெரிது பாதிக்கப்படும் சூழ்நிலை உருவாகியுள்ளது. எனவே ஒன்றிய அரசின் சுங்க கட்டண உயர்வை கண்டித்து மாநில லாரி உரிமையாளர்கள் சங்கம் சார்பில் தமிழகம் முழுவதும் தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்கச்சாவடிகள் முன்பு இன்று ஆர்ப்பாட்டம் நடைபெறும் என மாநில லாரி உரிமையாளர் சங்கம் அறிவித்துள்ளது.

அதன் ஒரு பகுதியாக திருவெறும்பூர் அருகே துவாக்குடியில் உள்ள சுங்கச்சாவடி முன்பு மாநில லாரி உரிமையாளர் சங்கத்தின் கிழக்கு மண்டலம் (டெல்டா) சார்பில் தஞ்சை - திருச்சி தேசிய நெடுஞ்சாலை வாகனங்களை மறித்து ஆர்ப்பாட்டம் நடந்தது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாநில இணை செயலாளர் ஆறுமுகம் தலைமை வைத்தார். இந்த ஆர்ப்பாட்டத்தில் மன்னார்குடி, ஒரத்தநாடு, பட்டுக்கோட்டை, திருவாரூர், மயிலாடுதுறை, கும்பகோணம் பகுதிகளை சேர்ந்த லாரி உரிமையாளர் சங்க பிரதிநிதிகள் கலந்து கொண்டு சுங்க கட்டண உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து பதாகைகள் ஏந்தியும் கோஷம் இட்டும் தஞ்சையில் இருந்து திருச்சி செல்லும் வழியை மறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

இச்சம்பவம் குறித்து துவாக்குடி போலீசாருக்கு தகவல் கிடைத்ததும் சம்பவ இடத்திற்கு துவாக்குடி இன்ஸ்பெக்டர் ஈஸ்வரன் தலைமையிலான போலீசார் விரைந்து வந்ததோடு போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் சாலையை மறித்து போராட்டத்தில் ஈடுபடக்கூடாது ஆர்ப்பாட்டம் செய்வது என்றால் ஒரு இடத்தில் நின்று ஒதுங்கி ஆர்ப்பாட்டம் செய்யுங்கள் என்று கூறியதை தொடர்ந்து தஞ்சையில் இருந்து திருச்சி செல்லும் இரண்டு பாதையை அடைத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

திருச்சி மாவட்டத்தில் நான்கு சுங்கச்சாவடிகள் உள்ளது.திருச்சி மதுரை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள பூதக்குடி சுங்கச்சாவடி நள்ளிரவு முதல்(01.04.2022) இலகு ரக மற்றும் கனரக வாகனங்களுக்கு ஐந்து ரூபாயில் இருந்து 1080 வரை கட்டணம் உயர்ந்துள்ளது. திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சமயபுரம் அருகே சுங்கச்சாவடி ஒன்று உள்ளது. அதை போல் திருச்சி தஞ்சை தேசிய நெடுஞ்சாலையில் துவாக்குடி அருகே ஒரு சுங்கச்சாவடி உள்ளது.சுங்க கட்டணத்தை தொடர்ந்து உயர்த்திவரும் மத்திய அரசை கண்டித்து மாநில லாரி உரிமையாளர்கள் சம்மேளனம் சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள சமயபுரம் சுங்க சாவடிக்கு முன்னதாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. காலாவதியான சுங்கச்சாவடிகளை அகற்றிட வேண்டும். சுங்க கட்டணத்தை குறைத்து லாரி தொழிலை காப்பாற்ற வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி லாரி உரிமையாளர்கள் கோஷங்கள் எழுப்பியவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய.... https://chat.whatsapp.com/CVEI9HGZeZI6ualvRGNLGP

#டெலிகிராம் மூலமும் அறிய....  https://t.me/trichyvisionn